ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் கொடூரமான இராணுவ மோதல்கள் அதிகரித்துவரும் இன்றைய சூழலில் இணையப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் திறந்தநிலைப் பணிக்குழுவின் பலதரப்புக் கூட்டங்களுக்கு உலகளாவிய அளவில் உரிய கவனம் கிடைக்கவில்லை. இந்த மன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் சற்றே தெளிவற்று இருந்தாலும் பாதுகாப்பானதும் நம்பகமானதுமான இணைய வெளிக்கான விதிகளையும் விதிமுறைகளையும் வகுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த விவாதங்கள் இன்று இன்றியமையாதவை. அத்தியாவசிய டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு எதிரான இணையவழித் தாக்குதல்கள் போரின்போதும் சமாதான காலத்திலும் அதிக அளவில் நடக்கின்றன. இணைய வெளிக்கான நடைமுறை விதிகளை நிறுவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஐ.நா. செயல்முறைகளில் பெரும்பாலானவை பல தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன. "தாராளவாத" முகாம் எனக் குறிப்பிடப்படும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அவற்றின் நட்பு நாடுகள் ஆகியவற்றுக்கும் "சர்வாதிகார" முகாம் எனக் குறிப்பிடப்படும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குமிடையில் நிலவும் கருத்தியல் பிளவு காரணமாக இந்தச் செயல்முறைகள் முடங்கியுள்ளன.
இந்தத் தேக்கநிலை காரணமாக, முக்கியமான டிஜிட்டல் விவகாரங்களைத் தீர்மானிக்கும் நாடாக இந்தியா பொதுவாகக் கருதப்படுகிறது. இது இணைய வெளி தொடர்பான கோட்பாட்டு ரீதியான விவாதத்தைத் திட்டவட்டமாக ஒரு பக்கமாகத் திருப்பிவிடக்கூடும். அரசின் கட்டுப்பாடுகள் வரம்பிற்குட்பட்டும் பயனர்களின் அடிப்படை உரிமைகள் வலுவான முறையிலும் இருக்கக்கூடிய "சுதந்திர" இணைய வெளி, சீன-ரஷ்ய அணுகுமுறையின் அடிப்படையிலான மையப்படுத்தப்பட்ட அரசுக் கட்டுப்பாடு கொண்ட இணைய வெளி என்னும் இரு விதமான மாதிரிகளில் ஏதேனும் ஒன்றை நோக்கித் திட்டவட்டமாகச் சாயக்கூடிய நிலையை இந்தச் சூழல் உருவாக்கியிருக்கிறது.
இணையப் பாதுகாப்பை இந்தியா எப்படி அணுகுகிறது
இதுவரை எந்த ஒரு தரப்பைச் சார்ந்தும் செயல்படுவதை இந்தியா தவிர்த்துவருகிறது. சர்ச்சைக்குரிய பிரச்சினைகளின் நுணுக்கங்களுக்குச் செல்லாமல், அனைத்துக் கண்ணோட்டங்களையும் அங்கீகரிப்பதே பணிக்குழுவில் இந்தியாவின் வியூகமாக இருந்துவருகிறது. அந்த விஷயங்களில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுக்கும் அதே வேளையில், இந்தியா தன்னுடைய மூலோபாய நலன்களுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள, சர்ச்சைக்கு அப்பாற்பட்ட குறிப்பிட்ட சில விஷயங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, பேச்சுவார்த்தைகளின் வடிவம், முக்கியமான சித்தாந்தக் கொள்கைகள் ஆகியவற்றில் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் முன்வைத்த முரண்பட்ட தீர்மானங்களை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது. ஐ.