"சர்வதேச ஒழுங்கு" என்பது சர்வதேச அரசியலின் பேரியல் கட்டமைப்பைத் தங்களுக்குச் சாதகமாக வடிவமைத்துக்கொள்ள முயலும் வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கையைப் புரிந்துகொள்வதற்குப் பயனுள்ள கருத்து. சமீபத்திய ஆண்டுகளில், இந்திய அரசு தனது விருப்பத்தின் அடிப்படையில் சர்வதேச ஏற்பாட்டுக்கு விளக்கமளிக்க "விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு" (Rules-based International order - RIO) என்ற கருத்தைப் பயன்படுத்தியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2018இல் சிங்கப்பூரில் நடந்த ஷங்ரி-லா பேச்சுவார்த்தையின்போது ஆற்றிய முக்கியமான உரையில் இந்தியா RIOயைக் கடைப்பிடிப்பதில் உறுதிபூண்டுள்ளது என அறிவித்தார். இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைத் தலைமை அவ்வப்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடனான சந்திப்புகளின்போது. இந்தச் சொல்லுக்கு இந்திய அரசு தரும் பொருள் என்ன? விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கை நடைமுறைப்படுத்து அது என்ன செய்துகொண்டிருக்கிறது?
"விஸ்வகுரு" (உலகின் குரு), "விஸ்வபந்து" (உலகின் உறவினர்), "வசுதைவ குடும்பம்" (உலகம் ஒரு குடும்பம்) போன்ற உன்னதமான, தெளிவற்ற கருத்துகள் நிறைந்த வெளியுறவுக் கொள்கையின் சொல்லாடலில் RIO என்னும் கருத்து சாதாரணமானதாக ஒலிப்பதுடன் துல்லியமான வாக்குறுதியையும் அளிக்கிறது.
இந்திய அரசு இந்தக் கருத்தை இரண்டு தளங்களில் பயன்படுத்துகிறது. ஒன்று உலகளாவிய தளம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக அளவில் நிறுவப்பட்ட சர்வதேச ஒழுங்கைப் போலவே RIO தோற்றமளிக்கிறது. அனைத்து நாடுகளின் இறையாண்மை, நிலப்பரப்பு சார்ந்த ஒருமை, சமத்துவம் ஆகியவற்றில் அரசுகளின் நம்பிக்கையை RIO உள்ளடக்கியிருக்க வேண்டும் என்ற இந்தியாவின் நம்பிக்கையை ஷங்ரி-லா உரையில் நரேந்திர மோடி வெளிப்படுத்தியது கவனிக்கத்தக்கது. "ஒருசிலரின் அதிகாரத்தின் அடிப்படையில் அல்லாமல், அனைவரின் சம்மதத்தின் அடிப்படையில்" அமைந்த விதிககளையும் விதிமுறைகளையும் இது கொண்டிருக்க வேண்டும் என்றார் அவர். RIO "பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும், வலிமையைச் சார்ந்ததாக இருக்கக் கூடாது" என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் ‘தி இந்தியா வே’ (The India Way) என்ற நூல், RIOவின் இந்தக் கூறுகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. பலரையும் உள்ளடக்கிய பலதரப்புகள் கொண்ட அமைப்பு, புவிசார் அரசியல் போட்டிகளுக்கு அமைதி வழியில் தீர்வு, நீடித்து நிலைக்கும் தன்மையை அடைவதற்கான உலகளாவிய உந்துதல் ஆகியவற்றின் கீழ் இந்த உலகளாவிய ஒழுங்கைச் சீர்திருத்த இந்தியா முயல்கிறது.
1945இல் நிலவிய சர்வதேச ஒழுங்குக்கும் இந்தியா முன்வைக்கும் RIO அம்சங்களுக்குமிடையே ஒற்றுமைகள் உள்ளன. அது மட்டுமல்ல; சிந்தனை அளவிலும் இராஜதந்திர மட்டத்திலும் நேரு காலத்துடனான தொடர்ச்சியையும் RIO கொண்டிருக்கிறது. 1954இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய-சீன இருதரப்பு ஒப்பந்தத்தில் இடம்பெற்ற பஞ்சசீலக் கொள்கைகளின் பிரதிபலிப்பை RIOவில் காணலாம். சீனா அண்மைக் காலத்தில் பஞ்சசீலக் கொள்கைகளைச் சர்வதேச அரங்கில் முன்னிறுத்திவருகிறது. சர்வதேச விவகாரங்களில் மேற்கு நாடுகளின் அணுகுமுறையை ஆக்கிரமிப்பாகவும் பிற நாடுகளின் உள்விவகாரங்களிலான தலையீடாகவும் கருதும் சீனா, இதற்கு மாற்றாகப் பஞ்சசீலக் கோட்பாடுகளை முன்வைக்கிறது. இதனுடன் முரண்படும் வகையில், இந்தியாவுடனான எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள், இறையாண்மை, நிலப்பரப்பு சார்ந்த ஒருமை ஆகியவற்றின் மீது பரஸ்பர மரியாதை கொண்டிருப்பது, பரஸ்பரம் ஆக்கிரமிப்பு செலுத்தாமல் இருப்பது ஆகிய பஞ்சசீலக் கொள்கைகளை மீறியதாக உள்ளன.
"விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு" என்னும் கருத்தைப் பிராந்தியத் தளத்திலும் இந்தியா பயன்படுத்துகிறது. RIO தொடர்பான சிந்தனையில் இந்தியா ஒப்பீட்டளவில் புதிய அம்சமான இந்தோ-பசிபிக் என்பதையும் உள்ளடக்கியிருக்கிறது. எந்த நாட்டின் அரசுக்கும் சொந்தமில்லாத உலகின் பொதுப் பிரதேசங்கள், நீடித்து நிலைக்கும் தன்மை, புவிசார் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு இருக்கும் முக்கியத்துவத்தின் காரணமாக, இந்தப் பிராந்தியம் உலகின் மூலோபாயப் புவியியல்களில் தனித்து நிற்கிறது. ஆனால் அதன் நிர்வாகக் கட்டமைப்பு இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இதில் தனக்கிருக்கும் வாய்ப்பை உணர்ந்து இந்தியா இது குறித்த பொறுப்பை ஏற்றுள்ளது. ஷங்ரி-லா உரையில், திறந்த பெருங்கடல்கள், பாதுகாப்பான கடல்கள், இணைப்பு, சட்டத்தின் ஆட்சி, பிராந்திய நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தோ-பசிபிக் ஒழுங்குமுறையை உருவாக்க மோடி அழைப்பு விடுத்தார். இந்தோ-பசிபிக் பகுதியில் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை உருவாக்க புது டெல்லி ஒத்த எண்ணம் கொண்ட அரசுகளுடன் இணைந்து செயலாற்ற முயல்கிறது.
எனவே, இந்தியா உலக அளவில் ஒரு முன்னணி சக்தியாக இருப்பதற்கு, உலகளாவிய ஒழுங்கைச் சீர்திருத்துவது, பிராந்திய அளவிலான ஒழுங்கை உருவாக்குவது ஆகிய இரண்டும் அவசியம். சமீபத்திய தசாப்தங்களில் சர்வதேச ஒழுங்கு குறித்த இந்தியாவின் அதிகாரப்பூர்வமான சிந்தனையை ஆய்வுசெய்த ஒரு கட்டுரையில், மோடியின் உரைக்குப் பிறகு இந்த விவகாரத்தில் இந்தியாவின் சிந்தனையில் எந்த மாற்றத்தையும் காணவில்லை என்பதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற வருடத்தில், "உலகளாவிய தெற்கு நாடுகள்" தொடர்பான சொல்லாடல்களில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. அதே நேரத்தில் RIOவைக் குறைவாகவே பயன்படுத்தியது. ஆனால் RIO தற்போது மீண்டும் வந்துவிட்டது.
இந்தியாவையும் மேற்கையும் இணைக்கும் RIO
இந்தியத் தலைமை மேற்கத்திய சகாக்களுடனான சந்திப்புகளில் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது தற்செயலானதல்ல. உலகளாவிய ஒழுங்கு குறித்த இந்தியச் சிந்தனைகளும் மேற்கத்தியச் சிந்தனைகளும் இணையும் புள்ளிகள் கணிசமாக உள்ளன. 2022ஆம் ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் ஆற்றிய உரையில் இது வெளிப்படுகிறது. மேற்கத்திய நாடுகளும் சமகால சர்வதேச ஒழுங்கை விதிகளின் அடிப்படையில் வகைப்படுத்துகின்றன என்றும் அது 1945இல் உருவானதாகவும் குறிப்பிடுகின்றன என்று அவர் கூறினார். மேற்கத்திய உரையாடல்கள் மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகளின், குறிப்பாக ரஷ்யா, சீனா ஆகியவற்றின் புவிசார் அரசியல் திருத்தல்வாதத்தை அடையாளம் காட்டுகின்றன. 1945ஆம் ஆண்டு உருப்பெற்ற சர்வதேச ஒழுங்கின் அடிப்படை நெறிக்கு, அதாவது ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை, நிலப்பரப்பு சார்ந்த ஒருமை ஆகியவை தொடர்பாக நாடுகளுக்கிடையே நிலவும் பரஸ்பர மரியாதைக்கு, இது முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது என அவை குறிப்பிடுகின்றன. தேர்தல் குறுக்கீடுகள், படுகொலைக்கான முயற்சிகள், படுகொலைகள், உக்ரைன் மீதான படையெடுப்பு, தைவானிலும் ஆசியாவிலும் உள்ள இதர மேற்கத்திய நட்பு நாடுகளின் மீதுமான அச்சுறுத்தல் போன்ற நடவடிக்கைகளை அவை சுட்டிக்காட்டுகின்றன.
