இந்தியா மாறிவருகிறது. ஆனால் அனைத்து இந்தியர்களும் முன்னேற முடியவில்லை. விரிவடைந்துவரும் சமத்துவமின்மை, தன் குடிமக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதில் அரசின் தோல்வி, குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிற வகையான பொருளாதாரப் பற்றாக்குறைகள் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக் கதையின் பகுதிகளாக உள்ளன. சுதந்திர இந்தியாவின் வரலாறு முழுவதும் வறுமை ஒழிப்பு நலத்திட்டங்களின் சில வடிவங்கள் அமலில் இருந்துவருகின்றன என்றாலும் அவை குறைந்த அளவிலான தாக்கத்தையே கொண்டிருந்தன. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான மறுவிநியோகத்தின் முக்கியத்துவம் கடந்த இரண்டு பதிற்றாண்டுகளில் மட்டுமே சமூகக் கொள்கைச் செயல்திட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது. மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் பல்வேறு சுயாதீன முன்முயற்சிகளுக்கு இணங்க, 2000களின் முற்பகுதியில் "உரிமைகள் அடிப்படையிலான" சட்டச் சீர்திருத்தங்கள் - உணவு, வேலை, கல்வி ஆகியவற்றுக்கான உரிமை - சமூக நலத் திட்டங்களை நாட்டின் பொதுக் கொள்கைச் சொல்லாடலில் மையப்படுத்தின. சமூக ஓய்வூதியங்கள், மகப்பேறு சலுகைகள், வீட்டுவசதி, சமையல் எரிவாயு மானியங்கள், விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற பண உதவி ஆகிய திட்டங்களின் விரிவாக்கம், சமூக நலப் பலன்களின் வரிசையில் மேலும் பலவற்றைச் சேர்த்துள்ளது. இந்தத் திட்டங்களால் தேர்தலில் கிடைக்கும் பலன்களின் முக்கியத்துவமும் கூடியிருக்கிறது.
பிரபு பிங்கலியுடன் இணைந்து அண்மையில் நான் எழுதிய ‘இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு வலைகளின் எதிர்காலம்: குவிமையம், வடிவம், வாய்ப்பு’ (The Future of India’s Social Safety Nets: Focus, Form, and Scope) என்னும் புத்தகத்தில் அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஆய்வுசெய்திருக்கிறோம். கடந்த 75 ஆண்டுக் கால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, ரத்து செய்யப்பட்டன, மறுசீரமைக்கப்பட்டன. இவற்றின் மூலம் சமூக ஆதரவை வழங்குவதில் இந்தியாவின் செயல்திறனை இந்த நூலில் மதிப்பீடு செய்திருக்கிறோம். சமூகக் கொள்கை வடிவமைப்பிற்கான எதிர்காலச் சவால்களையும் நாங்கள் இந்த நூலில் கணித்திருக்கிறோம்.
சமூக நலத் திட்டங்களை ஒரு தனிநபரின் வாழ்க்கைச் சுழற்சியில் அவருக்கு ஆதரவளிக்கும் "அமைப்பு" எனக் கருத வேண்டும் என்பது எங்கள் வாதத்தின் அடிப்படைக் கருத்து. இத்தகைய அமைப்பு, எந்தத் தவறும் செய்யாத ஒருவர் சூழல் காரணமாகத் தன்னுடைய வளர்ச்சித் திறன்களுக்குக் கீழே சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வதை உறுதிசெய்கிறது. ஒரு பொருளாதாரத்தின் மாறிவரும் பொருளாதாரக் கட்டமைப்பையும் வளர்ச்சிக்கான சவால்களையும் கருத்தில் கொண்டு சமூக நலக் கொள்கைகளை அவற்றின் குவிமையம் (பயனாளிகள்), வடிவம் (பணம், உணவு, முதலிய நலத்திட்ட வழிமுறைகள்), வாய்ப்பு (வளர்ச்சி இலக்குகள்) ஆகியவற்றின் அடிப்படையில் கவனமாக வடிவமைக்க வேண்டும் (அட்டவணை 1ஐப் பார்க்கவும்). எனவே, நலத்திட்டக் கொள்கைகளை, மக்களின் தற்போதைய பற்றாக்குறைகளையும் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய போதாமைகளையும் எதிர்கொள்வதற்காக, "குறைந்தபட்ச சமூகத் திட்டத்தை" உறுதிசெய்யும் விதத்தில் வடிவமைக்க வேண்டும். இந்திய வறுமை குறித்த விவாதங்கள் தனிநபர் உட்கொள்ளும் கலோரிகள், அவருக்குக் கிடைக்கும் பணம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன, மானுடச் செழுமையின் சாத்தியக்கூறுகளின் அளவுகோல் என்ற முறையில் இவற்றின் சாத்தியப்பாடுகள் குறுகியவை. சமூகப் பாதுகாப்பு வலைகள், அபாயங்களுக்கும் பாதிப்புகளுக்கும் எதிரான பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுவதன் மூலமாகவும், சமூக அதிகாரமளித்தல் மூலமாகவும் தற்போதைய பற்றாக்குறைகளிலிருந்தும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்தும் தனிநபர்களை விடுவிக்க முடியும் என்று நாங்கள் வாதிடுகிறோம். எனவே வறுமையைக் குறைப்பதற்கான சாத்தியப்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும் என்கிறோம்.
