ஊழல் குற்றச்சாட்டுக்கள்: இந்தியப் புகையிலை ஏல முறை விடுக்கும் எச்சரிக்கை

30/01/2023
IiT English Page

ஊழல் என்பது அரசு அதிகாரிகளிடையே பரவியிருக்கும் நோய் என்றும் வெளிப்படைத்தன்மையில் அரசு அடைந்துள்ள தோல்விகளைக் குறிக்கும் அடையாளம் என்றும் இந்திய மக்கள் நம்புகிறார்கள். இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்தியாவில் சிகரெட் புகையிலைக்கான ஏலத்தை ஒழுங்குசெய்யும் அரசு ஒழுங்காற்று ஆணையமான புகையிலை வாரியத்தின் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டுவரும் ஊழல் குற்றச்சாட்டுகள் மிகவும் இயல்பானவையாதாம். 2016ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் வாரியம் ஒழுங்குபடுத்திய ஏலங்களில் நான் களப்பணி மேற்கொண்டேன். தனியார் துறை புகையிலை வியாபாரிகளும் புகையிலை விவசாயிகளும் இத்தகைய குற்றச்சாட்டுகளைச் சுமத்திச் சந்தைகளில் அரசின் நடவடிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தியதை அப்போது காண முடிந்தது. சந்தைகளில் அரசு தலையிடக் கூடாது என்று சொல்லுமளவிற்குப் போகாதவர்கள்கூட, வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்றார்கள்.

எனினும், இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் கூடுதலான நோக்கங்கள் நிறைவேற உதவியாக இருக்கின்றன. இந்தியப் புகையிலைச் சந்தைகளில் புகையிலை வாரிய அதிகாரிகள் மீது சுமத்தப்படும் குறிப்பான ஊழல் குற்றச்சாட்டுகள், புகையிலை விவசாயிகளும் வணிகர்களும் அரசின் ஒழுங்காற்று நடவடிக்கைகளின் பரந்துபட்ட போக்குகள் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தப் பயன்படுகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகள் பரவுகையில், பல்வேறு நோக்கங்களைக் கொண்ட குழுக்கள் அரசியல் ரீதியாக அணிதிரள்வதற்கு இவை வழிவகுக்கின்றன. இந்தக் குழுக்கள் தங்களுக்கான நலன்களுடன் ஒத்துப்போகும் அம்சங்களில் தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசை வற்புறுத்துவதற்கு இந்தக் குற்றச்சாட்டுக்களைப் பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் சந்தை நிலவரங்களுக்குத் தீர்வுகாணாமல் ஊழலை ஒழிப்பதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், இத்துறையில் நிலவும் பெரிய பிரச்சினைகளுக்கான முழுமையான தீர்வுகளாக அமைவதில்லை.

80களின் நடுப்பகுதியில் புகையிலை வாரியம் சிகரெட் புகையிலைக்கான ஏலங்களை நடத்தத் தொடங்குவதற்கு முன்பு, இந்திய விவசாயிகள் புகையிலைக்கான தர நிர்ணயம், விலை நிர்ணயம் ஆகியவற்றுக்குத் தனியார் துறை வர்த்தகர்களையே நம்பியிருந்தார்கள். இது வர்த்தகர்கள் தங்களுக்குச் சாதகமாகத் தர நிலைகளையும் விலைகளையும் நிர்ணயிக்க வழிவகுத்தது. வணிகர்கள் விவசாயிகளுக்குப் பணம் தர மறுக்கும் அளவுக்கு அவர்களுடைய சுரண்டல் மோசமானனதாக இருந்தது. அதைத் தொடர்ந்து எழுந்த கூக்குரலுக்குச் செவிசாய்த்த வாரியம், சிகரெட் புகையிலைக்கான ஏலத்தை அரசே நடத்தும் நடைமுறையை அறிமுகப்படுத்தியது. புதிய ஏல முறையுடன், விவசாயிகள் தங்கள் புகையிலையைத் தர நிர்ணயம் செய்வதற்கு எளிய தர நிர்ணய முறையை வாரியம் அறிமுகப்படுத்தியது. ஏலத்தில் பங்கேற்பதற்கு முன் அனைத்துப் புகையிலை வியாபாரிகளும் விவசாயிகளும் தங்களிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என வாரியம் கூறியது. சிகரெட் புகையிலை தொடர்பான அனைத்து வர்த்தகச் செயல்பாடுகளையும் நடுவண் அமைப்பாக இருந்து ஒழுங்குசெய்தது. ஒவ்வொரு பரிவர்த்தனையின் எழுத்துப்பூர்வமான பதிவையும் அது பராமரிக்கிறது.