கொள்கைப் புதிர்கள்
சிந்தனை அளவில் காணப்படும் பொதுவான அம்சங்கள் RIOஐப் பாதுகாப்பதிலும் கட்டமைப்பதிலும் இந்தியாவின் இயற்கையான கூட்டாளியாக மேற்கு நாடுகள் இருப்பதாகக் கருதவைக்கின்றன. உண்மையில், உலக அளவிலும் இந்தோ-பசிபிக் சார்ந்தும் பல மேற்கத்திய நாடுகள் கொண்டிருக்கும் லட்சியங்கள் இந்தியாவின் லட்சியங்களுடன் ஒத்துப்போகின்றன. இருப்பினும், அந்த ஒழுங்கை உருவாக்குவதற்கான இந்திய அரசின் அணுகுமுறையும் செயல்களும் புதிராக இருக்கின்றன. அவை அதன் லட்சியத்தையும் சிதைக்கின்றன. மூன்று எடுத்துக்காட்டுகள் இந்த உண்மையை விளக்குகின்றன.
முதலாவதாக, சர்வதேச ஒழுங்கை வடிவமைக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்குச் சீனா பெரும் தடையாக உள்ளது. உலக அளவில் மற்ற தடைகள் நீக்கப்பட்டாலும், சீனாவின் வீட்டோ அதிகாரம் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் முயற்சியை முறியடிக்கும். அணுசக்தியை வினியோகிப்பவர்களுக்கான குழுமத்தில் உறுப்பினராகச் சேர இந்தியா எடுத்த முயற்சியைச் சீனா எதிர்த்தது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்க முயன்றது. இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளின் மதிப்பைக் குறைத்தது. இவை சீனா இந்தியாவுக்கு ஏற்படுத்தும் தடைகளுக்கான சான்றுகள். மேலும், தனது பரந்து விரிந்த சுற்றுப்புறத்தில் போருக்குப் பிந்தைய ஒழுங்கைத் தலைகீழாக மாற்றுவதற்காக இராணுவ மோதலை எதிர்கொள்ளவும் சீனா தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இந்தோ-பசிபிக் கட்டமைப்பில் அது அதிருப்தி கொண்டுள்ளது. தன் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் மூலோபாயமாக இந்தக் கட்டமைப்பை அது கருதுகிறது. இந்தப் பிராந்தியத்தில் ஓர் ஒழுங்கைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்ப்பைக் காட்டுகிறது. இது இந்தியாவின் லட்சியங்களை முடக்குகிறது.
சீனா, இந்தியாவின் உலகளாவிய லட்சியத்திற்கு முட்டுக்கட்டை போடுவது மட்டுமல்லாமல், விதிகள் அடிப்படையிலான இருதரப்பு ஏற்பாட்டையும் குறைத்து மதிப்பிடுகிறது. கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் நடவடிக்கைகள், பிரச்சினைக்குரிய எல்லைப்பகுதியை நிர்வகிப்பதற்கு 1980களின் பிற்பகுதியிலிருந்து இருதரப்பும் ஏற்றுக்கொண்ட கட்டமைப்பை அல்லது "விதிகளை"ச் செல்லாக்காசாக ஆக்கியுள்ளன. இந்தியாவிடம் வலிமையான திறன்கள் இருந்தபோதிலும் – இந்திய-சீன ஒப்பீடுகளில் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் உண்மை இது – சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் திறன்கள் மிகவும் குறைவு என்பதால் சீனாவின் திருத்தல்வாதத்தை இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியவில்லை. கால்வான் மோதல்களுக்குப் பிந்தைய நான்கு ஆண்டுக் கால இராஜதந்திர நடவடிக்கைகள் இதைக் காட்டுகின்றன.