அட்டவணை 1: இந்தியாவின் பெரிய சமூக நலத்திட்டங்கள்
குவிமையம், வடிவம், வாய்ப்புக்கான களம்
சமூக நலக் கொள்கைகளின் குவிமையம், வடிவம், நோக்கம் ஆகியவை மக்களுக்குத் தேவையான வளங்கள் கிடைக்காமல் இருப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட குறிப்பான செயல்பாடுகளாக அல்லாமல், பஞ்சம், பசுமைப் புரட்சியால் கிடைத்த உபரி உணவு தானியங்கள், நிதிக் கடப்பாடுகள் அல்லது சிவில் சமூகம் தந்த அழுத்தம் முதலான தேவைகளிலிருந்து வெளிப்பட்டவை என்று இந்தப் புத்தகத்தில் நாங்கள் வாதிடுகிறோம்.
வரைபடம் 1இல், இரண்டாம் உலகப் போரின்போது பொது விநியோக முறை மூலம் நகரங்களுக்கு உணவு ரேஷன் அறிமுகப்படுத்தப்பட்டதில் தொடங்கி, மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களைக் காலவரிசைப்படி நாங்கள் குறித்துள்ளோம். பொது விநியோக முறை ஆரம்ப நாட்களில் அதன் "நகர்ப்புறச் சார்பு" காரணமாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் பசுமைப் புரட்சித் தொழில்நுட்பங்களால் இந்தியா உணவுத் தன்னிறைவு அடைந்ததால் படிப்படியாக இது கிராமப்புறங்களுக்கும் விரிவடைந்தது (நகர்ப்புறங்களின் மீதான கவனம் குறைந்தது). அதே நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியான வறட்சி காரணமாக, கிராமப்புற வேலைவாய்ப்பை வழங்குவதற்காக 1973இல் மகாராஷ்டிர வேலை உறுதித் திட்டம் உருவாக்கப்பட்டது (இதன் அடிப்படையில்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2004இல் உருவாக்கப்பட்டது). 1970களின் பிற்பகுதியில் உணவு உற்பத்தியில் உபரி இருந்தபோது மகாராஷ்டிர வேலை உறுதித் திட்டம் படிப்படியாக அதன் முக்கியத்துவத்தை இழந்தது. பொது வினியோகத் திட்டத்தின் செயல்முறைகளில் அதிகப்படியான ஊழலும் கசிவுகளும் ஏற்பட்டதால் 1980, 1990களில் அதன் செயல்திறன் படிப்படியாகக் குறைந்துவிட்டது. ஏழைகளை இலக்காகக் கொண்ட ஆதரவுத் திட்டமாக 1997இல் இது மறுவடிவமைக்கப்பட்டது.
