இந்தியாவில் எரிபொருள் உற்பத்தி: பேசுவது ஒன்று, செய்வது வேறொன்று

04/01/2021
IiT English Page

பருவநிலை மாற்றம் நாடுகளையும் பிரதேசங்களையும் சமூகங்களையும் தாறுமாறாகப் பாதிக்கிறது. ஏற்கனவே சமூக-பொருளாதார ரீதியில் பலவீனமாக உள்ள இடங்களும் மக்களும் உலகில் அதிகரித்துவரும் உஷ்ணத்தின் தீய விளைவுகளை அனுபவித்துவருகிறார்கள். இந்தியாவில் 75 சதவீத மாவட்டங்களில் அதீதமான பருவநிலைசார் நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று காட்டுகிறது. பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் செயல்பாட்டினைப் பாக்கும்போது பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு இந்தியாவுக்கு இருப்பது தெரிகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் தனக்குத் தேவையான 40 விழுக்காடு மின்சாரத்தை புதைபடிவம் சாரா எரிபொருள் மூலங்களிலிருந்து உற்பத்தி செய்துகொள்வதாக 2015ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றத்துக்கான ஐநா கருத்தரங்கில் இந்திய அரசு உறுதியளித்தது. ஆனால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள், புதைபடிவ எரிபொருள்களிலிருந்து மாற்று எரிபொருளுக்கு மாறுவது ஆகியவை குறித்துப் பேசப்பட்டாலும் இந்தியாவில் நிலக்கரிப் பயன்பாடு அதிகரித்தபடி உள்ளது. புதைபடிவ எரிபொருள்களிலிருந்து விலகி வருவதற்குப் பதிலாக அவற்றுடனான தொடர்பை மேலும் ஆழமாக்கும் செயல்முறையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

2023-24ஆம் ஆண்டில் 100 கோடி டன் நிலக்கரியை இந்தியா வெட்டி எடுக்கவிருக்கிறது. 41 நிலக்கரி மையங்களில் தனியார் நிறுவனங்கள் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான ஏல நடைமுறைகள் தொடங்கிவிட்டன. பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த பகுதிகளும் உள்ளூர்ச் சமூகத்தினர் வசிக்கும் வனப்பகுதிகளும் இவற்றில் அடக்கம். இத்துடன், மேலும் 55 இடங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான திட்டங்களும் உள்ளன. தற்போதுள்ள சுரங்கங்களில் குறைந்தது 193 சுரங்கங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது. 2017இல் நிலக்கரி உற்பத்தியிலும் இறக்குமதியிலும் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருந்தது.

நிலக்கரி வளர்ச்சிக்காகத் தேவை என்று வாதிடப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காகத் தொழிலகங்கள், சேவைகளை விரிவாக்குதல்; எரிபொருள்களை அதிகம் பெற இயலாத நிலையில் உள்ள ஏழை மக்கள் மின்சாரம், சுத்தமான சமையல் எரிவாயு ஆகியவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பது ஆகியவை இதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இந்தியாவில் மின்சார நுகர்வில் பொதுமக்களோடு ஒப்பிடுகையில் தொழில்துறைதான் வேகமாக வளர்ந்துவருகிறது. தற்போது தொழில்துறை நுகர்வு 49 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. வீடுகளுக்கான மின் நுகர்வு 25 விழுக்காடு மட்டுமே உயர்ந்திருக்கிறது (மின் நுகர்வில் வீடுகளிடையே பெரும் வேறுபாடுகள் நிலவுகின்றன).

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 41 மையங்களில் நிலக்கரிச் சுரங்கங்களுக்கான ஏலம் நடத்தப்பட்டதற்குப் பின்னால் இந்தக் காரணங்கள் இருந்தன. 2.8 லட்சம் வேலை வாய்ப்புகள், ரூ. 20,000 கோடி வருவாய் ஆகியவை இதன் நன்மைகளாகப் பட்டியலிடப்பட்டன. இந்தத் தகவல்களுக்கான ஆதாரங்கள் என்ன என்று கேட்டு எழுத்தாளரும் எரிபொருள் ஆற்றல் துறை ஆய்வாளருமான சந்தீப் பய் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார். அப்படி எதுவும் இல்லை என்று முதலில் பதில் வந்தது. மீண்டும் கேள்வி எழுப்பியபோது அதிகாரபூர்வமான பதில் வரவில்லை. ட்விட்டர் மூலமாகச் சில தகவல்கள் அனுப்பப்பட்டன. நிலக்கரிச் சுரங்கத்தின் நன்மைகள் குறித்த உரிமைகோரல்கள் திட்டவட்டமான முறைமை ஏதும் இன்றி முன்வைக்கப்பட்டதை இது காட்டுகிறது. இந்த உரிமைகோரல்களை எளிதாகக் கேள்விக்கு உட்படுத்தலாம்.

