இந்தோ-பசிபிக் பகுதியில் அனைவரையும் உள்ளடக்கும் காலநிலை கொள்கை

29/01/2024
IiT English Page

புவிசார் அரசியல் பலப்பரீட்சைகள், அதிகரித்துவரும் பதற்றங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், இந்தோ-பசிபிக் பகுதி உலகின் மிக முக்கியமான பொருளாதார, புவிசார் அரசியல் பிராந்தியங்களில் ஒன்றாக உள்ளது. 40 பொருளாதாரங்கள், உலக மக்கள்தொகையில் 65 சதவீதம் (சுமார் 4.3 பில்லியன் மக்கள்), $47.19 டிரில்லியன் மதிப்புள்ள பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவை இந்தப் பிராந்தியத்தில் உள்ளன. காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல் இப்பகுதியில் பெரியதாக வளர்ந்துள்ளது. இது பல லட்சக்கணக்கான உயிர்களை ஆபத்திற்கு உட்படுத்துவதுடன் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இப்பகுதியின் மூலோபாய முக்கியத்துவத்தையும் காலநிலை சார்ந்து நிகழக்கூடிய பாதிப்புகளையும் உணர்ந்து, உலகின் பல முக்கிய புவிசார் அரசியல் சக்திகள் – இந்தப் பிராந்தியத்திற்குள்ளும் அல்லது அதற்கு அப்பாலும் இருப்பவை - கடந்த பத்தாண்டுகளில் இந்தோ-பசிபிக்மீது கவனம் செலுத்தும் பாதுகாப்புச் செயல்திட்டங்களையும் கொள்கைத் திட்டங்களையும் உருவாக்கியுள்ளன. ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், தென்கொரியா, வங்கதேசம் உள்ளிட்ட இந்த சக்திகள் பலவும் காலநிலை பாதுகாப்பையும் அதன் பல்வேறு பரிமாணங்களையும் தங்கள் வியூகங்களில் இணைத்துள்ளன. ஆனால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலுள்ள மக்களின் பல விதமான தேவைகளும் சேர்க்கப்படாவிட்டால், புவிசார் அரசியல் கட்டமைப்பிற்குள் காலநிலை தொடர்பான சவாலை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறைபட்டதாகவே இருக்கும்.

குபெர்னெய்ன் முன்முயற்சியில் நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி, காலநிலை மாற்றத்தின் கூறுகளுக்கிடையே (வானிலை முறைகள், அடிக்கடி மற்றும் தீவிரமான இயற்கை ஆபத்துகள்) உள்ள தொடர்புகள் மனிதர்கள்மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி ஆராய்கிறது. நகர்ப்புற வளர்ச்சி, மக்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சார்ந்த "வழக்கமான" கவலைகள் ஆகியவை இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள மனிதர்கள்மீது ஏற்படுத்தும் தாக்கத்தின் மீது கவனம் செலுத்துகிறது. நிலநடுக்கங்களும் சுனாமிகளும் அடிக்கடி ஏற்படும் இந்தியப் பெருங்கடல் பகுதி "உலகின் அபாயப் பகுதி" என்று குறிப்பிடப்படுகிறது. கடல் மட்ட உயர்வு, கடல் அமிலமயமாதல், சூறாவளி, புயல், வெள்ளம், வறட்சி, வெப்ப அலைகள், பிற இயற்கைப் பேரழிவுகள் ஆகியவற்றின் தீவிர நிகழ்வுகள் ஆகியவை இப்பகுதியில் நிலவும் சவால்களில் அடங்கும். இவற்றைத் தாண்டியும் பல சவால்கள் உள்ளன. 2050ஆம் ஆண்டில், இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் காலநிலை மாற்றத்தால் நேரடியாகப் பாதிக்கப்படலாம், 2000ஆம் ஆண்டில் இருந்த நிலையிலிருந்து இது 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