இந்தியக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருந்தபோதிலும், ஊட்டச்சத்தை மேம்படுத்துவது 1970களின் நடுப்பகுதிவரை அரசின் கொள்கைத் திட்டத்தில் இடம்பெறவில்லை. ஊட்டச்சத்தைக் குறைபாட்டைப் போக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரே திட்டமான ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (ICDS), 1975இல் நாட்டின் ஒரு சில பகுதிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மோசமாக அமல்படுத்தப்பட்டதால் அதன் பலன் குறைவாகவே இருந்தது. 2000களில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தபோது, குழந்தைகளிடத்தில் தொடர்ந்து அதிகரித்துவந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டின் விளைவுகள் குறிப்பிடத்தக்க அளவில் அரசியல் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. இதனால் ICDS திட்டம் விரிவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. தொடக்கக் கல்விக்கான ஊட்டச்சத்து ஆதரவுக்கான தேசியத் திட்டம் (NP-NSPE) 1995ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்வரை பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசியின் மீது கவனம் இல்லாமல் இருந்தது. இது பிறகு மதிய உணவுத் திட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டது. அரசுப் பள்ளிகளில் கட்டாய உணவு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினால் இந்தத் திட்டம் மேம்படுத்தப்பட்டது.
வரைபடம் 1: இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு வலைகளின் பரிணாம வளர்ச்சி - வடிவம், குவிமையம், வாய்ப்புக்கான களம்

1990கள்வரை, சமூக நலக் கொள்கை உணவுப் பாதுகாப்பை மையமாகக் கொண்டிருந்தது. வறுமைக் கோடுகூட "குறைந்தபட்ச கலோரி தேவை"யின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது. கிராமப்புறப் பகுதிகள், உணவுப் பாதுகாப்பின் வரம்புக்குட்பட்ட வளர்ச்சி சாத்தியப்பாடு ஆகியவற்றின் மீதே கொள்கை வகுப்பின் கவனம் இருந்தது. இந்தியப் பஞ்சங்களின் (காலனியாதிக்கக் காலத்திலிருந்து) அனுபவங்களே பெருமளவில் இதற்குக் காரணம். ஊட்டச்சத்துக் குறைபாடு, வாழ்வாதாரப் பாதுகாப்பின்மை, சுகாதார விளைவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாத நிலை பொருளாதாரத் திட்டமிடலில் முக்கியமான விடுதலாக இருந்தது. நகர்ப்புற வறுமைக்கான காரணத்தைப் புறக்கணித்தது சமூகக் கொள்கைகளின் குறுகிய சாத்தியப்பாடுகளை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
1990களின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இந்தியக் குடிமக்களுக்கு இருந்த குறுகிய அளவிலான சமூகப் பாதுகாப்பை மேலும் குறைத்தது. நிதி விவேகம் சார்ந்த கருத்துக்களின் காரணமாகப் பொது வினியோகத் திட்டம் ஏழைகளை மட்டும் இலக்காகக் கொண்ட திட்டமாக மறுவடிவமைக்கப்பட வேண்டியதாயிற்று. இதன் விளைவாக, 1997இல் முதன்முறையாக, குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே, வறுமைக் கோட்டிற்கு மேலே என வகைப்படுத்தப்பட்டன. குடிமக்களின் ரேஷன் அட்டைகளில் இந்தப் பாகுபாடு அடையாளப்படுத்தப்பட்டது. 2013ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA), மூலம், "முன்னுரிமை" பெற்ற குடும்பங்களுக்கும் "முன்னுரிமை அல்லாத" குடும்பங்களுக்கும் பொது வினியோகத் திட்டத்தை விரிவுபடுத்தியதன் மூலம் வறுமைக் கோடு சார்ந்த வேறுபாடு, சில மாநிலங்களைத் தவிர, அரசு கொள்கை மையத்தின் குறியீடாகத் தொடர்கிறது. சுதந்திர இந்தியாவின் முதல் ஐம்பது ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டிருந்த சிறிய அளவிலான ஊழியர்களைத் தவிரப் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 1995ஆம் ஆண்டில், தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP) முதியோர், விதவைகள், ஊனமுற்றோருக்கான பங்களிப்பு அல்லாத சமூக ஓய்வூதியம் என்ற யோசனையுடன் நலத் திட்டங்களின் வடிவத்தையும் நோக்கத்தையும் விரிவுபடுத்தியது. எனினும், TPDS போலவே NSAPயும் குறிப்பிட்ட பிரிவினரை இலக்காகக் கொண்ட திட்டமாக இருந்தது (இது வறுமைக் கோட்டிற்குக் கீழே இருந்த குடும்பங்களை இலக்காகக் கொண்டது). இந்தத் திட்டம் மோசமாகச் செயல்படுத்தப்பட்டது. மிகக் குறைந்த அளவிலான பண உதவியை மட்டுமே (வெறும் ரூ.200) இது அளித்தது. ஒரு சில மாநிலங்கள் சமீபத்தில் ஓய்வூதியத் தொகையை உயர்த்தியிருந்தாலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு ஓய்வுக் காலத்தில் (அல்லது ஓய்வு பெறும்போது) கண்ணியமான வாழ்க்கை என்பது கைக்கு எட்டாததாகவே உள்ளது.
