அசாமின் தர்ராங் மாவட்டத்தில் உள்ள தோல்பூர் சார் பகுதியில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு அங்கே குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் இரண்டு பேர் போலீசாரால் கொல்லப்பட்டனர். முன்பு கிழக்கு வங்காளமாக இருந்த பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் (மியாக்கள் என அழைக்கப்படுபவர்கள்) இந்த நிலங்களைச் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுவது, அசாமின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தொடர்வதை நியாயப்படுத்துவதற்கான காரணமாக அமைந்துள்ளது.
தோல்பூர் சார் பகுதியைப் பொறுத்தவரை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் தொழில்முறை மேய்ச்சல் ரிசர்வ் (பிஜிஆர்), கிராம மேய்ச்சல் ரிசர்வ் (விஜிஆர்) என வகைப்படுத்தப்பட்டதாகவும் இந்தப் பகுதிகளைச் "சட்ட விரோத"மாக ஆக்கிரமிப்பவர்கள் இப்பகுதிகளின் பூர்வ குடிமக்களின் வாழ்வாதார வாய்ப்புகளைப் பறிப்பதாகவும் நிர்வாகம் கூறியது. ஆனால், பிரம்மபுத்திராவின் சர்கள், அதாவது நகரும் தீவுகள் அல்லது நதிக்கரைத் தீவுகள், ஓரளவு அல்லது ஒப்பீட்டளவில் நிரந்தரமான கட்டமைப்புகள் என்பதால், அரசாங்கத்தின் கூற்று திசைதிருப்புவதாக உள்ளது. சார் எனப்படும் இந்த நகரும் தீவுகள் பிரம்மபுத்திராவின் வண்டல் படிவத்திலிருந்து பிறந்தவை. அவை பொதுவாக எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்குள் உருவாகின்றன. அவை ஆற்றில் மூழ்கடிக்கப்படுவததற்கு முன்பு ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகளால் பயன்படுத்தப்படுகின்றன. அசாமின் மொத்த மக்கள்தொகையில் 4.5 சதவீதம் பேர் இந்த சார்களில் வாழ்கின்றனர்.
1950 அசாம் நிலநடுக்கம் பிரம்மபுத்திரா நதியின் போக்கையும் அதன் கிளை நதிகளின் போக்கையும் மாற்றியது. நிலநடுக்கம் ஆற்றுப்படுகையை உயர்த்தியது. இது வெள்ளம் பெருக்கெடுப்பதற்கும் ஆற்றங்கரை அரிப்புக்கும் வழிவகுத்தது. காலனித்துவத்திற்குப் பிந்தைய வளர்ச்சித் திட்டங்கள் - சாலைகள், பாலங்கள், அணைக்கரைகள் - நீரோட்டங்களைத் திசை திருப்பியது நிலைமையை மேலும் மோசமாக்கியது. ஆற்றங்கரையில் அரிப்பு நிகழும் இடங்களை இது அதிகரிக்கச்செய்தது. வெள்ளம், ஆற்றங்கரை அரிப்பு ஆகியவற்றால் மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்ததால் உள்ளூரிலிருந்தே பலர் இடம்பெயர்ந்தது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.
பருவநிலையாலும் வளர்ச்சித் திட்டங்களாலும் உருவான சூழலியல் மாற்றம் மாநிலத்தில் ஏற்கனவே இருக்கும் இன மோதல்களையும் அடையாளம் சார்ந்த சொல்லாடல்களையும் ஆழமாக்கியது. ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற பாஜக அண்மையில் முன்னெடுத்த நடவடிக்கை அதே அடையாளம் சார்ந்த சொல்லாடல்களின் ஒரு பகுதிதான். மியாக்கள் "நில ஜிகாத்" நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்னும் அதிரடியான பிரச்சாரத்தை பாஜக வெற்றிகரமாக நடத்துகிறது. இந்த மாநிலத்தின் பூர்வ குடிமக்கள் என்று சொல்லப்படுபவர்கள் நிலமில்லாமல் இருப்பதற்கும், அவர்கள் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் இல்லாத நிலைக்கும் காரணமான அடிப்படைப் பிரச்சினை “நில ஜிகாத்” என பாஜகவின் பிரச்சாரம் கூறுகிறது.