நா.வின் செயல்முறைகளுக்கான தன்னுடைய அதிகாரப்பூர்வமான கருத்துரைப்புகளில், இணைய வெளிக்குச் சர்வதேசச் சட்டம் பொருந்துமா என்பது குறித்து "தாராளவாதம்", "சர்வாதிகாரம்" ஆகிய இரண்டு தரப்புகளின் எதிரும் புதிருமான கருத்துக்களையும் அது அங்கீகரித்துள்ளது. தற்போதுள்ள சர்வதேசச் சட்டம் காலாவதியானது, மேற்கு நாடுகளை மையமாகக் கொண்டது என ரஷ்யாவும் சீனாவும் கருதுவதால் இணைய வெளிக்கான புதிய விதிகளை அவை உருவாக்க விரும்புகின்றன. இந்நிலையில் சர்வதேசச் சட்டம் குறித்த கேள்வி நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரியதாக உள்ளது. தற்போதுள்ள சர்வதேசச் சட்டம் இணைய வெளிக்குப் பொருந்தும் என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டாலும், பல நாடுகளின் அரசுகள் செய்ததைப் போல, இந்தச் சட்டம் எவ்வளவு துல்லியமாகச் செயல்படும் என்பது குறித்த விரிவான அறிக்கையை வெளியிடுவதை இந்தியா தவிர்த்துவருகிறது. மேலும், "தரவு இறையாண்மை" - ஒரு நாட்டின் நிலப்பரப்பினுள் உருவாக்கப்படும் தரவுகளின் மீது அந்நாட்டிற்குள்ள இறையாண்மை உரிமையை வலியுறுத்துவதை ஆதரிக்கும் கருத்து – குறித்து உள்நாட்டு அரசியல் சொல்லாடல்களில் இந்திய அரசின் குரல் உரக்க ஒலித்தாலும், ஐ.நா.வில் இந்த இறையாண்மை விவாதத்திற்கு வலுவூட்டுவதை இந்தியா தவிர்த்திருக்கிறது. இறையாண்மை பற்றிய இந்தியாவின் கருத்துக்கள் இவ்விஷயத்தில் ஏற்கனவே மற்ற அரசுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள ஒருமித்த கருத்தை உறுதிப்படுத்துவதோடு நிற்கின்றன.
அதே சமயம், விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதிலும், முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதிலும் இந்தியா அழுத்தமாகக் குரல் கொடுத்துவருவதுடன், சீரான நிலைப்பாடும் கொண்டிருக்கிறது. இணையப் பாதுகாப்பிற்கான திறனைக் கட்டியெழுப்பும் நுணுக்கங்களையும் ஆராய்ந்துவருகிறது. குறிப்பாக, உலகளாவிய இணையப் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பு போர்ட்டலை (Global Cybersecurity Cooperation Portal) உருவாக்குவதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்துவருகிறது. இந்த போர்ட்டல் தகவல் பரிமாற்றம், தொடர்புடைய ஆவணங்களைச் சேமித்துவைத்தல், தொடர்புடைய கருத்தரங்குகள், பயிலரங்கங்களுக்கான தேதிகளைத் தொகுத்தல் ஆகியவற்றைக் கொண்ட எளிதில் அணுகக்கூடிய தளமாகச் செயல்படும். உலகளாவிய தெற்கின் கவலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் நோக்கத்திற்கு இணங்க, வளரும் நாடுகளுக்கு இந்த போர்டல் உதவும் என்று இந்தியா வெளிப்படையாகக் கூறியுள்ளது.