இந்தியப் புகையிலைத் துறையில் அரசின் தலையீடு அதிகரித்த பிறகு முன்பிருந்த நிலைமையில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது, முன்பு புகையிலை வியாபாரிகளின் விதிமீறல்கள் குறித்து விசாரணை செய்யுமாறு அரசுக்குக் கோரிக்கைகள் எழுந்தன. இன்று அரசு அத்துமீறித் தலையிடுவதாக வணிகர்கள் குரலெழுப்புகிறார்கள். புகையிலை வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதியான சிங்கையா காரு, புகையிலை வாரியத்தின் தர நிர்ணய அதிகாரிகள் புகையிலை மூட்டைகளுக்கு நிர்ணயிக்கும் தர அளவுகளைக் கண்காணிக்கும் பொறுப்பு தன் குழுவுக்கு இருப்பதை என்னிடம் விளக்கினார். தர அளவுகளைத் தவறான முறையில் கூட்டியோ குறைத்தோ நிர்ணைப்பதில் வாரியத்திற்கு நன்மைகள் உள்ளன என்று சிங்கையா காரு கூறுகிறார். ஒரு மூட்டைக்கு அதன் உண்மையான தரத்தைவிட அதிக தரத்தை நிர்ணயித்தால் வாங்குபவர்கள் மூட்டைக்கு அதன் உண்மையான மதிப்பைக் காட்டிலும் அதிக விலையைத் தர வேண்டியிருக்கும். விவசாயி குறைந்த ரகப் புகையிலைக்கு அதிக விலையைப் பெறுவார். அதே நேரத்தில், ஒரு மூட்டையைக் குறைந்த தரம் கொண்டதாகவும் வாரியம் நிர்ணயிக்க முடியும். ஏலத்தின்போது வாங்குபவரை இது குறித்து வாரியம் எச்சரிக்கும். எனவே வாங்குபவர் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். குறைந்த தரமுள்ள புகையிலையாகப் பதிவு செய்யப்பட்ட மூட்டை அதிக விலைக்கு விற்றதாகப் பதிவாகும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், அதிக விலைக்குப் புகையிலையை விற்றதற்காக மத்திய அரசிடமிருந்து வாரியம் பாராட்டுப் பெறும்.

சிங்கையா காருவின் கூற்று புகையிலை வியாபாரிகள் வாரியத்தின் மீது கொண்டிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. வியாபாரிகளின் நலன்களைக் காட்டிலும் விவசாயிகளின் நலனுக்கே வாரியம் முக்கியத்துவம் அளிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். “சில சமயங்களில் விவசாயிகள் புகையிலை வாரிய அதிகாரிகள்மீது செல்வாக்கு செலுத்துவார்கள்… ‘ஐயா, இதற்கு அதிக மதிபைப் போடுங்கள்’ என்று விவசாயி சொல்வார். ஆனால் அதிகரிகள் எங்கள் பரிந்துரையை ஏற்க மாட்டார்கள்.... புகையிலை வாரியத்தின்மீது எங்களால் செல்வாக்கு செலுத்த முடியாது" என்கிறார் ஏலம் நடக்கும் இடங்களில் நான் கேட்ட பெரும்பாலான ஊழல் குற்றச்சாட்டுகள் ஒரே மாதிரியான செவிவழிச் செய்திகளையும் அனுமானங்களையும் கொண்டிருந்தன. வதந்திகள் போலவே அவையும் காட்டுத்தீபோலப் பரவுகின்றன.

