இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பெரியதொரு போர் நிகழக்கூடிய ஆபத்துகள் பற்றிய உரையாடல்களில் தைவான் மீதான மோதலுக்கான சாத்தியக்கூறுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ராஸ் பாபேஜின் The Next Major War என்னும் புத்தகம் தைவான் மீதான சீனப் ஆக்கிரமிப்பை, அப்பகுதியில் பற்றி எரியக்கூடிய தீப்பொறியாக அடையாளப்படுத்துகிறது. இதர ஆய்வாளர்கள், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, பாதுகாப்பு ஆகியவை குறித்த கவலைகளை, தைவான், தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல், கொரிய தீபகற்பம் ஆகியவற்றின் – இவற்றை ஆசியாவின் "நான்கு ஃப்ளாஷ் பாயிண்ட்கள்" என்று பிரெண்டன் டெய்லர் குறிப்பிடுகிறார் - ஸ்திரத்தன்மை பற்றிய கேள்வியாக அடையாளம் காண்கிறார்கள். திடீரென வன்முறை மோதல் வெடித்துக் கிளம்பிம் வாய்ப்பு இந்த இடங்களில் அதிகம் என ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். இந்தக் கணக்குகளில், ஆசியாவின் மற்றொரு முக்கிய ஃப்ளாஷ் பாய்ண்டாக இருக்கும் இந்திய-சீன எல்லையின் முக்கியத்துவத்தை மூலோபாய வல்லுநர்களும் ஆய்வாளர்களும் சில சமயம் கவனிக்கத் தவறுகிறார்கள். மற்ற நான்கு இடங்களைப் போலல்லாமல் இது அண்மைக் காலங்களில் வன்முறை மோதல்களைக் கண்டுள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக மோதல் வெடிக்கக்கூடிய இடத்தைக் குறிப்பிட "ஃப்ளாஷ்பாயிண்ட்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளில் இந்த வார்த்தைக்கு இன்னும் குறிப்பன பொருள் உள்ளது. அமெரிக்கக் கடற்படைப் போர்க் கல்லூரியின் பேராசிரியர் திமோதி ஹோய்ட், ஃப்ளாஷ் பாயிண்ட்களில் குறிப்பான சில கூறுகள் உள்ளதாகச் சொல்கிறார்: "அரசியல், அண்மை, கற்பனையான பீதி." முதலாவதாக, இந்த இடங்களில் குறிப்பிடத்தக்க, நீண்டகால அரசியல் சர்ச்சை இருக்க வேண்டும்; இரண்டாவதாக, இந்த இடங்கள் இரண்டு பகை நாடுகளுக்கு அருகில் இருந்தால் அவை கூடுதலாகக் கவலையளிப்பவையாக மாறும்; மூன்றாவதாக, போரின் தீவிரத்தை அதிகரிக்கும் வகையில், அதிக சக்திவாய்ந்த நாடுகளும் போரில் ஈடுபடக்கூடிய அச்சுறுத்தலை இந்த இடங்கள் ஏற்படுத்துகின்றன.
இந்த வரையறையின்படி இந்திய-சீன எல்லை எல்லா விதங்களிலும் ஃப்ளாஷ் பாயின்ட்டாக உள்ளது. எல்லைத் தகராறு என்பது இரு நாடுகளுக்கும் இடையே நிலப்பரப்பு தொடர்பாக நீண்டகாலமாக நிலவிவரும் தகராறு. இது இறையாண்மை தொடர்பான பிரச்சினைகளைக் கொண்டுவருகிறது; இரு நாடுகளும் அருகருகே உள்ள நாடுகள் மட்டுமல்ல, அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகளும்கூட; கடைசியாக, இந்திய-சீன எல்லைத் தகராறு பிற வல்லரசுகளை, முக்கியமாக அமெரிக்காவை ஈடுபடுத்தக்கூடியதாக உள்ளது.
