குவாட் அமைப்பும் இந்திய, அமெரிக்க உறவும்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் நடுவில்

22/05/2023
IiT English Page

அமெரிக்காவுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவுகள் இந்தியாவின் வெளியுறவு விவகாரங்கள் என்னும் விரிவான பின்புலத்தில் எப்போதும் கவனம் பெற்றுவருகின்றன. இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு கடந்த இரண்டு பதிற்றாண்டுகளாக அளவிலும் தரத்திலும் முதிர்ச்சியடைந்திருந்தாலும், சில மந்தமான தருணங்களைக் கொண்டு இந்திய-அமெரிக்க உறவுக்குச் சில விமர்சகர்கள் இரங்கற்பா எழுத முற்படுகிறார்கள். "வலுவான உறவு", "உறைந்த நிலையிலான உறவு" என்னும் அதீதமான நிலைகளுக்கிடையில் நிகழும் ஊசலாட்டம் யதார்த்த உலகச் சிக்கல்கள் அல்லது இந்த விவகாரத்தின் அடியோட்டமான அம்சத்தைப் புரிந்துகொள்வதைக் கடினமாக்குகிறது. சமகால இந்திய-அமெரிக்க பாதுகாப்பு உறவுகளில் நிலவும் தரநிலைகளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, சர்வதேச உறவுகளில் ஒவ்வொரு நாடும் வகிக்கும்  பங்கு குறித்த கோட்பாட்டின் இரு வேறு கருத்துகளின் இடைவினைகளைப் புரிந்துகொள்வதுஅவசியம். பாதுகாப்பு தொடர்பாக வெவ்வேறு நாடுகள் ஏற்கும் பங்குகளுக்கிடையில் உள்ள இணக்கம் அல்லது பொருத்தம், ஒத்த நிலைப்பாடுகளுக்கும் வேறுபாட்டுகளுக்கும் இடையிலான இயக்கவியல் ஆகியவையே அந்தக் கருத்துகள்.

இந்திய, அமெரிக்க உறவில் உள்ள பொருத்தப்பாடுகள்
ஒரு நாட்டின் பங்கு குறித்த கருத்தாக்கங்கள் என்பது பரந்துபட்ட சர்வதேச அமைப்பில் மற்ற நாடுகளுடனான உறவு குறித்த தங்கள் நாட்டின் நிலைப்பாடு பிற நாடுகளின் எதிர்பார்ப்புகளுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்பதைப் பற்றி அந்த நாட்டின் கொள்கை வகுப்பாளர்களின் கண்ணோட்டத்தைக் குறிக்கிறது. சுருக்கமாக, இது ஒரு அரசு தன்னைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும் அதன்மீது வெளியில் இருக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான இடைவினையாகும். ஒவ்வொரு நாடும் தன் வெளிப்புறக் கொள்கை சார்ந்த நடத்தையையும் தேர்வுகளையும் வடிவமைக்க்கக்கூடிய வெளிநாட்டுக் கொள்கைகள், பாதுகாப்பு தொடர்பான தன் பங்கு குறித்த கருத்தாக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தத்தமது சொந்தக் கருத்துகளின் அடிப்படையில் ஒவ்வொரு நாடும் பிற நாடுகள் தொடர்பான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. ஒரு நாடு தன்னைப் பற்றிக் கொண்டுள்ள பார்வையும் பிறருடைய எதிர்பார்ப்பும் பொருந்திப்போகும்போது, அது இரு தரப்புக்கும் இடையிலான பங்கு இணக்கத்தன்மை என்று சொல்லலாம்.