இணையப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளுக்கான இந்த அணுகுமுறைக்குப் பின் உள்ள காரணிகள் எவை? இதர பலதரப்பு மன்றங்கள் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை பெரும்பாலும் "எளிதில் பொறுமையிழப்பது," "நம்பமுடியாதது" அல்லது "மோதல் போக்கைக் கொண்டது" என்று கூறப்படுகிறது. இருப்பினும், நாச்சியப்பனின் சமீபத்திய ஆராய்ச்சி குறிப்பிடுவதுபோல, இந்தப் பொதுமைப்படுத்தல்கள் இந்தியாவின் போக்கை “எந்த அளவுக்கு வெளிப்படுத்துகின்றனவோ அதே அளவுக்கு மறைக்கின்றன.” ஒவ்வொரு மன்றம் அல்லது ஆளுகை தொடர்பான பிரச்சினைக்கான இந்தியாவின் அணுகுமுறையை சில காரணிகளின் சூழல் சார்ந்த நடைமுறை அனுபவங்களின் மூலம் மதிப்பிட வேண்டும் என்று நாச்சியப்பன் வாதிடுகிறார். அந்தக் காரணிகள் வருமாறு: இந்தியாவின் மூலோபாய நலன்கள், அதிகாரவர்க்கத்தின் திறன், அரசாங்கத்திற்குள் நிலவும் ஒருங்கிணைப்பு, பல்வேறு பயனுரிமையாளர்களின் பங்கேற்பு, ஒவ்வொரு பயனுரிமையாளர் குழுவும் பெற்றிருக்கும் செல்வாக்கு.
இந்த அளவுகோல்கள் ஒவ்வொன்றையும் பயன்படுத்தி இணையப் பாதுகாப்புப் பன்முகத்தன்மைக்கான இந்தியாவின் அணுகுமுறையை மதிப்பிட்டுப் பார்க்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை இணையப் பாதுகாப்பு என்பது மூலோபாயம் சார்ந்த முக்கியமானதொரு அம்சம் என்பதில் ஐயமில்லை. அரசுகளால் நடத்தப்படும் இணையத் தாக்குதல்களில் அதிகமானவை இந்தியாவையே இலக்காகக் கொண்டவை என அண்மைக்காலச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மின்சாரக் கட்டமைப்புகள், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகள், அணுமின் நிலையங்கள் ஆகியவற்றைப் பாதிக்கும் இணையச் செயல்பாடுகளுக்கான இலக்காக இந்தியா ஆகியுள்ளது. ஐ.நா. வெளியிடும் நிர்ப்பந்தமற்ற விதிமுறைகள் இந்தியாவின் இணையப் பாதுகாப்பை உறுதியான முறையில் அதிகரிக்கச் செய்யவதோ புவிசார் அரசியல் எதிரிகளின் இணையத் தாக்குதல்களுக்கு அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதோ சாத்தியமில்லை. எனவே, ஐ.நா.வின் நெறிமுறைசார் முடிவுகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதில்லை. மாறாக, பல கூட்டாளிகளுடனான இருதரப்பு ஒப்பந்தங்கள், நாற்கரப் பாதுகாப்பு உரையாடல் அல்லது ரான்சம்வேர் தாக்குதலுக்கு எதிரான முன்முயற்சி போன்ற சிறு கூட்டணிகள் மூலம் இணையப் பாதுகாப்புகளை மேம்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது. ஐ.நா.வில் நடைபெறும் கருத்தியல் மோதலுக்குள் இழுக்கப்படுவதற்குப் பதிலாக, இணையப் பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்துதல் அல்லது கணினி நெருக்கடி நிலைக்கான தீர்வுக் குழு (CERT) போன்ற இணைய வெளி தொடர்பான விவகாரங்களுக்கான முகமைகளுக்கிடையே ஒத்துழைப்பு நிலவுவதற்கான வழிமுறைகளை உறுதிசெய்தல் போன்ற உடனடியானதும் உறுதியானதுமான விளைவுகளில் கவனம் செலுத்த இந்தியா முடிவுசெய்துள்ளது.