நிலக்கரியின் சமூக, சூழலியல் தாக்கம்
அதே சமயம், நிலக்கரி உற்பத்தி - வினியோகச் சங்கிலியால் சமூக அளவிலும் சூழலியல் சார்ந்தும் ஏற்படக்கூடிய பெருமளவிலான பாதிப்புகள் கேள்விக்கு அப்பாற்பட்டவை. நிலக்கரியைத் தோண்டி எடுப்பதிலிருந்து, பிற இடங்களுக்கு அனுப்புதல், எரித்தல்வரையிலுமான செயல்முறைகள் பல விதங்களிலும் பிரச்சினைக்குரியவை. இந்தியாவில் வறுமையின் சமூக – சூழலியல் சவால்கள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை (பொருளாதாரம், ஆற்றல் ஆகிய இரண்டு விதங்களிலும்). இந்தச் சவால்களுக்கான பதில் நிலக்கரி உற்பத்தி-வினியோகச் சங்கிலியில் இல்லை. வேலையின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு, பருவநிலை நெருக்கடி ஆகியவற்றையும் இது தீர்ப்பதில்லை.

ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரிவதற்காக உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி சுற்றுச்சூழலுக்குத் தீங்கு இழைக்கிறது. வாழ்விடங்களிலிருந்து மக்களை வெளியேற்றுதல், வாழ்வாதாரங்களைக் கையகப்படுத்துதல், நீர், காற்று மாசுபாடு ஆகிய விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. நிலக்கரி உற்பத்தி மையங்களுக்கு அருகில் இருப்பவர்களில் ஆண்டுக்கு 80,000 முதல் 115,000 பேர்வரை உரிய காலத்துக்கு முன்பே மரணம் அடைகிறார்கள். நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரிபவர்களும் சுரங்கங்களின் அருகில் வசிப்பவர்களும் பல விதமான நோய்களுக்கு உள்ளாகிறார்கள். நிமோனியா அவற்றில் முக்கியமானது. நிலக்கரிப் புகையை உட்கொள்வதாலும் மாசுபட்ட நீரைக் குடிப்பதாலும் இது ஏற்படுகிறது.

இவற்றின் விளைவாக, நிலக்கரி உற்பத்தி பெருமளவில் எதிர்ப்புக்கு உள்ளாகிறது. நாடு முழுவதும் இதற்கு எதிரான போராட்டங்கள் நடக்கின்றன. இந்தப் போராட்டங்கள் இந்தியாவில் சுற்றுச்சூழல் நீதிக்கான பரந்துபட்ட இயக்கத்தின் ஒரு பகுதி. மக்கள் நலனுக்கும் பூமியின் நலனுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்துப் போதிய கவனம் செலுத்தாமல் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம் முன்னெடுக்கப்படும் சூழலில் சமூக-சூழலியல் நலனை முன்னிறுத்தும் இயக்கம் இது