இந்த கருத்து இந்திய-அமெரிக்க வியூக உறவின் பாதையை விளக்க உதவுகிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, இந்தியா தன்னை ஒரு பெரிய சக்தியாகவும் முதலாவதாக எதிர்வினை ஆற்றுபவராகவும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை விரும்பும் நாடாகவும் தன்னைப் பற்றிக் கருதிக்கொள்கிறது. இந்தக் கருத்துக்கள் அதன் உலகளாவிய நடத்தையையும் பிராந்தியப் பாதுகாப்பு நடத்தையையும் வடிவமைத்தன. அதே நேரத்தில் அமெரிக்கா, இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைச் சமனப்படுத்தக்கூடிய சக்தியாக இந்தியாவை வளர்ப்பதில் ஆர்வமாக இருந்தது. இது இரு நாடுகளின் நலன்களை மேலும் அதிகமாக ஒருங்கிணைப்பதற்கான சாளரத்தைத் திறந்தது. இந்தியாவின் மீதான அமெரிக்க எதிர்பார்ப்புகள் சீனாவின் இராணுவ எழுச்சி, வெளிநாட்டுகளில் அதன் இராணுவப் பொறுப்புகள், உள்நாட்டில் அதன் நிதிச் சவால்கள், ஆசியப் பாதுகாப்புக் களத்தில் இந்தியாவின் திறன் எனப் பல காரணிகளின் தாக்கத்தால் உருவானவை. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒருமித்த எண்ணம் கொண்ட கூட்டாளிகளுக்கான அமெரிக்காவின் தேடலுடன் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் திறன் நன்கு பொருந்திப்போகிறது.

2004 இந்தியப் பெருங்கடலில் உருவான ஆழிப்பேரலை ஒரு திருப்புமுனை. இது இயற்கைப் பேரிடரின் பின்விளைவுகளை எதிர்கொள்ள அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடையே தற்காலிகக் கூட்டாண்மையைத் தோற்றுவித்தது. வள ஆதாரங்கள், முயற்சிகள் ஆகியவற்றில் இந்த நாடுகளுக்கு இடையில் நிகழ்ந்த வெற்றிகரமான ஒத்துழைப்பு இந்த நான்கு நாடுகளின் கூட்டமைப்பான குவாட் என்னும் அமைப்பு உருவாவதற்கு விதைபோட்டது. இந்தப் பிராந்தியத்தில் எழும் சவால்களைச் சமாளிக்க நான்கு ஜனநாயக நாடுகளும் ஒன்று சேரும் சாத்தியம் இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. பாதுகாப்புக் குறித்த இந்தியாவின் கருத்துக்களுக்கும் இந்தியாவின் பங்கு குறித்த எதிரான அமெரிக்காவின் பார்வைக்கும் இடையே இணக்கத்தன்மை அதிகரித்தபடி இருந்தது. அமெரிக்கா தன் நட்பு நாடுகளான ஜப்பான், ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் உறவு மேம்படுவதை எளிதாக்கியது. வளர்ந்துவந்த இந்த நல்லுறவு 2007இல் குவாட் 1.0இன் உதயமாக வெளிப்பட்டது. ஆனால் இத்தகைய கூட்டாண்மை சீனாவை உசுப்பிவிட்டு அந்நாட்டுடனான பதற்றங்களை அதிகரித்துவிடச்செய்யுமோ என்னும் கவலையால் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தயக்கம் காட்டின. ஆஸ்திரேலியா விலகிய பிறகு இந்தக் குழு விரைவிலேயே பலவீனமடைந்தது.

ஆயினும், அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகள் மேம்பட்டன. 2008இன் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, சீனாவின் இராணுவ வலிமை அதிரடியாக வளர்ந்துவந்தத நிலையில், சீனாவின் எழுச்சியால் ஏற்படும் பிராந்தியச் சவால்களின் அளவையும் தீவிரத்தன்மையையும் குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் போர் வியூகம் சார்ந்த தெளிவு இருந்தது. சீனாவின் சவாலை எந்த ஒரு நாடும் தனியாகச் சமாளிக்க முடியாது என்பதை இந்நாடுகளின் தலைவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.