இரு நாடுகளின் திறன்களுக்கிடையில் உள்ள இடைவெளி, சீனாவின் ஆற்றலைச் சமனப்படுத்த வேண்டிய கட்டாயத்தை இந்தியாவுக்கு உருவாக்குகிறது. அமெரிக்காவுடனான மூலோபாய உறவுகளின் வளர்ச்சியையும் குவாட் அமைப்பு தொடர்பான முயற்சிகளையும் இதன் தொடர்பில் புரிந்துகொள்ளலாம். சீனாவின் ஆற்றலைச் சமனப்படுத்தும் சில நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்றாலும் இந்தியா அதிக எச்சரிக்கையுடனேயே செயல்பட்டுவருகிறது. மேற்கு நாடுகளுடன் இராணுவ-மூலோபாய ஒருங்கிணைப்பில் கூடுதலாக ஈடுபடத் தயங்குகிறது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தைவான், கிழக்காசியா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் வல்லரசுகளுக்கிடையிலான உறவுகள் வலுவிழந்துள்ளன. இந்நிலையில் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான அதிகாரப் போட்டியில் சிக்கிக்கொண்டுவிடுவோமோ என்னும் அச்சம்தான் இந்தியாவின் எச்சரிக்கைக்கான வெளிப்புறக் காரணம். ஆனால் சீனாவின் ஆற்றலைச் சமனப்படுத்தும் விளையாட்டில் கூடுதலான கூர்மையுடன் செயல்படுவதில் இந்தியாவுக்கு இருக்கும் தயக்கத்திற்கான ஆழமான காரணம் இந்தியாவின் உள்நாட்டுச் சூழலில் இருக்கலாம்: படைகள் நேரடியாக மோதிக்கொள்வது, பெரிய அளவிலான போர், பெரிய அளவில் தன் பகுதிகளை இழத்தல் ஆகியவற்றுக்குப் பதிலாகச் சிறிய அளவிலான ஊடுருவல்கள், குறைந்த அளவிலான பிராந்திய இழப்புகள் ஆகியவை பரவாயில்லை என்று இந்தியத் தலைமை மதிப்பிடுகிறது.
குவாட் உறுப்பினர்கள் அனைவருமே சீனாவைப் பற்றி ஒரே அளவில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலையை நன்கு புரிந்துகொள்ளலாம். ஜப்பானுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கிறது. ஆஸ்திரேலியா ANZUS, AUKUS ஆகிய ஏற்பாடுகள், நேட்டோவுடனான அதன் உறவுகள் ஆகியவற்றின் மூலம் பாதுகாப்புக் கவசத்தைப் பெற்றிருக்கிறது. இந்த அமைப்புகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவைப் பெற்றவை. தன்னைப் பாதுகாக்கும் விஷயத்தில் அமெரிக்கா எந்த அளவுக்கு ஈடுபாடு கொண்டிருக்கிறது என்பது பற்றிய நிச்சயமற்ற தன்மையும் புவிசார் அரசியல் தீவிரமடைவதும் ஜப்பானை அதன் பாதுகாப்பு நிலைப்பாட்டை மாற்றியமைக்கத் தூண்டுகின்றன. ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்புக் குடையின் கீழ் அது இருப்பதால் மாற்றத்தை ஏற்படுத்துவது அதற்குச் சாத்தியமாகிறது. சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு எழும் சவால் மிகவும் அருகில் உள்ளது. இந்தியா தன் பாதுகாப்புச் சுமையைக் கிட்டத்தட்ட முழுவதுமாகத் தானே சுமந்துவருகிறது. எல்லைகளில் ராணுவ நடவடிக்கைகளாலும் ஆற்றல் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையிலான கடுமையான இடைவெளியாலும், சீனாவிடமிருந்து வரும் நெருக்கடியைக் குறைக்க குவாட் அமைப்பை இந்தியா நம்பியுள்ளது. சீனா சற்றும் வளைந்துகொடுக்கவில்லை என்றாலும் இந்தியா தனது மேற்கத்தியக் கூட்டாளிகளுடனான மூலோபாய ஒத்துழைப்பை ஒரு எல்லைக்குட்பட்டு மட்டுப்படுத்திக்கொள்கிறது.