"அச்சுறுத்தலை அதிகரிக்கும்" நிகழ்வாகக் காலநிலை மாற்றத்தைக் குறிப்பிடுவது இப்போது பரவலாகிவருகிறது. மனிதர்கள் இடப்பெயர்வு, வளங்கள் பற்றாக்குறை, பெருகிவரும் நகர்ப்புற மக்கள்தொகை, மனித ஆரோக்கியம், நல்வாழ்வு, வாழ்வாதாரம், பொருளாதாரப் பாதுகாப்பு, விவசாய உற்பத்தி, அதனுடன் தொடர்புடைய வாழ்வாதாரங்கள் எனப் பல்வேறு அம்சங்களில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை விவரிக்க இவ்வாறு கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உலகம் முழுவதும் பிடிக்கப்படும் மீன்களில் 50 சதவீதத்திற்கும் மேல் இந்தோ-பசிபிக் பகுதி உற்பத்தி செய்கிறது. மற்ற எந்தப் பகுதியையும்விட இது அதிகம். ஆனால், கடல் வெப்பமடைதல், உப்புத்தன்மையின் அளவுகள் மாறுதல் கடல் மட்ட உயர்வு ஆகியவை மீன்கள், நீர்வாழ் உயிரினங்களின் இருப்பையும் அவை கிடைப்பதையும் பாதிக்கின்றன. இது மீன்பிடித்தலைச் சார்ந்திருக்கும் சமூகங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. சட்டவிரோதமான, புகாரளிக்கப்படாத, கட்டுப்பாடற்ற முறையில் மீன்பிடித்தலையும் இது அதிகரிக்கச் செய்கிறது. இப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஏற்படும் சரிவு, பெண்கள்மீதும் மீன்பிடித்தலை நம்பியிருக்கும் விளிம்புநிலைக் குழுக்கள்மீதும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தலாம். உதாரணமாக, ஆசியாவில் மீன்வளர்ப்புத் தொழிலில் 72 சதவீதப் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. இதனால் அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது. மீன்வளர்ப்புத் தொழிலின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதில் பெண்களின் திறனையும் கட்டுப்படுத்துகிறது.

காலநிலை மாற்றத்தின் நாட்டின் எல்லைகளைக் கடந்த தன்மையை அங்கீகரிக்கும்போது, காலநிலை நடவடிக்கைக்கான கட்டாயமானது எந்த ஒரு தனிப்பட்ட அரசையும் சார்ந்ததல்ல என்பது தெளிவாகிறது. மாறாக, தனிப்பட்ட அரசுகள் மட்டுமன்றிப் பிராந்திய அமைப்புகளையும் அரசாங்கங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த, கூட்டு அணுகுமுறை இதற்குத் தேவைப்படுகிறது. பிராந்திய அளவிலான "சிறுதரப்பு"க் குழுக்கள் இவ்விஷயத்தில் பயனுள்ளவை என்பது நிரூபணமாகிவருகிறது. அனைவரையும் இணைத்துச் செயல்படுவது குறித்த யோசனைகளை உள்ளடக்கிய அணுகுமுறை இது. மரபார்ந்த முயற்சிகளில் மேலும் சமமான விளைவுகளை முன்னெடுக்க வேண்டுமானால், இப்பகுதியில் உள்ள பயனுரிமையாளர்களைப் பரந்துபட்ட அளவில் சேர்ப்பதைக் குறிக்கும் அணுகுமுறை இது. எடுத்துக்காட்டாக, பாதுகாப்பு, வெளிவிவகாரங்கள் உள்ளிட்ட அனைத்துக் கொள்கைகளின் ஒரு பகுதியாகப் பாலினம், சமத்துவம் பற்றிய அக்கறைகள் அமைவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் ஆசியானின் (ASEAN) பாலின முதன்மைக் கட்டமைப்பு போன்ற விதிகள் மூலம் ஓரளவு வெற்றி பெறுகின்றன.