2017இல் டோக்லம் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையில் எழுந்த மோதலைத் தொடர்ந்து, குவாட் வகையிலான அமைப்பு குறித்த இந்தியாவின் தயக்கம் பெரிதும் குறைந்தது. இந்தியா குவாடை ஏற்றுக்கொண்டதையடுத்து குவாட் 2017இல் மீண்டும் உயிர்பெற்றது. இந்தக் குழு படிப்படியாக வளர்ந்தது. 2017இல் துணைச் செயலாளர்கள் மட்டத்தில் கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. இது 2019இல் அமைச்சர்கள் அளவிலான உரையாடலாக வளர்ந்தது. மறுபுறம், இந்தியா சீனாவுடனான தன் உறவில் ஓரளவேனும் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகச் சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தது. இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கின. தேசத்தின் தலைவர்களுக்கு இடையே உரையாடல்கள் நடந்தது. 2020இல் எல்லையில் நடந்த மோசமான மோதல்கள் இந்தப் போக்கைச் சீரழித்தன. சீனாவிற்கு எதிரான இந்தியாவின் நிலை முன்பைவிடக் கடினமாகிவிட்டது. 2020இன் பிற்பகுதியில் நடைபெற்ற மலபார் கடற்படைப் பயிற்சியில் (அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே முன்பு இதில் ஈடுபட்டன) ஆஸ்திரேலியாவையும் ஒரு பங்கேற்பாளராக இந்தியா ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல; குவாட் உரையாடல்களை நாட்டின் தலைவர்களை கலந்துகொள்ளும் உச்சிமாநாடாக உயர்த்தியது. 2021இல் முதல்முறையாக நடந்த குவாட் சந்திப்பு கூட்டு அறிக்கையை வெளியிட்டது. தடுப்பூசி விஷயத்தில் ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, கடல்சார் பாதுகாப்பு, முக்கியமான தொழில்நுட்பங்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பெரிய திட்டங்களை உள்ளடக்கியதாக அதன் நோக்கம் விரிவடைந்தது. 2023ஆம் ஆண்டின் குவாட் கூட்டு அறிக்கை ரஷ்ய-உக்ரைன் போரைக் குறிப்பிட்டு, "அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது அல்லது பயன்படுத்துவதாக அச்சுறுத்துவது" கூடாது என்று கூறியது.

குவாட் குழப்பங்கள்: மாறுபடும் பார்வைகள் 
குவாட் 2.0 உருவானாலும்கூட, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா இடையேயான AUKUS கூட்டணியுடன் ஒப்பிடும்போது இந்தக் குழுவைக் குறைவான செயல்திறன் கொண்டதாகவே பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஏற்கெனவே அதிகாரப்பூர்வமான கூட்டாளிகளாக இருக்கும் மூன்று நாடுகளைக் கொண்ட குவாட் குழுவில் அணிசேரா நாடுகளைச் சேர்ந்த ஒரே நாடான இந்தியா, பாதுகாப்பு விஷயத்தில் குவாட் குழுவுக்கான வலுவான பங்கை வளர்த்தெடுப்பதில் தயக்கம் காட்டுகிறது. இந்தத் தயக்கமே அதை இந்தக் குழுவின் "பலவீனமான கண்ணி" என முத்திரை குத்துவதற்கு வழிவகுத்திருக்கிறது. சர்வதேசப் பிரச்சினைகள் குறித்த அதன் செயல்பாடுகளும் முரண்பாடானதாகக் கருதப்படுகின்றன. 2022இல் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு பற்றிய இந்தியாவின் பலவீனமான விமர்சனம் மேற்கு நாடுகளை விரக்தியடையச்செய்தது. பாதுகாப்பு விஷயத்தில் ஒரு பங்காளியாக இந்தியாவின் நம்பகத்தன்மை மீதான கேள்விகளை இது எழுப்பியது. பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பில் குவாட் உறுப்பு நாடுகளின் பங்குகளில் இருக்க வேண்டிய இணக்கம் என்னும் சமன்பாட்டிற்குள் இந்த வேறுபாடுகள் இருதரப்பு, சிறுதரப்புக் கூட்டாண்மைகளில் உள்ள யதார்த்தச் சிக்கல்களைக் குறிக்கிறது.