இரண்டாவதாக, மேற்கத்திய நாடுகள் சீன, ரஷ்ய புவிசார் அரசியல் திருத்தல்வாதத்தை RIOக்கான அச்சுறுத்தலாகக் கருதுகின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான படையெடுப்பு RIOஐ மீறுவதாகும் என்று தாங்கள் கூறுவதன் பொருளை இந்தியா உணர வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன. ஆனால், இந்தியாவின் எதிர்வினை பனிப்போர் காலத்தின் தொடர்ச்சியாகவும், சமகால புவிசார் அரசியலால் உருவான தர்க்கத்துக்கு முரண்பட்டதாகவும் உள்ளது.
ரஷ்யாவின் நடவடிக்கைகளால் பலவீனமடைந்துள்ள 1945 காலத்து உலகளாவிய ஒழுங்கின் ஆதாரமான அம்சங்களை இந்தியா வலியுறுத்தியுள்ளது. சர்ச்சைக்கு அமைதியான தீர்வு (இன்றைய யுகம் போருக்கானது அல்ல என்று மோடி தொடர்ச்சியாகக் கூறிவருவதை இங்கே நினைவுகூரலாம்), இறையாண்மை, நிலப்பரப்பு சார்ந்த ஒருமைக்கான மரியாதை, குடிமக்களின் உயிர்களுக்கு மரியாதை ஆகியவையே அந்த அம்சங்கள். ஆனால், RIO விதிமுறைகளில் போரைப் பற்றிப் பேச இந்தியா மறுத்துவிட்டது. அதற்கான நிர்ப்பந்தம் எழுதபோது, மேற்கு நாடுகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியது. ஆசியச் சூழலில் விதிகள் அடிப்படையிலான ஒழுங்குமுறையின் மீது அண்மைக் காலங்களில் மேற்கு நாடுகள் போதுமான கவனம் செலுத்தவில்லை என்றும் கூறியது.
2024 ஜூலையில் நடந்த மோடியின் ரஷ்யா விஜயம் அதிபர் விளாடிமிர் புடினின் சர்வதேச தனிமைப்படுத்தலைக் குறைத்தது. புடினுடனான தனது சந்திப்பில் உக்ரைன் போர் குறித்த தனது மேற்கூறிய நிலைப்பாட்டை மோடி திரும்பத் திரும்பக் கூறினார். அதற்கு முந்தைய நாள் கிய்வ் மருத்துவமனையில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் இறந்தது குறித்து மறைமுகமாக வேதனையை வெளிப்படுத்தினார். இருப்பினும், அன்பான அரவணைப்பு, இதமான சொற்கள், புடினிடமிருந்து ரஷ்யாவின் உயரிய சிவிலியன் மரியாதையை ஏற்றுக்கொண்டது ஆகியவை உள்நாட்டில் அடக்குமுறையும் உலக ஒழுங்கைச் சீர்குலைத்த வெளிப்புற நடவடிக்கைகளும் கொண்ட விரும்பத்தகாத ஒரு ஆட்சிக்கு அங்கீகாரம் வழங்கியதுபோல ஆகிவிட்டன.
ரஷ்யாவுடனான தன் உறவுகளை ஆழப்படுத்துவதன் மூலம், ரஷ்யாவுக்கும் சீனாவுக்குமிடையே வளர்ந்துவரும் நெருக்கத்தைத் தடுக்க இந்தியா முயல்கிறது. ஆனால் சீனாவால் ரஷ்யாவுக்குக் கிடைக்கும் லாபத்தைத் தாண்டி ரஷ்யாவுக்குப் பலன் கிடைக்கச்செய்வதில் இந்தியாவுக்கு இருக்கும் திறனைப் பொறுத்தே இந்த உத்தி பலனளிக்கும். அமெரிக்காவுடனான சமன்பாடுகள் மோசமடையும் பட்சத்தில், சீனாவின் கூடுதலான வளங்கள், மேற்கத்திய அழுத்தத்தை எதிர்க்கும் அதன் திறன் ஆகியவை ரஷ்யாவுக்குத் தெளிவான சாதகமாக இருக்கும். அதே நேரத்தில், கண்டம் தாண்டிய பெரிய சக்தியாக விளங்கும் ரஷ்யா, சீனாவுக்கு அடிபணிந்த நாடாக மாறாது. இந்தியாவின் மூலோபாய அணுகுமுறை இந்த உண்மையின் அடிப்படையில் செயல்படுகிறது. ஆனால் இந்த மூலோபாயத்தைத் தொடர்வதற்காக மேற்கு நாடுகளுடனான உறவைக் கெடுத்துக்கொள்ளும் அபாயத்தை எதிர்கொள்வது நல்லதுதானா என்பது தெளிவாக இல்லை. சீன-ரஷ்ய உறவு வட கொரியாவிலிருந்து வட ஆப்பிரிக்காவரை பரந்த புவியியலில் வளர்ந்துவரும் சர்வாதிகார அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதை வைத்துப் பார்க்கும்போது இந்தக் கேள்வி மிகவும் பொருத்தமானதாகிறது. இதுதான் இந்தியா ஆதரிக்க விரும்பும் அமைப்பா?