மறுபுறம், விவசாயிகள் தங்கள் சார்பாக வாரியம் மேலும் அதிகமாகத் தலையிட வேண்டும் என்று கருதுகிறார்கள். சந்தை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் அவர்கள் வருத்தப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவில் சிகரெட் புகையிலைக்கான கொள்முதல் சந்தையில் விற்பவர்கள் அதிகமாகவும் வாங்குபவர்கள் குறைவாகவும் இருக்கிறார்கள். வாங்குபவர்கள் விற்பவர்கள்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வாய்ப்பை இது உருவாக்குகிறது. ஒரு சில உள்நாட்டு நிறுவனங்களும் ஏற்றுமதியாளர்களும் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதனால் விலையை நிர்ணயிப்பதில் அவர்களுக்கு அபரிமிதமான அதிகாரம் கிடைக்கிறது. விலையை உயர்த்துவதில் வாரியத்தின் திறன் எல்லைக்குட்பட்டது. விவசாயிகளுக்கு நியாயமான விலையைத் தொடர்ந்து உறுதிப்படுத்த வாரியத்தால் முடியாது. இதன் விளைவாக, விவசாயிகள் குறைந்த விலையை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அல்லது நல்ல விலை வரும்வரை உற்பத்திப் பொருளைத் தம்முடனே வைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நல்ல விலை எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பொருளோ நாளாக நாளாகக் கெட்டுப்போகக்கூடியது. தங்கள் வருமானத்தைக் குறைப்பதில் புகையிலை நிறுவனங்கள் வகிக்கும் பங்கை விவசாயிகள் அறிந்திருந்தாலும், அவர்களும் தங்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள அரசுக்கு எதிராகவே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

புகையிலை வியாபாரிகள், விவசாயிகள் ஆகிய இரு தரப்பினரும் வாரியத்தின் மீதான தங்கள் சகாக்களின் அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் ரீதியாக அணிதிரண்டு அரசின் தலையீட்டைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ள முயல்கிறார்கள். இந்த நடவடிக்கைகளால் சந்தையின் பங்கேற்பாளர்களுக்குக் கிடைக்கும் சாதகம் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிறது. எடுத்துக்காட்டாக, 1980களில் வணிகர்களின் சுரண்டலுக்கு எதிரான விவசாயிகளின் புகார்களுக்குப் பதிலளிக்கும் வகையில் வாரியம் நேரடியான ஏல முறையை உருவாக்கியது. 2011இல் புகையிலை நிறுவனங்கள், விவசாயிகளின் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இணையவழி ஏல முறையை நிறுவியது. இந்தச் சீர்திருத்தம் தன் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதாக இரு தரப்பினரையும் கருதவைக்கும் என்று வாரியம் நம்பியது. அதன் பிறகு, வணிகர்களும் வாரிய அதிகாரிளும் கையடக்க மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி எந்தத் தரப்பினரும் அறியாத வகையில் ரகசிய ஏல முறையைப் பின்பற்றினார்கள். இந்த முறையில் வியாபாரிகள் அல்லது விவசாயிகளின் பெயர்கள் வெளிப்படுத்தப்படாது. விற்பனைப் பதிவுகளை அதிகாரிகள் மாற்றுவதைத் தடுக்கும் வகையில் இறுதி ஏலங்கள் மனிதத் தலையீடு இன்றித் தானியங்கி முறையில் பதிவு செய்யப்படும். இந்த முறையில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்தபோதிலும், இணையவழி ஏலங்கள் அரசு சார்ந்த ஊழலைக் கட்டுப்படுத்தியதாக இந்தச் செயல்முறையுடன் தொடர்புகொண்ட பெரும்பாலானவர்கள் - வாரிய அதிகாரிகள் உள்பட – என்னிடம் பேசியபோது ஒப்புக்கொண்டனர்.