எல்லையில் பதற்றம்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பதற்றம் அண்மை ஆண்டுகளில் மிகவும் மோசமாகியிருக்கிறது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் மேற்குப் பகுதியில் நடந்துவரும் கிழக்கு லடாக் சிக்கல் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பது இதன் மிக முக்கியமான அம்சம். இந்தச் சிக்கல் நீண்ட காலமாக நீடிப்பதோடு, 1986-87இல் சும்டோராங் சூ நெருக்கடிக்குப் பிறகு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்பட்ட மாபெரும் மோதலின் பாதையிலேயே அமைகிறது. 2020, ஜூன் மாதம் இந்திய, சீனத் துருப்புக்கள் மோதிக்கொண்டன. இதில் பலர் உயிரிழந்தார்கள். இந்தியத் தரப்பில் இருபது பேர்; சீனத் தரப்பில் எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை. அதன் பிறகு இரு நாடுகளுக்கிடையே கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்தில் பத்தொன்பது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும் - கடைசிச் சுற்று 2023 ஆகஸ்டில் நடைபெற்றது – இந்த முட்டுக்கட்டையைத் தீர்ப்பதில் சிறிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
மோதலைத் தவிர்க்கும் வகையில் பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக சர்ச்சைக்குரிய ஐந்து பகுதிகளில் "தடுப்பு மண்டலங்கள்" உருவாக்கப்பட்டன. ஆனால் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் 2020ஆம் ஆண்டு மோதல்கள் நடந்த ஒரு இடத்தில் மட்டுமே படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பது குறித்த கவலைகளைப் பார்வையாளர்கள் வெளிப்படுத்துகிறார்கள். 2020 மோதலுக்கு முந்தைய பிரச்சினைக்குரிய இதர அம்சங்கள் தொடர்ந்து பதற்றமாகவே உள்ளன.
மேற்குப் பகுதியில் முட்டுக்கட்டை நீடிப்பதுடன், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் கிழக்குப் பகுதியிலும் பதற்றங்கள் உருவாகின்றன. 2022 டிசம்பரில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டரில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் யாங்சேயில் இந்திய, சீன ராணுவத்தினர் மோதிக்கொண்டனர். இப்பகுதியில் தனது உரிமைகோரல்களை வலுப்படுத்துவதற்கான சீனாவின் முயற்சிகள் புதிய வழிகளையும் வழிமுறைகளையும் மேற்கொள்ளவைக்கின்றன. மூலோபாய முக்கியத்துவமுள்ள பகுதிகளில் ஷியகாங் (xiaokang) "மாதிரி" கிராமங்களை உருவாக்குவது, இடங்களின் பெயர்களை மாற்றுவது, புதிய எல்லைச் சட்டங்களை வெளியிடுவது ஆகியவற்றில் சீனா ஈடுபடுகிறது. இந்த நடவடிக்கைகளின் மூலம் சீனா தனது படைகளுக்குக் கூடுதலான சட்டப்பூர்வப் பாதுகாப்பை வழங்குவதாக இந்தியா கருதுகிறது. எடுத்துக்காட்டாக, சீன இயற்கை வள அமைச்சகம் வெளியிட்ட சீன வரைபடத்தின் 2023ஆம் ஆண்டுப் பதிப்பு, இந்தியா தனது இறையாண்மைப் பிரதேசமாகக் கருதும் அருணாச்சலப் பிரதேச மாநிலம் முழுவதையும் அக்சாய் சின் பகுதியையும் சீன எல்லைக்குட்பட்ட பகுதிகளாகக் காட்டுகிறது.
விரிவடையும் மோதல்?
அரசியலும் அருகருகே இருக்கும் நிலையும் இந்திய-சீன எல்லையை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வன்முறை வெடிக்கக்கூடிய இடமாகத் தெளிவாகச் சுட்டிக்காட்டினாலும், மூன்றாவது அம்சத்தை ஆராய வேண்டியுள்ளது: இங்கே நடைபெறக்கூடிய மோதல்கள் இதர சக்திகளை, மிக முக்கியமாக அமெரிக்காவை இதற்குள் இழுக்குமா?