நிலக்கரி உற்பத்திக்கு எதிரான இந்தப் போராட்டங்கள் பலவும் பல பதிற்றாண்டுகளாக நடக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஹஸாரிபாக் மாவட்டத்தில் இத்தகையதொரு போராட்டம் 2004இலிருந்து நடக்கிறது. இங்கே நிலக்கரிச் சுரங்கத்தால் பல்லுயிர் வளம் கொண்ட காடுகளுக்கும் வேளாண் நிலங்களுக்கும் மட்டுமின்றி இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புராதனமான பெருங்கற்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்தப் போராட்டம் நடக்கிறது. சுரங்கப் பணிகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து உள்ளூர் கிராமவாசிகள் – இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதிவாசிகள் – ஒருங்கிணைந்து போராடுகிறார்கள். 2004 முதல் செயல்பட்டுவரும் கரன்புராவைப் பாதுகாப்பதற்கான போராட்டக் குழு இந்தியாவின் மாபெரும் நிலக்கரி உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி. லிமிடடுக்கு எதிராக நின்று வேளாண் நிலங்களைக் காப்பாற்றிவருகிறது. பல்வேறு பேரணிகளையும் எதிர்ப்புப் போராட்டங்களையும் அது நடத்திவருகிறது. என்றாலும், இந்தப் போராட்டங்களுக்கிடையே பெரும் பாதுகாப்புடன் 2016, மே 17 அன்று இந்தப் பகுதியில் சுரங்கப் பணிகள் தொடங்கின. கோவாவை நிலக்கரி உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சிக்கு எதிரான போராட்டங்கள் அண்மையில் நடக்கின்றன. இவற்றுக்கு ஊடக கவனமும் அதிக அளவில் கிடைக்கிறது. அசாம் மாநிலத்தில் உள்ள தேஹிங் பத்காய் வன விலங்கு சரணாலயத்தில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட இயக்கம் கோவிட்-19 நெருக்கடிக்கு மத்தியிலும் இணையம் வழியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நிலக்கரி உற்பத்தியைக் கைவிடல்  
இந்தியா பருவநிலை சார்ந்த இலக்குகளுக்கு நேர்மையாக நடந்துகொண்டு பருவநிலை மாறுதல்களின் தீவிரமான விளைவுகளைத் தணிக்க வேண்டுமென்றால் நிலக்கரி உற்பத்தியைப் படிப்படியாகக் கைவிடுவது அவசரத் தேவை. அத்தகைய நடவடிக்கைக்கு இந்திய அரசின் நடப்புத் திட்டங்களில் தற்போது இல்லாத இரண்டு அம்சங்கள் தேவைப்படும்.

முதலாவதாக, பொருளாதார ரீதியாகப் பலனுள்ளதாக இருந்தாலும் நிலக்கரியைத் தோண்டி எடுக்கும் வேலையை இந்தியா நிறுத்த வேண்டும். இரண்டாவதாக, புதைபடிவ எரிபொருள்கள், அணு ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தன்னுடைய எரிபொருள் ஆற்றல் உற்பத்தி அமைப்பைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக மக்கள், அரசு, வணிகத் துறை ஆகியவை கூட்டாக இணைந்து செயலாற்ற வேண்டும். அது மட்டுமின்றி, எரிபொருள் ஆற்றலை வழங்குவதற்கு, முதலீட்டைப் பெருமளவு சார்ந்த, மையப்படுத்தப்பட்ட அமைப்பைக் கைவிட்டு, உள்ளூரில் கட்டுப்படுத்தக்கூடிய அமைப்புக்கு மாற வேண்டும்.

நிலக்கரியால் பருவநிலை நெருக்கடிக்கு ஏற்பட்டுவரும் விளைவையும் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவையும் பார்க்கும்போது இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி விரிவாக்கம் கவலை தருகிறது. மனிதர்களின் வாழ்வாதாரம், மனித உயிர்கள் ஆகியவற்றுக்கு இதனால் ஏற்படும் அச்சுறுத்தல் மிகவும் கடுமையானது. இதனால்தான் உள்ளூர் மக்கள் இதைத் தீவிரமாக எதிர்க்கிறார்கள். ஆனால், உள்ளூர் மக்களின் விருப்பங்களைப் புறக்கணித்துவிட்டு அதிகாரம் படைத்த குழுவினரின் நலன்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இது வலுக்கட்டாயமாகவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சூழலில் வெப்பம் உயர்ந்துவருகிறது. உஷ்ண அலைகளும் காற்று மாசுபாடும் இந்தியக் குடிமக்களை வாட்டிவருகின்றன. இயற்கையைப் பாதிக்காத வகையில் எரிபொருளை உற்பத்தி செய்யும் வழிகளுக்கு மாறும் வல்லமை இந்தியாவுக்கு இருக்கிறது. புதைபடிவ எரிபொருள்கள் இயற்கை வளத்துக்குத் தீங்கானது மட்டுமல்ல, அநீதியானதும்கூட.

பிரோடோட்டி ராய்

Author

புரோடோட்டி ராய் பார்சிலோனா பல்கலைக்கழகத்தின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்விரோன்மென்டல் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியில் உள்ள EnvJustice (www.envjustice.org) அணியின் உறுப்பினர். இந்தியாவில் நிலக்கரிக்கு எதிரான சுற்றுச்சூழல் நீதிக்கான இயக்கங்கள் என்பது இவருடைய முனைவர் பட்ட ஆய்வுக்கான பொருள். சூழலியல் பொருளாதாரம், அரசியல் சூழலியல் ஆகிய சட்டகங்களை இவர் தன் ஆய்வில் பயன்படுத்துகிறார். இந்தியன் சொசைட்டி ஃபார் எகலாஜிகல் எகனாமிக்ஸ் அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினர். 

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்