இந்த நாடுகள் வகிக்கும் பங்குகளில் பரஸ்பர இணக்கம் என்னும் பரந்த குடைக்குள் பொதுவான ஆர்வங்களுக்கும் உறுப்பு நாடுகளுக்கும் இடையே மாறுபட்ட கண்ணோட்டங்கள்/முன்னுரிமைகள் உள்ளன. இந்தச் சிக்கல் இணக்கத்திற்கும் வேறுபாட்டுக்கும் இடையிலான இயக்கவியல் என்று அழைக்கப்படுகிறது. உறுப்பு நாடுகளுக்கிடையே (கூட்டாளிகளுக்கிடையிலும்தான்) சில ஆர்வங்கள் ஒத்துப்போவதும் சில ஆர்வங்கள் முரண்படுவதும் இயல்புதான். இவை இரண்டுக்கும் இடையிலான விகிதம்தான் உறவின் வலிமை அல்லது பலவீனத்தைப் பிரதிபலிக்கிறது.

இந்தோ-பசிபிக் பகுதியில் இந்திய-அமெரிக்க நலன்களில் பொதுவான அம்சங்கள் இருந்தாலும் அமெரிக்காவும் இந்தியாவும் இந்தப் பிராந்தியத்தை எவ்வாறு அணுகுகின்றன, அதில் உள்ள சவால்களை எப்படி எதிர்கொள்ள முயல்கின்றன என்பதில் வேறுபாடுகள் உள்ளன. முதலாவதாக, சீனாவின் ஆணித்தரமான எழுச்சிக்கும் ரஷ்ய அச்சுறுத்தலுக்கும் எதிராக விதிகளின் அடிப்படையிலான சர்வதேச தாராளவாதச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய இடமாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை அமெரிக்கா கருதுகிறது. இதற்கு நேர்மாறாக, எந்தவொரு நாட்டிற்கும் (சீனா என்று படிக்கவும்) எதிரான பிரத்யேகக் குழுவினரின் இடமாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை இந்தியா அணுகவில்லை. இந்தோ-பசிபிக் பிராந்தியம் அனைவரையும் "உள்ளடக்கும்" பிராந்தியமாக இருக்க வேண்டும் என்று இந்தியா கருதுகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியம் என்பதற்கான தன்னுடைய வரையறைக்குள் சீனாவையும் ரஷ்யாவையும் சேர்க்க வேண்டும் என்றும் அது சில சமயம் குறிப்புணர்த்துகிறது. குவாட் எந்த ஒரு நாட்டிற்கும் எதிரானதல்ல என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறுவது ஏன் என்பதை இது விளக்குகிறது. சீனாவிற்கு எதிரான குழுவாக இதை முன்னிறுத்திவிடக் கூடாது என்பதில் இந்தியா எச்சரிக்கையாக உள்ளது.