பல்வேறு அரசுகள், பிராந்திய அமைப்புகள் ஆகியவற்றின் இந்தோ-பசிபிக் உத்திகளில் காலநிலை மாற்றம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது தெளிவாகிறது. எனினும், ஆபத்துகள் எங்கு உள்ளன, அவை யாரைப் பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் கணிசமான இடைவெளி உள்ளது. இது காலநிலை பாதுகாப்பில் ஒத்துழைப்பை முன்னெடுப்பதில் பின்னடைவுக்கு வழிவகுக்கிறது. பருவநிலை நிதி, இழப்பு, சேதம், கரிம உமிழ்வு குறைப்பு இலக்குகள் போன்றவற்றில் இந்தப் பிராந்தியத்தில் தொழில்மயமான, வளர்ந்துவரும் நாடுகளுக்கும், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்குமிடையே வேறுபாடுகள் உள்ளன. இது முன்னுரிமைப் பகுதிகளில் கருத்தொற்றுமை இன்மைக்கு வழிவகுக்கிறது. மக்களின் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டாலும் இந்த ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன. எடுத்துக்காட்டாக, இந்தப் பிராந்தியத்தில் மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றில் ராணுவத் திறன்களின் பயன்பாடு அதிகரித்துவரும்போதிலும், காலநிலை பாதுகாப்புடன் தொடர்புடையவற்றைவிட ராணுவப் பாதுகாப்பும் நாடுகளின் புவிசார் அரசியல் நலன்கள் தொடர்பான கவலைகளும் முன்னுரிமை பெறுகின்றன. பசிபிக் பகுதியில் செல்வாக்குப் பெறும் முயற்சியில் சீனாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பதற்றங்கள் காலநிலை நடவடிக்கை பற்றி விவாதிப்பதற்கான தொடக்கத்தை வழங்கியுள்ளன. ஆனால் புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதன் மூலமாகவே இதுவரை இந்த நடவடிக்கைகள் நடக்கின்றன. காலநிலை மாற்றத்தின் சிக்கலான விளைவுகள் போதுமான அளவில் வரையறுக்கப்படவில்லை. அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை என்னும் அளவுகோலின் அடிப்படையில் இந்த உத்திகளை மதிப்பிடும்போது, செல்ல வேண்டிய தொலைவு அதிகம் உள்ளதை அறிய முடிகிறது.

அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறை இன்மை
காலநிலை நடவடிக்கையில் அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறை இல்லாதது இரண்டு முக்கியமான வழிகளில் தெரிகிறது. பெண்கள்மீதும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள்மீதும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய பொருத்தமற்ற, மாறுபட்ட தாக்கத்தைக் கவனிக்காமல் இருப்பது இதில் முதலாவதாகும். பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கூறுகள் சமூக-பொருளாதார நிலையிலும் புவியியல் சார்ந்த இருப்பிடத்திலும் பரவியிருப்பதால் இந்தப் பிராந்தியம் முழுவதும் சவால்கள் நிறைந்த பகுதிகள் உருவாகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சமூகங்கள் அதிகரித்துவரும் கடும்புயல்களுடன் போராடுகின்றன. பசிபிக் பகுதியில் உள்ள சிறிய தீவுகள் கடல் மட்டம் உயர்வதால் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. பசிபிக் தீவுகள், வங்கதேசம் ஆகியவை உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கு முறையே 0.03 சதவிகிதம், 0.4 சதவிகிதம் என்னும் அளவிலேயே பொறுப்பாகின்றன. ஆனால் இவை பல்வேறு அடுக்குகளிலான விளைவுகளுடன் கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக ஃபிஜித்தீவு, கடல் மட்டம் உயர்வு, உப்புத்தன்மை அதிகரிப்பு ஆகியவற்றால் விவசாயத்திற்கு தகுதியற்ற மண் அதிகரித்ததன் காரணமாக 42 கிராமங்களை இடமாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளது. வங்கதேசம் வரும் பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் கடுமையான ஒரு சூறாவளியையேனும் எதிர்கொள்ளவிருக்கிறது.