நாட்டின் ஒரு பகுதியில் கடுமையான வறட்சியால் ஏற்பட்ட பட்டினிச் சாவுகளுக்குப் பிறகு, 2001ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்திற்கு எதிராக சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (PUCL) ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தது. இதன் விளைவாக இந்திய உச்ச நீதிமன்றம் புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள அறிவுறுத்தியது. அரசைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், MDMS, ICDS ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து பிரச்சினையின் மீது உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் இந்த திட்டங்களை மற்ற நன்மைகளுடன் இணைத்து "உணவுக்கான உரிமையாக" மேலும் வலுப்படுத்தியது. இந்தச் சட்டம் 2005இல் "வேலை செய்வதற்கான உரிமையை" சட்டப்பூர்வ உத்தரவாதமாகக் கொண்ட கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தைப் (NREGA) பின்பற்றியது.
2008ஆம் ஆண்டில், இந்திய அரசு வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு மானியத்துடன் கூடிய உடல்நலக் காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா (RSBY) என்ற புதிய நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதிகரித்துவரும் முறைசாராத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். 2018ஆம் ஆண்டில், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) எனப் பெயர் மாற்றப்பட்ட RSBY திட்டம் மேலும் கூடுதல் பயனாளிகளை உள்ளடக்கியது. விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற பண உதவியை வழங்கிய இந்தத் திட்டம் நாட்டின் சமூகக் கொள்கையில் முக்கியமானதொரு மைல்கல்லாக அமைந்தது. இதே நேரத்தில், சமையல் எரிவாயு, மின்சாரம், வீடுகள் போன்றவற்றுக்கான மானியங்களைப் பயனாளிகளுக்குத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நேரடியாக வழங்குதல் என்னும் குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்பட்டது (இது புதிய நலத்திட்ட அணுகுமுறை என்றும் குறிப்பிடப்படுகிறது).
இந்த வரலாற்றுக் கண்ணோட்டம், சமூக நலக் கொள்கையின் பரிணாம வளர்ச்சி பெற்றுவரும் குவிமையம் (பிபிஎல் குடும்பங்கள் என்பதைத் தாண்டி யோசிப்பது, வறுமையைத் தனித்த நலத்திட்ட நோக்கமாகக் கொள்வது), வடிவம் (உணவு அல்லது வாழ்வாதார அடிப்படையிலான சமூக உதவியிலிருந்து பணப் பரிமாற்றங்களை நோக்கி நகருவது), வாய்ப்பு அல்லது சாத்தியப்பாடு (உணவுப் பாதுகாப்பு போன்ற வறுமையின் அறிகுறிகள் அல்லது ஊட்டச்சத்து, வாழ்வாதாரத்திற்கான ஆதரவு ஆகியவற்றிலிருந்து பேரழிவை உருவாக்கும் சுகாதார அதிர்ச்சி முதலான வறுமைக்கான காரணிகளை நோக்கித் திரும்புவது) ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பல மாநில அரசுகள் புதுமையாக யோசித்து, தங்களது தனித்துவமான வியூகங்கள் மூலம் சமூக நலத்திட்டங்களின் குவிமையம், வடிவம், சாத்தியப்பாடுகள் ஆகியவற்றை விரிவுபடுத்தியுள்ளன. இவை மத்திய அரசின் திட்டங்கள்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
"திட்டங்கள்" முதல் "அமைப்புகள்" வரை