1950முதல் ஆற்றங்கரை அரிப்பினால் 427,000 ஹெக்டேர் நிலம் இழக்கப்பட்டுள்ளது என்று 2018ஆம் ஆண்டு அசாம் அரசின் அறிக்கை கூறியது. இது மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 7.4 சதவீதம். அங்கு மிகச் சிலருடைய நிலத்திற்கு மட்டுமே பாதுகாப்பு இருக்கிறது. இருப்பினும், அரசாங்க நிலக் கொள்கையானது இன்னமும்கூட நிலத்தை நிலையான, மாறாத பண்டமாகக் கற்பித்துக்கொள்கிறது. இதில் சார் பகுதி நிலங்களும் அடங்கும். பழைய பிஜிஆர், விஜிஆர் வரையறைப் பதிவுகள் நில அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நதியோ தொடர்ந்து நிலப்பரப்பை வடிவமைத்து, மறுவடிவமைப்பு செய்கிறது. எனவே, பெருமளவில் கடல் அரிப்பினால் ஏற்பட்ட இடப்பெயர்ச்சி என்னும் யதார்த்தத்தினால் இந்த சார்களில் வசிப்பவர்கள் நிலத்தைத் தேடி இடம்பெயர்ந்துள்ளனர். அல்லது விவசாய உரிமைகளுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொண்டு கூலித் தொழிலாளர்களாக அவர்கள் மாற வேண்டியிருந்தது. வெளியேற்றப்பட்ட இந்த மக்கள் வேலை தேடி (மாநிலத்தின் பூர்வகுடிமக்களின் கோட்டை என்று கூறப்படும்) மேல் அசாமுக்குப் பயணம் செய்யும்போது அவர்கள் சட்டவிரோத வங்கதேசக் குடியேறிகளாகப் பார்க்கப்படுகிறார்கள். இந்தப் பார்வை அசாமிய அரசியல் சொல்லாடலில் ஆழமாகப் பதிந்துள்ளது. லச்சித் சேனா, ஜாதியதபாதி யுவ சத்ரா பரிஷத், அனைத்து அசாம் மாணவர் சங்கம் போன்ற அசாமிய மையநீரோட்ட தேசியவாத அமைப்புகள், அவர்கள் தங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க வந்ததைப் போல அவர்களை அவமானத்திற்கு ஆளாக்குகின்றனர்.
மறுபுறம், அரசாங்க ரீதியான வழிமுறை எதுவும் இல்லாமல், வெளியேற்றப்பட்ட மக்கள் பல இடங்களிலும் சுற்றித் திரிவார்கள். இறுதியில் புதிய சார் அல்லது ஒதுக்கப்பட்ட காடுகள் அல்லது வனவிலங்கு சரணாலயங்களின் உட்புறங்களில் குடியேறுவார்கள். உடனே இப்படிக் குடிபெயர்ந்தவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். அப்போது அவர்கள் வேறு பகுதிக்கு இடம்பெயர்கிறார்கள். கீழ், மேல் அசாம் பகுதிகளிலிருந்து பூர்வகுடியினரும் பூர்வகுடிகள் அல்லாதோரும் பெரிய அளவில் மாநிலத்திற்குள் மேற்கொள்ளும் இடப்பெயர்வுகள் கடந்த முப்பது ஆண்டுகளாகச் சமகால அசாமின் மோசமான யதார்த்தமாக உள்ளது.