நேட்டோவில் உள்ள அமெரிக்காவின் கூட்டாளிகளைப் போலல்லாமல், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே கூட்டுறவு உடன்படிக்கை எதுவும் இல்லை. அதாவது, இந்திய-சீன எல்லையில் நடக்கக்கூடிய எந்தவொரு மோதலிலும் அமெரிக்கா தானாகவே தலையிடாது. எனினும், சீன அச்சுறுத்தல் குறித்து இரு நாடுகளுக்கும் உள்ள பொதுவான பார்வையின் காரணமாக இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கமாகிவருகின்றன.
2020இல் நிகழ்ந்த கால்வான் மோதல் இருதரப்பிலும் கட்டுப்படுத்தப்பட்டாலும், எல்லையில் சீனா மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து "நிகழ்நேர" உளவுத் தகவல்களை அமெரிக்கா பின்னர் இந்தியாவிற்கு வழங்கியதாக அந்த மோதலுக்குப் பிந்தைய செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்தியாவும் அமெரிக்க ஆயுதங்களைக் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் நிறுத்தியுள்ளது.
2023 பிப்ரவரியில் அமெரிக்க செனட் அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பகுதி என்று மீண்டும் உறுதிப்படுத்தும் இருதரப்புத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியது. அருணாச்சலப் பிரதேசத்தின் மீதான சீனாவின் உரிமைகோரல் அதன் "அதிகரித்துவரும் ஆக்கிரமிப்பு, விரிவாக்கக் கொள்கை”களின் ஒரு பகுதி என்றும் அத்தீர்மானம் கூறியது. தவிர, 2020இல் கிழக்கு லடாக்கில் முட்டுக்கட்டை தொடங்கியதிலிருந்து கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் நடந்துவரும் நிகழ்வுகளை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. எடுத்துக்காட்டாக, அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் (DoD) 2021 ஆன் ஆண்டின் அறிக்கை, "கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் கிழக்குப் பகுதியில் திபெத் தன்னாட்சிப் பகுதிக்கும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கும் இடையே உள்ள சர்ச்சைக்குரிய பகுதிக்குள்" குடிமக்களுக்கான 100 வீடுகளைக் கொண்ட கிராமம் கட்டமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டது. “எல்லைப் பதற்றங்கள் இந்தியாவை அமெரிக்காவுடன் மேலும் நெருங்கவைப்பதைத் தடுக்க சீன மக்கள் குடியரசு முயல்கிறது. இந்தியாவுடனான தங்கள் உறவுகளில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகளைச் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்” என்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் 2022ஆம் ஆண்டின் அறிக்கை கூறுகிறது.
2022ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு வியூகம், கிழக்கு சீனக் கடல், தைவான் நீரிணை, தென்சீனக் கடல், இந்தியா போன்ற நாடுகளுடனான சர்ச்சைக்குரிய எல்லைப்புறங்கள் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்குச் சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கு” அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று திட்டவட்டமாகக் கூறுகிறது.
அதிகரித்துவரும் சீன அச்சுறுத்தல், இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள இந்தியாவையும் அமெரிக்காவையும் இணைந்து செயல்படவைத்தது. மேம்பட்ட பாதுகாப்புத் தொடர்பு, தகவல்-பகிர்வு, குறிப்பாக முன்கூட்டி எச்சரிக்கை செய்யும் அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவை உள்ளிட்ட சில அம்சங்களில் இரு நாடுகளும் தங்கள் இருதரப்புக் கூட்டாண்மையை அதிகரித்துள்ளன. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே, குறிப்பாகப் பாதுகாப்பு உறவுகளில் வளர்ந்துவரும் நெருக்கம் சீனாவுக்கு அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. "இந்தியா அமெரிக்காவிடம் நெருங்கி அதன் மூலம் பலன்களைப் பெறும் என்றும், இரு நாடுகளும் கட்டுப்படுத்த விரும்பும் இலக்காகச் சீனா மாறும்" என்றும் சீனர்கள் சந்தேகிக்கிப்பதாக முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே கூறுகிறார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மையப்படுத்தும் குவாட் அமைப்பின் மூலமாகவும் (இதில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன) இதர அமைப்புகளிலும் சீனாவின் ஆதிக்கத்தைச் சமனப்படுத்தும் நோக்கத்துடன் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டுறவை அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த முயற்சிகள் அதிகாரப்பூர்வமாக விவரிக்கப்படவில்லை. உலக அளவில், வளர்ந்துவரும் அமெரிக்க-சீனா மூலோபாயப் போட்டியின் தீவிரம், இந்திய-சீன எல்லைப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்கிறது - குறிப்பாக, உருவாகிவரும் இந்தோ-பசிபிக் பாதுகாப்புச் சூழலின் பின்னணியில்.