என்றாலும், சந்தையில் போட்டியின்மை, விலைத் தேக்கம், விலைகளைத் தீர்மானிப்பதில் அரசுக்கு உள்ள திறனின் போதாமை போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் சந்தையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரத் தொழில்நுட்பத்தை நம்பியிருப்பதும் வணிகர்களுக்கு ஆதரவாகவே அமைந்தது. அரசுக்குப் போதிய திறன் இல்லை என்னும் கருத்தையும் இது தோற்றுவித்தது. இரு தரப்பினரும் அறியாத வகையில் நடக்கும் ஏல முறை வாங்குபவர்களிடையே போட்டியைத் தூண்டுவதற்கு உதவாது என்று மூத்த வாரிய அதிகாரி ஒருவர் விளக்கினார். அரசின் மேற்பார்வை குறைவாகிவிட்ட நிலையில் வாங்குவோர் கையடக்க மின்னணுச் சாதனங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு ஏலத்திலிருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதன் மூலம் விலையைக் குறைத்துவிடலாம்.

ஆக, அரசு அதிகாரிகளின் ஊழல் குறித்த குற்றச்சாட்டுக்கள், அரசின் பதிலளிக்கும் பொறுப்பைக் கோருவதைத் தாண்டியும் சில நோக்கங்களைக் கொண்டுள்ளன. குற்றம்சாட்டுபவர்கள் அரசுக்கு எதிரான அதிருப்தியைப் பறைசாற்றுவதுடன் அதை அரசியல் அணிதிரட்டல்களாக மாற்றுகிறார்கள். இது அரசுத் தரப்பினரை ஒழுங்குபடுத்தி, அரசின் திறனைக் குறைத்து, வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் அதன் செயல்பாட்டையும் குறுக்கிவிடுகிறது. இந்தியப் புகையிலைச் சந்தைகளைப் பொறுத்தவரை, இந்த நடவடிக்கைகள் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கான கோரிக்கைகளை அதிகரிக்கச்செய்துள்ளன. உள்நாட்டுப் புகையிலை நிறுவனங்கள் குறைவான செயல்திறன் கொண்ட அரசின் பாதுகாப்பை விரும்புகின்றன. புகையிலை விவசாயிகளின் குழுக்கள் நேரடி அன்னிய முதலீடு விஷயத்தில் பிளவுபட்டுள்ளன. நேரடி அன்னிய முதலீடு அதிகரித்தால் வாரியம் அமைக்கப்படுவதற்கு முன்பு இருந்த நிலை - விவசாயிகளும் சர்வதேச வர்த்தகர்களும் நேரடியாகத் தொடர்புகொள்ளும் நிலை – மீண்டும் உருவாகும். இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசு புகையிலைத் துறைக்குத் தந்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்திற்காகக் குரல்கொடுப்பவர்கள் முன்வைக்கும் கோரிக்கை வெற்றி பெறும். ஆனால் அவை பெரிய அளவிலான புகையிலை விவசாயிகளுக்கும் பன்னாட்டுப் புகையிலை நிறுவனங்களுக்கும் சாதகமாகிவிடும். விவசாயத்திற்குத் தேவையான அளவு தண்ணீரோ இலாபகரமான மாற்றுப் பயிர் தேர்வுகளோ இல்லாத நிலையில் சிறு புகையிலை விவசாயிகள்மீதும் விவசாயத் தொழிலாளர்கள்மீதும் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்படுத்தக்கூடிய நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

(கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் நபரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது)

அம்ரிதா ஏ. குரியன்

Author

அம்ரிதா ஏ. குரியன் ஒரு CASI நிறுவனத்தின் போஸ்ட் டாக்டோரல் ஆய்வாளர்.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்