இரண்டாவது அளவுகோலைப் பொறுத்தவரை, இந்தியாவில் இணையப் பாதுகாப்பைக் கையாளும் அமைப்புகள் ஏராளமாக உள்ளன. வெளிவிவகார அமைச்சகம் (MEA) இயற்கையாகவே பலதரப்பு அமைப்புகளில் இந்தியாவின் பங்களிப்பை முன்னிறுத்துகிறது. இந்தியாவின் நிலைப்பாடுகளை வடிவமைக்கும்போது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் பார்வைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால், இணைய விதிமுறைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மூலோபாயத்துக்கான முன்னுரிமை குறைந்த அளவில் இருக்கும் நிலையில், இணைய விதிமுறைகள் குறித்த தனித்துவமான பொதுக் கதையாடலை உருவாக்குவதிலோ இந்தத் துறையில் சர்வதேச அளவில் வெளியாகும் அறிக்கைகளுடன் உள்நாட்டுக் கொள்கை வகுப்புச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவோ முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. தரவுகள் நாட்டின் எல்லைகளைத் தாண்டிச் செல்வது தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையுடன் இது எந்த அளவுக்கு வேறுபட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். உள்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தியாவின் வர்த்தக அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றில் உள்ள அதிகாரிகள் உலக வர்த்தக அமைப்பு, ஜி20 போன்ற சர்வதேச மன்றங்களில் “தரவு இறையாண்மை” என்னும் கதையாடலை முன்வைத்து இந்தக் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்திவருகிறார்கள்.
இறுதியாக, குடிமைச் சமூகம், கல்வித்துறை, ஊடகம், தனியார் துறை ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு பயனுரிமையாளர்களுக்கான உயிரோட்டமுள்ள தொழில்நுட்பக் கொள்கை, இணையப் பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய விவாதங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டின் மீது போதிய செல்வாக்கைச் செலுத்துவதில்லை. பயனுரிமையாளர்களின் ஈடுபாடும் இவ்விஷயத்தில் குறைவாகவே உள்ளது. இதற்கான ஆலோசனை வழங்கும் குழுக்கள் அடிப்படை உரிமைகளின் மீது உடனடித் தாக்கங்களைக் கொண்ட அழுத்தமான உள்நாட்டு சட்டத்தை வடிவமைப்பதில் தங்கள் நேரத்தையும் வளங்களையும் அர்ப்பணித்துள்ளன. இதை அவற்றின் உரிமை சார்ந்த செயல்பாடாகவும் கொள்ளலாம். அதுபோலவே, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை, தரவுப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்புக்கான உள்நாட்டுக் கட்டமைப்பை வளர்ப்பது போன்ற உடனடி வணிகத் தாக்கங்களைக் கொண்ட கொள்கைப் பிரச்சினைகளில் இந்திய, வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. அரசாங்கத்தின் கவனக்குறைவு அல்லது தொழில்துறையிலும் குடிமைச் சமூகத்திலும் செல்வாக்கு மிக்க குரல்கள் இல்லாமை ஆகியவற்றின் காரணமாக, ஊடக நிறுவனங்கள் ஐ.நா.வில் நடக்கும் விவாதங்களை விரிவான முறையில் பதிவுசெய்வதைப் பெரும்பாலும் தவிர்த்துவருகின்றன. உள்நாட்டிலுள்ள பல்வேறு துறைகளின் மாறுபட்ட நலன்களைக் கவனிப்பதற்கான உத்வேகம் இல்லாததால், பல்வேறு பயனுரிமையாளர்கள் கொண்ட சூழல் அரசாங்கத்தின் செயலற்ற நிலைப்பாட்டுக்குக் காரணமாக அமைகிறது.
உலகளாவிய டிஜிட்டல் வர்த்தக விவாதங்களில் இந்தியாவின் அணுகுமுறை மிகவும் வித்தியாசமானது. உலக வர்த்தக அமைப்பில் பல முக்கியமான பிரச்சினைகளில் இந்தியா தனது நிலைப்பாடுகளை தீவிரமாக வெளிப்படுத்தியுள்ளது, ஏனெனில் உலக வர்த்தக அமைப்பின் முடிவுகள் சட்டப்பூர்வமாகன நிர்ப்பந்தங்களைக் கொண்டவை. நிகழ்நேர சட்ட, கொள்கை சார்ந்த தாக்கங்களையும் இவை கொண்டுள்ளன. இதன் விளைவாக, அனைத்துப் பங்குதாரர்களும் தங்கள் வணிக நலன்கள் அல்லது கருத்தியல் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் நிலையை வடிவமைக்கத் தீவிரமாக முயற்சிசெய்கிறார்கள்.