உயர்ந்துவரும் கொதிப்பு
எந்த நேரமும் மோதல் வெடிக்கக்கூடிய இடம் என்ற முறையில் இந்திய-சீன எல்லைப் பகுதி அண்மைக் காலம்வரை ஏன் கவனிக்கப்படவில்லை? இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியமாகவே பரவலாகப் பார்க்கப்படுவது இதற்கு ஒரு காரணமாக இருக்கும் என்ற ஒரு அனுமானம் உள்ளது. வன்முறை மோதல் நிகழும் சாத்தியம் கொண்ட இதர நான்கு பகுதிகளும் கடல்சார் பகுதிகளைச் சேர்ந்தவை; பல பயனுரிமையாளர்களைக் கொண்டவை. இந்திய-சீன எல்லைப் பகுதியோ நிலம் சார்ந்தது. தவிர, இது இருதரப்புப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. நீண்ட காலமாகவே சர்வதேச சமூகம் இந்தியாவை தெற்காசியாவிற்குட்பட்ட ஒரு சக்தியாகவும், பாகிஸ்தானைச் சமனப்படுத்தக்கூடிய சக்தியாகவுமே கருதிவந்தது. அதனால்தான், 1962இல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போர் நிகழக் காரணமாக இருந்த இந்திய-சீன எல்லைப் பிரச்சினை உலகின் கவனத்தைப் போதிய அளவு பெறவில்லை. இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் உலகின் அணுகுமுறைகள் மாறிவிட்டன. இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதார வலிமை, பொருள் வளம்; இமயமலையிலும் (2017இல் டோக்லாம், 2022முதல் கிழக்கு லடாக், அருணாச்சலப் பிரதேசம்) இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் சீனாவின் இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தெரிவித்த வலுவான எதிர்ப்பு, சீனாவைச் சமனப்படுத்துவதில் இந்தியா பெரிய பங்கை வகிக்க முடியும் என்ற மேற்கத்திய நாடுகளின் நம்பிக்கை (கிழக்காசியாவில் கடல்சார் பகுதிகளில் பிரச்சினைக்குரிய மையங்களில் ஜப்பானையும் தென் கொரியாவையும் அமெரிக்கா நம்பியிருப்பதுபோல) ஆகியவை இந்த மாற்றத்திற்கான காரணங்கள்.
அமைதியான சகவாழ்வுக்குப் பதில் ஆயுதமேந்திய சகவாழ்வு நடைமுறையில் இருக்கும் நிலையில், இந்திய-சீன எல்லையில் அதிகரித்துவரும் பதற்றம் இந்தப் பிரச்சினைக்கு அண்மை வருங்காலத்தில் நிரந்தரத் தீர்வுகாண்பதைக் கடினமாக்குகிறது. இந்திய-சீன எல்லையில் உள்ள நிச்சயமற்ற நிலைகளையும் நிலவரங்களையும் பார்க்கும்போது, மற்றொரு மோதலுக்கான சாத்தியம் வலுவாகவே உள்ளது. அத்தகைய சூழ்நிலை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் ஊறு விளைவிப்பதுடன் இரு நாடுகளையும் தாண்டி இப்பகுதியிலிருள்ள அனைத்துப் பயனுரிமையாளர்களுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தும்.