இரண்டாவதாக, காலநிலை தொடர்பான பலதரப்பு முனைப்புகளில் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் குரல்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பில் பாலினம் சார்ந்த வேறுபாடுகளைக் காணத் தவறுவது அல்லது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்காத நடவடிக்கை காலநிலை சார்ந்த ஆபத்தைப் பெருகச்செய்யும். சில புவியியல் பகுதிகளுக்குள் விவசாயம், வள மேலாண்மை ஆகியவற்றில் பெண்கள் பெரும்பாலும் முக்கியப் பங்கு வகிக்கும் சமூகங்களில் இதன் தாக்கம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தாக்கம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு இது பயன்படுத்தப்படுவதில்லை. காலநிலை மாற்றம் இந்த நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதால், இது பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துத் தற்போதுள்ள பாலின ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்துகிறது. அது மட்டுமல்ல; இது தொலைநோக்கில் ஒரு அரசாங்கத்தின் பொருளாதாரப் பாதுகாப்புக்குக் கூடுதலான ஆபத்தை ஏற்படுத்துகிறது. பெண்களின் சமூகப் பொருளாதார நிலை பலவீனமாக இருக்கும் சமூகங்களில் இயற்கைப் பேரழிவுகளால் ஆண்களைவிடவும் பெண்களையே அதிகமாக உயிரிழக்கிறார்கள் என்று 2014ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் அதிகமாக உயிரிழப்பது நேரடியாகவும் பேரழிவுக்குப் பிந்தைய நிகழ்வுகள் மூலம் மறைமுகமாகவும் நடக்கிறது. எடுத்துக்காட்டாக, 2004இல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியால் இறந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். பாதிப்புக்குள்ளாகக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிச் சிந்திப்பதைக் கருத்தில் கொள்ளாத எந்தவொரு கொள்கையும் தொலைநோக்கில் தோல்வியடையும்.

பிராந்திய, உலகளாவிய செயல்முறைகள் உள்ளூர் சமூக பொருளாதார யதார்த்தங்களின் அடிப்படையில் அமைவதே சிறந்த வழியாக இருக்கும். காலநிலை மாற்றம் சார்ந்த நடவடிக்கை அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுவானதாக இருக்க முடியாது. ஒவ்வொரு பகுதியின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதில் அனுபவம் கொண்ட உள்ளூர் நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, இந்தோ-பசிபிக் முழுவதும் நடைபெறும் பலதரப்புகள் கொண்ட முனைப்புகளில் அனைத்துத் தரபினரையும் உள்ளடக்குவதை ஊக்குவிப்பது முக்கியமானதொரு அடிப்படையாக மாற வேண்டியிருக்கிறது. வெவ்வேறு இடங்களில் நிலவும் குறிப்பிட்ட சூழல்களைக் கணக்கில் கொள்ளும் அணுகுமுறை பரஸ்பர ஒத்துழைப்பை இயல்பாகக் கொண்டதாகவும் உள்ளூர், பிராந்தியக் கண்ணோட்டங்களைக் கருத்தில் கொண்டதாகவும் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை மற்றும் வர்த்தக மேம்பாட்டுக் கொள்கையானது உலகெங்கிலும் உள்ள அதன் வணிகக் கூட்டாண்மை நாடுகளில் செய்யும் முதலீடுகளில் 80 சதவீத பாலினச் சமத்துவத்தை உறுதிசெய்கிறது. அதன் அனைத்துத் திட்டங்களிலும் குறைந்தது பாதியாவது காலநிலை மாற்றத்தை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளன. இதுபோன்ற முயற்சிகள் பெண்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான காலநிலை மாற்றம் சார்ந்த நிதி இடைவெளியைக் குறைக்கலாம். இது முக்கியமான குறிக்கோள். ஏனெனில் உலகளாவிய நிதியுதவியில் சுமார் 0.01 சதவீதம் மட்டுமே காலநிலை மாற்றம், பெண்களின் உரிமைகள் ஆகிய இரண்டையும் நிறைவேற்றும் திட்டங்களை ஆதரிக்கிறது. ஆக்‌ஷன் எய்ட் ஆஸ்திரேலியா, மோனாஷ் பல்கலைக்கழகம், கிராமப்புற மற்றும் பழங்குடி சமூகங்களை ஆதரிக்கும் பெண்கள் தலைமையிலான சமூக இயக்கமான ஹுவைரோ கமிஷன் (Huairou Commission) ஆகியவற்றின் மூலம் ஆஸ்திரேலியா பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுவருகிறது. இவற்றின் மூலம் காலநிலை மாற்றத்திற்கான பாலினம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலியா அளிக்கும் ஆதரவு கூட்டு அணுகுமுறைக்கான முக்கியமான எடுத்துக்காட்டு.