இடம்பெயர்ந்த பூர்வகுடி விவசாயிகள் இப்போதும்கூடத் தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக்கொண்டு, நிலத்தின் மீதான நிரந்தர உரிமைப் பாதுகாப்பிற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல முடியும். ஆனால், கிழக்கு வங்காளத்திலிருந்து இடம்பெயர்ந்து வரும் விவசாயிகளின் சுமை இரண்டு மடங்கு கடினமானது. எனவே, அவர்களின் இடப்பெயர்வுகள் குறிப்பிட்ட காலச் சுழற்சிகளில் தொடர்கின்றன. சில சமயங்களில் நதியாலும் சில சமயங்களில் அவ்வப்போதைய அரசாங்கத்தாலும் நிர்ப்பந்திக்கப்பட்டு இடம்பெயர்கிறார்கள். இந்தச் செயல்முறையில் அரசியல் அணிதிரட்டல்களுக்கான காரணங்கள் உருவாகின்றன. "நில ஜிஹாத்"தில் ஆவேசமாக ஈடுபடும், நிலத்தை அபகரிக்கும் வெறி கொண்ட நாடோடிச் சமூகமாகவும் இன மோதல்களைத் தூண்டுபவர்களாகவும் அவர்கள் மீது களங்கம் சுமத்தப்படுகிறது.
அசாமில் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டின் அண்மைக்காலக் கணக்கெடுப்பு, 1.9 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இந்தியக் குடியுரிமையிலிருந்து விலக்கியது. இந்த யதார்த்தங்களின் கோரிக்கைகளுக்கும் இதில் பங்கு இருக்கிறது.
இந்தப் பின்னணியில், ஆழமாகிவரும் விவசாயச் சந்தை இணைப்புகள், அதிகரித்துவரும் நிலத் தேவைகளின் புதிய கட்டத்தை உருவாக்கி, அதன் விளைவாக, இனம் சார்ந்த உரிமைகோரல்களையும் மோதல்களையும் உருவாக்கியுள்ளன. பொருளாதார, இயற்கைப் பேரழிவுகளின் தாக்கங்களைத் தணிக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பொதுவான நிலங்கள் அல்லது சமூக நிலங்கள் அரிப்புகளால் அதிக அளவில் குறைந்துவருகின்றன. காலனித்துவ காலத்திலிருந்தே தேயிலை நிறுவனங்களும் எண்ணெய் நிறுவனங்களும் ஏராளமான நிலங்கலைத் தம் வசம் வைத்திருக்கின்றன. இதனால், நிலப் பயன்பாடு தொடர்பான அணுகுமுறையை மாற்றுவதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைத்துள்ளது.
இருப்பினும், 1970களிலிருந்து, குறிப்பாக மேல் அசாமில், சிறிய தேயிலைத் தோட்ட இயக்கம் இடம்பெயர்ந்த, வெளியேற்றப்பட்ட மக்களுக்கான இந்தப் பொது இடங்களை அவர்கள் பயன்படுத்த முடியாதபடி செய்துள்ளது. இந்தப் பொது இடங்களைத் தேயிலைப் பயிருக்காகச் சிறிய தொழிலதிபர்கள் பயன்படுத்திக்கொள்ளும் நிலையில், நிலப் பற்றாக்குறையின் புதிய அத்தியாயம் உருவெடுத்துள்ளது. கீழ் அசாமில் சார்களில் வசிப்பவர்களின் பயணமும் சந்தையுடனான அவர்கள் தொடர்பும் மாறுபட்டது. சார்களில் குடியிருப்பவர்கள் தங்கள் உள்ளூர் மாவட்டங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள இந்த சார்களுக்கு வந்தபோது, அவர்கள் உள்ளூர் சமூகத்திடமிருந்து நிலத்தை வாங்கி, விவசாயம் செய்வதற்காகத் தங்கள் நிலத்தைப் பண்படுத்திக்கொண்டார்கள். சார்களில் வெள்ளம் பெருக்கெடுப்பதற்கு நான்கு முதல் ஐந்து மாதங்கள்வரை இருக்கும் குறுகிய காலகட்டத்தில், கோடையின் தொடக்கத்தில் நெல்லுடன் கடுகு அல்லது சணலைப் பணப்பயிராக வளர்ப்பார்கள்.