மூன்றாவதாக, இந்தியாவின் நடவடிக்கைகள் சர்வதேச ஒழுங்கை உருவாக்கும் அதன் முயற்சிகளை இன்னொரு விதத்தில் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன. மேற்கத்திய மூலோபாயம் இந்தியாவுக்குச் சாதகமாக இருந்தாலும், மேற்கைக் குறித்த இந்தியாவின் சொல்லாடல்கள் புதிராக மாறிவிட்டன. அதன் "உறுதியான" வெளியுறவுக் கொள்கை, சமீபத்திய ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகள் குறித்துக் கூர்மையான மொழியில் பேசிவருகிறது.
அது மட்டுமல்ல. கனடாவிலும் அமெரிக்காவிலும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை ஒழிப்பதற்கான முயற்சிகள், ஆஸ்திரேலியாவில் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் ஒருங்கிணைத்ததாகச் சொல்லப்படும் முயற்சிகள் ஆகியவை இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக முன்னிறுத்துவதன் விரிவாக்கமாகும். ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் குவாட் அமைப்பில் இந்தியாவின் கூட்டாளிகள். மேற்குலகின் உலகளாவிய மூலோபாயத்திலும் பாதுகாப்புக் கட்டமைப்பிலும் கனடா முக்கியமான உறுப்பினர். மேற்படி நடவடிக்கைகள் குறித்த செய்திகளை இந்தியா மறுத்துக் கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கைகள் உண்மையாக இருப்பின், அவை அரசுகளுக்கிடையேயான நடத்தை விதிகளை மீறுவதுடன், மோடி தனது ஷங்ரி-லா உரையில் பேசிய "சட்டத்தின் ஆட்சி" மீதான உறுதிப்பாட்டின் மதிப்பையும் குறைக்கின்றன. மேற்கத்திய அரசாங்கங்களையும் சமூகங்களையும் தகர்க்கும் நோக்கில் சீனாவும் ரஷ்யாவும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இந்தியா மேற்கொண்டதாகச் சொல்லப்படும் இந்த நடவடிக்கைகள் மேற்கத்திய நாடுகளில் உள்ள இந்தியாவின் விமர்சகர்களின் பார்வையில் அதே வரிசையில் இந்தியாவை நிறுத்துகின்றன.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டுக்கு உள்நாட்டில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆனால் இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாதிக்கிறது. மேற்கத்தியச் சமூகங்களின் உயரடுக்கு வட்டாரத்தில் இந்தியாவைக் குறித்து நிலவும் நற்பெயரை இது நிச்சயமாகச் சிதைத்துவருகிறது. காலனித்துவக் காலத்திலிருந்து இந்தியா உருவாக்கிவரும் நற்பெயர் இது. இந்தியாவின் இந்தப் போக்கு, மேற்கத்திய அரசாங்கங்கள் இந்தியாவுடனான உறவைத் தங்கள் இலக்குகளை அடைவதற்கான கருவியாக மட்டுமே அணுக வழிசெய்கிறது. மேற்குலகின் உலகளாவிய செல்வாக்கை “இதர நாடுகளின்” எழுச்சி சமனப்படுத்துகிறது என்பது உண்மைதான். ஆனால், உலகப் பாதுகாப்புப் படிநிலையில் மேற்கு நாடுகள் இரண்டாவது இடத்தில் இருப்பதாக முடிவு செய்வது தவறானது. இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, மேற்கு நாடுகளுடனான உறவுகளின் அடிப்படை பலவீனமடைவது, தன் சொந்த நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியாவுக்குத் தேவைப்படும் வள ஆதாரங்களையே குறைப்பதாக உள்ளது. இந்தியா விதிகள் அடிப்படையிலான உலகத்தை விரும்புகிறது. ஆனால் அதைக் கொண்டுவருவதற்கான கொள்கைக்கு, இணக்கமான நடத்தையும் இலக்கின்மீது கூடுதலான பற்றுறுதியும் தேவை.