கூட்டாண்மை
இந்தோ-பசிபிக்கின் சிக்கலான புவிசார் அரசியல் நிலப்பரப்பில் செயல்படுகையில், பாலின ஏற்றத்தாழ்வைக் களைதல், அனைவரையும் உள்ளடக்குதல் ஆகிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தும்போது, "பரிந்துரைக்கப்படும்" நிலைப்பாட்டைக் காட்டிலும் "கூட்டாண்மை"யை மையமாகக் கொண்ட முன்னுதாரணம் இன்றியமையாததாகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் காலநிலை தொடர்பான பலதரப்புச் செயல்பாடுகள் உள்ளூர் அபாயங்களையும் பாதுகாப்பையும் நன்கு அறிந்த உள்ளூர் பயனுரிமையாளர்களுடன் கூட்டுறவு சார்ந்த கூட்டாண்மைகளை உருவாக்குவதன் மூலம் முக்கியமான நுண்ணறிவுகளைப் பெற முடியும். பாலினக் கண்ணோட்டம் அல்லது விளிம்புநிலைச் சமூகங்களின் பார்வைகளைச் சேர்ப்பதால் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதில்லை. இது இடைவெளிகளைக் குறைத்து, ஏற்கனவே உள்ள முன்முயற்சிகளை ஒன்றாக இணைத்து மேம்படுத்துவதாகும். இந்த மாற்றம் பொருளாதார ரீதியாக நன்மை பயக்கக்கூடிய சீரமைப்பை உறுதிசெய்கிறது. அதன் விளைவாக, நெருக்கடியிலிருந்து மீண்டுவரக்கூடிய வலுவான அமைப்பை வழங்குகிறது.

இதற்கு அடிக்கடி சுட்டப்படும் எடுத்துக்காட்டு, பேர்ஃபுட் கல்லூரியின் “சோலார் மாமா” திட்டம் (Barefoot College’s “Solar Mama’s project). இது அரசுகள், குடிமைச் சமூகம், தனியார் துறை ஆகியவை இணைந்து அமைத்த திட்டம். இது கிராமப்புறத்தில் கல்வியறிவு இல்லாத பெண்களுக்கு சூரிய மின்னாற்றல் அமைப்பை நிறுவுவதற்குப் பயிற்சியளித்து அவர்கள் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வாய்ப்பை வழங்குகிறது. 2019-20 முதல் 291 பெண்களுக்கு இந்தக் கல்லூரி பயிற்சி அளித்திருக்கிறது. இவர்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள 626 சமூகங்களில் உள்ள 45,591 குடும்பங்களுக்குத் தூய்மையான எரிசக்தித் தீர்வுகள் கிடைத்துள்ளன. இது இந்தப் பெண்களுக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்பாகவும் அமைந்து, அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும் சமூகம் நெருக்கடியிலிருந்து மீண்டெழும் திறனைக் கட்டமைப்பதற்கும் பங்களிக்கிறது; படிக்க வாய்ப்பற்ற 1,500 குழந்தைகள் இந்தக் கல்லூரியின் மற்றொரு திட்டத்தின் மூலம் கல்வி அமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டனர்.