இந்தியா தனது பெரும்பான்மையான குடிமக்களுக்குச் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான மாபெரும் கட்டமைப்பை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. எனினும் ஒருங்கிணைக்கப்படாத அதன் நலத்திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான பல பரிமாணங்கள் கொண்ட சவால்களுக்கான மேலோட்டமான தீர்வாகவே உள்ளது. பொருளாதார வளர்ச்சியும் அரசியல் ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் வேலையும் நாம் விரும்புவதைக் காட்டிலும் மெதுவாக நிகழ்கிறது என்று சொல்லலாம். இவை இரண்டும் இந்தியாவின் சமூகநலத் திட்டக் கட்டமைப்பை உருவாக்கினாலும், குடிமக்களின் பாதுகாப்பிற்கு அரசு உறுதியளித்து, பொது அமைப்புகள் ஏழைக் குடிமக்களை மரியாதையுடன் நடத்தினால் மட்டுமே சமூக ஜனநாயகத்தை அடைய முடியும். எனவே, குடிமக்களை மையப்படுத்திய பொது அமைப்புகள், மேம்பட்ட நலத்திட்ட வடிவமைப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றால் சமூக நலத் திட்டங்கள் வலுப்பெறும்போதுதான் சமூகப் பாதுகாப்பின் உண்மையான சாத்தியம் உருவாகும். தனித் திட்டங்கள் ஒரு தனிநபரின் வாழ்க்கைச் சுழற்சியில் ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு எதிரான குறுகிய கால ஆதரவை வழங்கக்கூடும் என்றாலும், மேம்பட்ட வாய்ப்புகளைப் பெறுவதன் மூலமும் நிறுவனங்களைச் செயல்படவைப்பதன் மூலமும் குடிமக்கள் நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் திறனை அதிகரிக்க முடியும் (படம் 2ஐப் பார்க்கவும்).
வரைபடம் 2: நெருக்கடியிலிருந்து மீள உதவும் பொருளாதாரப் பாதுகாப்பு “அமைப்பை” நடப்பிலுள்ள சமூக நலத் “திட்டங்”களிலிருந்து கட்டமைத்தல்

பாதுகாப்பு வலைகள் தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவதில்தான் சமூக நலத்திட்ட அமைப்பின் வெற்றி பிரதிபலிக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பொருளாதாரம் வளர வளர அது பல சவால்களை எதிர்கொள்கிறது. வருமானப் பாதுகாப்பின்மை உணவுப் பாதுகாப்பின்மையைத் தீர்மானிப்பது வருங்காலத்தில் அதிகரிக்கும். நகர்ப்புற மக்கள்தொகையும் (அங்குள்ள ஏழைகளும்) கிராமப்புற மக்கள்தொகையையும் அங்குள்ள ஏழைகளைக் காட்டிலும் அதிகமாக இருப்பார்கள். எனவே, MGNREGS போன்ற திட்டங்களின் முக்கியத்துவம் குறைந்து, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டங்களும் சுகாதாரக் காப்பீடும் ஆகியவை முக்கியத்துவம் பெறக்கூடும். 2050ஆம் ஆண்டில், இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். இதனால் சமூக ஓய்வூதியம் அதிகமாகத் தேவைப்படும். தண்ணீர், கழிப்பறைகள் தொடர்பான முதன்மைத் திட்டத்தை அரசு விரிவுபடுத்தியுள்ளபோதிலும், பாலினம், சாதி ஆகியவை தொடர்பான சமூக விதிமுறைகள் எந்த அளவுக்கு "அகற்ற முடியாதவையாக" இருக்கின்றன என்பதையும் பொது வாழ்க்கையிலிருந்து அவை குறைகின்றனவா என்பதையும் பொறுத்தே ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதில் முன்னேற்றம் ஏற்படும். எனவே, பொருளாதார, சமூகக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், பதுங்கியிருக்கும் துன்பங்களை எதிர்கொண்டு மீண்டெழுவதற்கான திறனைக் குடிமக்களிடத்தில் (ஏழைகளும் ஏழைகள் அல்லாதவர்களும்) உருவாக்க வேண்டுமானால் பொருளாதாரப் பாதுகாப்பு அமைப்பின் குவிமையம், வடிவம், சாத்தியப்பாடு ஆகியவற்றைத் தொடர்ந்துமாற்றியமைத்துவர வேண்டும். வரவிருப்பதைக் கணித்து அதற்கேற்ப முன்கூட்டியே கொள்கை மாற்றங்களைச் செய்வது கடந்த காலத்தின் பல தவறுகள் மீண்டும் நிகழாமல் தவிர்க்கும்.