இரண்டாவதாக, அமெரிக்கா தனது நலன்களுக்கு எதிராகச் சீனா முன்வைக்கும் அச்சுறுத்தலைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறது. தேவைப்பட்டால் அதைத் தடுக்கவும் அதற்காகப் போரிடவும் அது தயாராக உள்ளது. மறுபுறம், சீனாவைச் சமனப்படுத்தும் சக்தியாகத் தான் பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் இந்தியா எச்சரிக்கையாக உள்ளது. சீனாவுடனான தனது உறவுகளில் போட்டியும் ஒத்துழைப்பும் கலந்த வழிமுறையைப் பராமரிக்க இந்தியா விரும்புகிறது. குவாட் குழுவில் இந்தியாவின் ஈடுபாடு ஆழமாகுமா அல்லது  மென்மையாகுமா என்பது குறிப்பிட்ட ஒரு சமயத்தில் சீனாவை அது எப்படிக் கையாள விரும்புகிறது என்பதோடு தொடர்புடையது. நிலையானதொரு சமன்பாட்டைத் தேடுவதுமுதல் ஒரு குறிப்பிட்ட முறையில் செயல்படுவதற்கு எதிராக அழுத்தம் கொடுப்பதுவரை இந்தியாவின் நிலைப்பாடு பலவிதமாக மாறுபடலாம். சீனாவுடனான உறவின் லாப நஷ்டங்கள் தொடர்பான அலசலைப் பொறுத்துப் பாதுகாப்பு விஷயங்களில் குவாட் குழுவிலோ அல்லது அமெரிக்காவுடனான பிற கூட்டு நடவடிக்கைகளிலோ இந்தியாவின் பங்கேற்பு தீர்மானிக்கப்படுகிறது.

மூன்றாவதாக, கடந்த இரண்டு பதிற்றாண்டுகளாக இந்தியா மேற்கு நாடுகளை நோக்கிச் சாய்ந்துகொண்டிருந்தாலும் அது பல கூட்டாண்மைகளுக்கிடையில் சமநிலை பேணிவருகிறது. முரண்படும் நாடுகளுடனும் கூட்டாண்மையில் ஈடுபடுகிறது. சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடனான உறவுகளைப் பேணும்போதே அமெரிக்காவுடனும் அதன் நட்பு நாடுகளுடனும் குவாட் குழுவிலும் பிற ஏற்பாடுகளிலும் ஒத்துழைக்க இந்தியா எடுத்த முடிவில் இது தெளிவாகத் தெரிகிறது (உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா மௌனம் சாதிப்பது ஏன் என்பதையும் இது விளக்குகிறது). இப்படிப் பல நாடுகளுடனும் அணிசேரும் இந்தியாவின் நிலையானது, "போர் வியூகத்தில் சுயாதிகாரம்" கொண்டிருப்பதில் இந்தியாவுக்கு இருக்கும் தீவிர ஈடுபாட்டுடனும் எந்த நாட்டையும் அல்லது நாடுகளின் குழுவையும் சாராதிருக்கும் அதன் மரபுடனும் தொடர்புடையது. வினோதமான சகபயணிகளுடனான தனது உறவுகளை இந்தியா இதுவரை சமன்செய்துவருகிறது. ஆனால் இந்த அணுகுமுறை தொலைநோக்கில் தாக்குப்பிடிக்குமா, வெற்றி பெறுமா என்பதெல்லாம் விவாதத்திற்குரியவை. குறிப்பாக சீனா மிகவும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சூழ்நிலையில்.

நான்காவதாக, நெடுங்காலமாகவே இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவுக்கான ஆர்வங்கள் உள்ளன. அமெரிக்காவின் கவனமோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ளது. இந்த இரு நாடுகளின் ஆர்வங்கள் ஒன்றோடு ஒன்று கலப்பதும் ஆர்வங்கள் சார்ந்த பிரச்சினைகளும் அண்மைக் காலத்தில் அதிகரித்துவந்தாலும், இந்தியா தன்னுடைய பாதுகாப்பு நலன்களை நேரடியாகப் பாதிக்காத பிராந்தியங்களில் (தைவான் அல்லது உக்ரைன் போன்றவற்றில்) சீன நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாகக் கவனம் செலுத்துவதில் அதிக ஈடுபாடோ ஆர்வமோ காட்டாது. வழக்கமான பாதுகாப்புப் பிரச்சினைகளில் குவாட் குழுவின் செயல்பாடுகள் எப்படி அமையும் என்பதை இது இயல்பாகவே பாதிக்கும்.