என்றாலும், 1980களிலிருந்து, அவர்கள் வணிக ரீதியாகப் பயிரிடக்கூடிய காய்கறிகளுக்கு மாறி, சாகுபடிக்கும் சந்தைக்கும் இடையில் மேலும் நிலையான இணைப்பை உருவாக்கினார்கள். முட்டைக்கோஸ், காலிஃபிளவர், மிளகாய், கத்தரி, ஆகியவற்றுடன் பல்வேறு வகையான கீரைகளும் அவர்களின் சாகுபடி முறையில் அதிகமாக இடம்பிடித்தன. குறைவான உழைப்பே தேவைப்படும் என்பதால் அண்மைக் காலத்தில் மக்காச்சோளம் பணப்பயிராக முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறைந்த உழைப்பு என்பதால் இரட்டிப்பு லாபம். அவர்களின் வாழ்க்கைச் சூழல் உறுதியற்றதாகவும் அவர்களுடைய நிலமும் அதன் மீதான உரிமையும் நிலையற்றதாகவும் இருந்தாலும், சந்தை ஓரளவு லாபத்தையும் காலப்போக்கில் செழிப்பையும் அளிக்கிறது. ஆனால், பூர்வ குடிமக்களுக்கும் அவர்களிடமிருந்து இந்த சார் நிலங்களை வாங்கிய புதிய குடியேறிகளுக்குமிடையே இது விரோதத்தை உருவாக்குகிறது.
சுய நுகர்வுக்காகச் செய்யப்படும் விவசாயம் எந்த லாபத்தையும் செழிப்பையும் தருவதில்லை என்பதால், அசாமிய மொழி பேசும் இம்மண்ணின் பூர்வ குடிமக்கள் இந்தியாவின் பெருநகரங்களுக்கு அதிகமாக இடம்பெயரத் தொடங்கினார்கள். சார்களில் உள்ள மக்கள் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள், அல்லது இவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். புலம்பெயர்தலில் உருவான இந்தப் புதிய வலைப்பின்னல்கள் விவசாய முதலீடுகளுக்காக ஓரளவு பணத்தை மாநிலத்துக்குள் கொண்டுவந்தன. ஏற்கெனவே உள்ள பணப்பயிர் உற்பத்தி முறைகளுடன் இந்த முதலீடுகள் பிரதான நிலப்பரப்பை விட சார் பகுதிகளில் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கோவிட்-19 பொதுமுடக்கத்தின்போது திரும்பி வந்த புலம்பெயர்ந்தோர் சமீபத்தில் வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு பொதுமக்களிடையே புழங்கும் கதையாடல்களில் "நில ஜிஹாத்" பற்றிய பதற்றம் கூடுதல் இடத்தைப் பெற்றுள்ளது. ஆளும் பாஜக, இங்குள்ள பூர்வகுடிமக்களுக்கான தொழில்முனைவு இலக்காகக் கருதப்படும் "ஆத்மநிர்வாரதா" (தற்சார்பு) என்னும் பிரச்சினையை முன்வைத்து 2021 அசாம் சட்டமன்றத் தேர்தலில், வாக்குகளைத் திரட்டியது. தோல்பூரில் மக்கள் வெளியேற்றப்பட்ட நிலங்கள், பணப்பயிர்களைப் பயிரிடுவதற்காக அதே பகுதியில் அரசு நடத்தும் விவசாயத் திட்டத்திற்கு வழங்கப்பட்டன. அசாமின் மாறிவரும் கிராமப்புற அரசியல் பொருளாதாரம், புதிய காலநிலை அச்சுறுத்தல்களுடன் சேர்ந்து, புதிய இன மோதல்களுக்கும் ரத்தக்களரிக்குமான அடித்தளத்தை அமைக்கிறது.