இணையப் பாதுகாப்புப் பல்தரப்புவாதத்தின் எதிர்காலம்
இணையப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளில் ஒப்பீட்டளவில் அதிகம் செயல்படாமல் இருக்கும் இந்தியாவின் அணுகுமுறை, கொள்கை முடிவுகளை எடுக்கும்போது தனக்கேற்ற மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை அதற்கு வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, சீன விற்பனையாளர்கள் இந்தியாவின் 5ஜி சோதனைகளில் பங்கேற்பதைத் தடுக்கும் முடிவு 2020இல் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நேரடி மோதலுக்குப் பிறகு தீர்மானகரமான திருப்பத்தை அடைந்தது. அதுவரை, ஐரோப்பிய நிறுவனங்களைக் காட்டிலும் மலிவான கருவிகளை வழங்கியதால் சீன விற்பனையாளர்கள் இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் நிலைபெற்றிருந்தார்கள். 5ஜி தொடர்பான முடிவு சீனா அல்லது மேற்கு நாடுகள் தொடர்பான கருத்தியல் சார்ந்த உறுதிப்பாட்டைக் காட்டிலும் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய நலன்கள் குறித்த நடைமுறை சார்ந்த உண்மையான மதிப்பீட்டின் அடிப்படையிலேயே அமைந்தது.
கருத்தியல் ரீதியாகச் செயலற்றிருப்பது என்பது, இணையத்தில் உலகளாவிய நெறிமுறை சார்ந்த செயல்திட்டங்களை வடிவமைக்கும் வாய்ப்பை இந்தியா தவிர்ப்பதாகவும் அமைகிறது. உலகிற்குத் தலைமைதாங்க வேண்டும் என்னும் இந்தியாவின் விருப்பத்தை வைத்துப் பார்த்தால் இந்தச் செயல்திட்டத்தை வகுக்கும் செயல்முறையில் இந்தியா பங்குபெற வேண்டும். ஆனால் இந்தியா தனது தலைமைத்துவப் பாத்திரத்தை வித்தியாசமான முறையில் பார்க்கிறது. உள்நாட்டில் வெற்றிகரமான சிறந்த நடைமுறைகளாகத் தான் கருதுவதை உலக அரங்கில் முன்னிருத்துவதன் மூலம் இந்தியா தனது தலைமைத்துவத்தை இதுவரை வெளிப்படுத்திவந்துள்ளது. இத்தகைய நடைமுறைகளில் ஒன்றான இந்தியாவின் "டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு", அண்மையில் முடிவடைந்த ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றபோது முக்கிய இடத்தைப் பிடித்தது. மேற்கூறிய உலகளாவிய இணையப் பாதுகாப்பு போர்ட்டலுக்காக இந்தியா முன்வைக்கும் ஆலோசனை, அரூபமானதும் சர்ச்சைக்குரியதுமான நெறிமுறை சார்ந்த பிரச்சினைகளில் வெறுமனே கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாகச் செயல்படுத்தக்கூடிய மாதிரிகளை முன்மொழியும் இந்தியாவின் அணுகுமுறையுடன் ஒத்துப்போகிறது.