கூட்டாண்மைகளுக்குள் வேறுபாடுகள் இருப்பது இயல்புதான். இதனால் சம்பந்தப்பட்ட நாடுகளுக்குள் மோதல் நிலவுகிறது என்று பொருள் அல்ல. மாறாக, நாடுகளின் பங்குகளுக்கிடையே இணக்கம் இருந்தால், பிரச்சினைகள் இருந்தபோதிலும் கொள்கை வகுப்பாளர்கள்/இராஜதந்திரிகள் திறம்படச் செயல்படுவதற்கான வழிமுறைகளை உருவாக்குவார்கள். அல்லது காலப்போக்கில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் சமரசம் காண்பார்கள். அல்லது இவை இரண்டுமே நடக்கும். பின்வரும் சூழல் இதைத் தெளிவாக விளக்குகிறது: இந்தியாவும் அமெரிக்காவும் "கடல்சார் ஒழுங்கு/அமைப்பு", "கடல்வழிப் பாதையில் சுதந்திரம்" ஆகியவற்றில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன. கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டை (UNCLOS) இந்தியா அங்கீகரித்துள்ளது. அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. இந்தச் சட்டம் குறித்த இரு நாடுகளின் விளக்கங்களும் வேறானவை (இந்தியாவின் விளக்கம் சீனாவின் புரிதலுக்கு நெருக்கமாக உள்ளது). தன்னுடைய பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் சுதந்திரமான கடல்வழிப் பயணத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு இருந்தாலும் இந்த வேறுபாடுகள் இராஜதந்திர மட்டத்தில் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதால், கடல்சார் ஒத்துழைப்பைப் பாதிக்கவில்லை. இருண்ட மேகத்தினிடையே தெரியும் ஒளிக்கீற்றாக இது உள்ளது.

ஒட்டுமொத்தமாக, இந்திய-அமெரிக்க நாடுகளிடையிலான வியூக, பாதுகாப்பு உறவுகள் பிசிரற்றதாக இல்லை. அண்மை வருங்காலத்தில் அவ்வாறு இருக்கவும் வாய்ப்பில்லை. இரு நாடுகளும் வகிக்கும் பங்குகளுக்கிடையேயான வேறுபாடுகள் தொடரத்தான்செய்யும். பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பார்க்கையில் இது குவாட்டின் முனைப்பையும் பாதிக்கலாம். இருப்பினும், இந்த வேறுபாடுகள் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்திற்கோ குவாட் ஏற்பாட்டில் இரு நாடுகளின் ஈடுபாட்டிலோ தடையாக இருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக இருவரையும் நெருக்கமாகக் கொண்டுவரும் காரணியாகச் சீனா இருக்கும் நிலையில். சுருக்கமாக, இந்திய-அமெரிக்க உறவு என்பது கருப்பு வெள்ளை அல்ல. கலந்த சாம்பல் நிறமாக உள்ளது.

அதிதி மல்ஹோத்ரா

Author

அதிதி மல்ஹோத்ரா கனடியன் ஆர்மி ஜர்னலின் (CAJ) தலைமை ஆசிரியர், கனடியன் குளோபல் அஃபேர்ஸ் இன்ஸ்டிடியூட்டில் ஃபெலோ. Understanding Security Role Evolution of US, China and India: Setting the Stage and India in the Indo-Pacific: Understanding India’s Security Orientation Towards Southeast and East Asia என்னும் நூலின் ஆசிரியர் (அமெரிக்கா, சீனா, இந்தியாவின் பாதுகாப்பு, இந்தோ-பசிபிக் பகுதியில் இந்தியா, தென்கிழக்காசியாவையும் கிழக்காசியாவையும் நோக்கிய இந்தியாவின் பாதுகாப்பு நோக்குநிலையைப் புரிந்துகொள்வது ஆகியவை குறித்த நூல் இது.) இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் கருத்துக்கள். கனடா அரசாங்கத்தின் அல்லது கனேடிய ஆயுதப் படைகளின் கருத்துக்கள், நிலைப்பாடு அல்லது கொள்கையை இவை பிரதிபலிக்கவில்லை.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்