இதேபோல், இண்டர்நேஷனல் சோலார் அல்லயன்ஸ் (ISA), பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி (Coalition for Disaster Resilient Infrastructure - CDRI) ஆகியவற்றின் மூலம் உலகளாவிய காலநிலை முயற்சிகளில் ஒத்துழைப்பையும் அனைவரையும் உள்ளடக்குதலையும் இணைத்துச் செயல்பட இந்தியா முயற்சி எடுக்கிறது. இந்த அமைப்புகள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலுள்ள நாடுகளும் உலகளாவிய தெற்கு நாடுகளும் தங்கள் கவலைகளை முன்வைத்தல், மின்னாற்றலை அனைவரும் பெறுவதை ஒருங்கிணைத்தல், பேரிடர் நிவாரணப் பணிகளைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளுதல், நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கான திறனை அதிகரித்தல் ஆகியவற்றுக்கான தளமாகச் செயல்படுகின்றன. இந்த அமைப்புகளின் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பாலின செயல் திட்டத்தையும் சேர்த்துக்கொண்டு, கொள்கைத் திட்டமிடலின்போது பாலினத்தைக் கருத்தில் கொண்டு, கொள்கைகள் பெண்கள்மீது செலுத்தும் மாறுபட்ட தாக்கத்தை அங்கீகரிப்பதிலும் முடிவெடுக்கும் செயல்முறையில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலமும் இவை வலுப்படுத்தப்படலாம். 2023ஆம் ஆண்டில் G20 மாநாட்டை நடத்தியதன் ஒரு பகுதியாக, இந்தியா பேரழிவைக் குறைப்பதற்கான பணிக்குழுவை உருவாக்க வழிவகுத்தது. இது பெண்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளையும் பேரழிவின் அபாயங்களைக் குறைப்பதில் அவர்கள் வகிக்கும் விரிவான பங்கையும் அங்கீகரிப்பதற்காக ஏற்கெனவே செயல்பட்டுவரும் செண்டாய் கட்டமைப்பின் (Sendai Framework) கொள்கைகளிலிருந்து கற்றுக்கொள்ள முடியும்.

காலநிலை மாற்றத்தின் சவால்கள் பொதுவானவை. ஆனால் அதன் வெளிப்பாடுகள் மாறுபட்டவை. இந்தோ-பசிபிக் கொள்கைகளில் காலநிலை நடவடிக்கைகளில் அனைவரையும் உள்ளடக்குதல், சமமான முக்கியத்துவம் வழங்குதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். இதற்கு, சுற்றுச்சூழல், பொருளாதாரம், சமூகப் பரிமாணங்கள் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்திருப்பதைக் கருத்தில் கொண்ட       முழுமையான அணுகுமுறை தேவை. பெண்ணிய வெளியுறவுக் கொள்கை தொடர்பாக வளர்ந்துவரும் உரையாடல்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ளவர்களின் பாலினக் கொள்கைகள் ஆகியவை பற்றிய எங்கள் ஆராய்ச்சி இது சாத்தியம் என்பதைக் காட்டுகிறது. இந்த உத்திகளை அவற்றின் காலநிலை இலக்குகளுடன் இணைக்க வேண்டியிருக்கிறது. காலநிலை சார்ந்த கொள்கைகள் தனித் தீவுகளாக இருக்கக் கூடாது. இந்தப் பிராந்தியத்தின் சிக்கலான தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் பரந்த கொள்கைக் கட்டமைப்பிற்குள் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும்.

அம்பிகா விஸ்வநாத்

Author

அம்பிகா விஸ்வநாத் குபெர்னைன் முன்முயற்சியின் நிறுவன இயக்குனர், இதுமும்பையைத் தளமாகக் கொண்ட புவிசார் அரசியல் ஆலோசனை அமைப்பாகும். அம்பிகா விஸ்வநாத் புவிசார் அரசியல் ஆய்வாளர், நீர்ப் பாதுகாப்பு நிபுணர். ஆளுகை, வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றில் அனுபவமுள்ளவர். பாலினம் மற்றும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் குபெர்னினின் முதன்மைத் திட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்

அதிதி முகுந்த்

Author

அதிதி முகுந்த் குபெர்னெய்ன் முன்முயற்சியில் திட்ட அசோசியேட்டாகப் பணிபுரிகிறார். பாலினம் மற்றும் பெண்ணிய வெளியுறவுக் கொள்கையில் குபெர்னெய்ன் பணிகளுக்கும் திட்டங்களுக்கும் தலைமை தாங்குகிறார். இந்தியாவையும் உலகளாவிய தெற்கையும் மையமாகக் கொண்டு சர்வதேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, அமைதியைக் கட்டியெழுப்புதல், மோதல்களுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றில் பெண்களின் குரல்களைப் பெருக்க முற்படும் ‘சர்வதேச உறவுகள் வலையமைப்பில் பெண்கள்’ என்னும் அமைப்பை (Women in International Relations Network,) நடத்துகிறார்.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்