இணையப் பாதுகாப்பு அல்லது மூலோபாயத் தொழில்நுட்பத்தில் இந்தியாவுடன் கூட்டு சேர விரும்பும் நாடுகளைப் பொறுத்தவரை இது முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இணைய ஆளுகை குறித்த இந்தியாவின் அணுகுமுறையைப் பொத்தாம்பொதுவாக முத்திரை குத்துவதன் மூலம் மதிப்பிடுவதோ அல்லது கணிப்பதோ இணைய வெளியில் இந்தியாவின் கோட்பாட்டு நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள முயல்வதோ பயனற்ற முயற்சியாகவே இருக்கும். கருத்தியல் ரீதியாக இந்தியா கடைப்பிடிக்கும் பட்டுக்கொள்ளாத அணுகுமுறை இந்தோனேஷியா போன்ற "இணைய வெளியைத் தீர்மானிப்பவர்கள்" என்று அழைக்கப்படுபவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தனித்துவமான உள்நாட்டு அரசியல் சூழல்களின் அடித்தளத்தைக் கொண்ட வேகமாக வளரும் பொருளாதாரங்கள்மீது கருத்தியல் கட்டமைப்பைத் திணிப்பதற்குப் பதிலாக, இந்த நாடுகளுக்கு உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செயல்முறைகள், சிக்கல்கள் அல்லது விளைவுகளை நன்கு புரிந்துகொள்வது இன்றியமையாதது. இதுவே முடிவெடுப்பதற்கான உந்துதலைத் தரும். இந்தியாவுக்கு உடனடி ஆர்வமுள்ள கண்கூடான சிக்கல்கள் அல்லது தொழில்நுட்பத் தீர்வுகளை அடையாளம் காண்பதும், ஒத்துழைப்பிற்கான உகந்த வழிமுறைகளை மதிப்பீடு செய்வதும் பலனளிக்கும். இது பலதரப்பு அமைப்புகளின் மூலம்தான் நடக்க வேண்டும் என்பதில்லை.
கருத்தியல் ரீதியாகப் பட்டுக்கொள்ளாமல் இருக்கும் போக்கு வளர்ந்துவருவது இணையப் பாதுகாப்புத் துறையில் பலதரப்பினரின் பங்கேற்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அறிகுறி அல்ல. மாறாக, தெளிவாகப் புலனாகும் விளைவுகளில் கவனம் செலுத்துவது, வளர்ந்துவரும் புவிசார் அரசியல் அணிபிரிதலுக்கு மத்தியில் பலதரப்புத் தன்மைக்கான தேவையைத் தக்கவைக்கிறது. சட்டப்பூர்வமாக நிர்ப்பந்திக்கக்கூடிய முடிவுகள் இல்லாத நிலையிலும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், குறைகளை வெளிப்படையாக முன்வைப்பதற்கும் புரிதல்களைத் தெளிவுபடுத்த்கிக்கொள்வதற்குமான சிறந்த வாய்ப்பாகப் பலதரப்பு அமைப்புகள் இருக்கின்றன. குறிப்பாகத் தொழில்நுட்பத்திலும் புவிசார் அரசியலிலும் நிகழும் விரைவான முன்னேற்றங்களின் பின்னணியில் இந்த அமைப்புகளுக்கான தேவை இருக்கிறது. புதியதும் வேகமாக வளர்ந்துவருவதுமான டிஜிட்டல் பொருளாதாரங்களை நிர்வகித்துவரும் வளரும் நாடுகளுக்கு இந்த உரையாடல்களும் தொடர்புப் புள்ளிகளும் முக்கியமானவை.
இணையப் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கான இந்தியாவின் அணுகுமுறை, மற்ற உலகளாவிய மன்றங்கள் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறைக்குப் பொருந்தாமல் போகலாம். இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் நலன்கள், நிறுவனங்கள் பரந்துபட்ட அரசியல் சூழல் அவற்றில் தனித்துவமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை.
கோட்பாடு சார்ந்த போர்களில் வெற்றி பெறுவதும், அணுகுமுறைகளில் சீரானதன்மையை வெளிப்படுத்துவதும் புவிசார் அரசியல் குழுக்களின் தலைவர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் சிக்கலான புவிசார் அரசியல் சமன்பாடுகள், இந்தியா போன்ற முக்கியமான நாடுகள் நீண்ட காலம் வலுவுடன் போராடுவதற்கு அல்லது வெற்றி பெறுவதற்குப் பதிலாக, உடனடியானதும் உறுதியானதுமான விளைவுகளைப் பெறும் முயற்சியில் இறங்குவதற்கான ஊக்கத்தை அளிக்கின்றன.