ஜி-20, பிரிக்ஸ் ஆகிய அமைப்புகளும் உலகத் தலைமைக்கான இந்தியாவின் வேட்கையும்

05/08/2024
IiT English Page

பெருகிவரும் மாபெரும் அதிகாரப் போட்டிக்கு மத்தியில், டிசம்பர் 2022முதல் நவம்பர் 2023வரை ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை வகித்தது. இந்தப் பொறுப்பு அதன் இராஜதந்திர அறிவுக்கூர்மைக்கான சோதனையாக அமைந்தது. மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள கசப்பான பிளவுகளை மீறி, வளர்ந்த, வளரும் நாடுகளுக்கு இடையேயான இடைவெளியையும் இட்டு நிரப்பி, இந்தியாவால் ஒரு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி ஒரு கூட்டறிக்கை வெளியிடுவதை உறுதி செய்ய முடியுமா? இந்தச் செயல்பாட்டில் இந்தியாவால் உலக அளவில் தன்னுடைய நிலையை உயர்த்திக்கொள்ள முடியுமா, அல்லது சச்சரவில் சிக்கிக்கொள்ளுமா? இந்தக் கேள்விகளுக்கான இறுதி விடைகள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த இரண்டு அம்சங்களிலும் இந்தியா வெற்றிபெற்றது என்பதே ஒருமித்த கருத்தாக உள்ளது. ஜி-20 அமைப்பில் இந்தியாவின் வெற்றி, அது முக்கியப் பங்கு வகிக்கும் மற்றொரு பலதரப்பு மன்றமான பிரிக்ஸ் (BRICS - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் கூட்டமைப்பு) மீதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரிக்ஸில் இந்தியா ஆற்றிய பங்கினால் இந்த அமைப்பின்பால் வளரும் நாடுகளின் ஆர்வம் கடந்த ஆண்டில் அதிகரித்தது. மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் அமைப்புகளுக்கு மாற்றாக பிரிக்ஸ் விளங்குவதற்கான விருப்பத்தை இது எடுத்துக்காட்டுகிறது.  எனினும், முறையான செயல்திட்டம் இல்லாமை, தற்போதுள்ள பதற்றங்கள் - குறிப்பாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் – ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம் அதன் எதிர்காலம் பற்றிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜி-20, பிரிக்ஸ் ஆகிய அமைப்புகள் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையையும் நோக்கங்களையும் நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? பலதரப்பு ராஜதந்திரத்திற்கான புது தில்லியின் பரந்த கட்டமைப்பிற்குள் இந்த இரண்டு வேறுபட்ட குழுக்களை நாம் எவ்வாறு பொருத்துவது?

வரலாற்று ரீதியாக, இந்த இரண்டு குழுக்களுடனான இந்தியாவின் ஈடுபாடு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாகவே இருந்துவருகிறது. இந்த இரு அமைப்புகளும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் - 21ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் - நிறுவப்பட்டன. தொடக்கத்தில் இந்தியாவுக்கு ஜி-20மீது ஐயம் இருந்தது. இந்தக் குழுவிற்குள் தன் பங்கு என்ன என்பது குறித்து அதற்கு உறுதியாகத் தெரியவில்லை. நிதி தொடர்பாகவும் பொருளாதாரம் சார்ந்தும் எழக்கூடிய மாபெரும் சவால்களை எதிர்கொள்வதற்கான செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு வழி வகுக்கக்கூடிய, அரசுகளுக்கிடையேயான மன்றமாக ஜி-20 நிறுவப்பட்டது. உலகளாவிய வடக்கு நாடுகளுக்கும் தெற்கு நாடுகளுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் என  இந்த அமைப்பு முன்னிறுத்தப்பட்டது. என்றாலும், மிகவும் செல்வாக்குமிக்க நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகளைச் சமமாக அல்லாமல் இளநிலைக் கூட்டாளிகள்போல நடத்துமோ என இந்தியா அஞ்சியது. பிரிக்ஸ் அமைப்போ மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகளின் ஒன்றுபட்ட குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. வரவிருந்த ஆண்டுகளில் கணிசமான பொருளாதார வளர்ச்சியைக் காணக்கூடிய நிலையில் இருந்த நாடுகள் அவை. பிரிக்ஸ் அமைப்பின் மேற்கத்தியம் அல்லாத தன்மை இந்தியாவை அதிகமாக ஈர்த்தது. மேற்கத்திய ஆதிக்கத்தை எதிர்த்து, உலகின் தெற்கு நாடுகளின் நலனுக்காகப் போராடிய தன்னுடைய பாரம்பரிய அடையாளத்தை இதன் மூலம் இந்தியாவால் முன்னெடுத்துச் செல்ல முடிந்தது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து பிரிக்ஸ் உறுப்பினர்களும் அந்த நேரத்தில் ஜி-20இலும் உறுப்பினர்களாக இருந்ததால், அவர்களால் அந்தப் பெரிய குழுவிற்குள் கூட்டாகச் செயல்பட முடிந்தது. எனவே ஜி-20 அமைப்பு பிரிக்ஸ் உறுப்பினர்களின் இழப்புகளைக் குறைப்பதற்கான களமாக அமைந்தது. இந்த நாடுகள் மேற்கத்திய நாடுகளுடன் ஒத்துழைக்கவும் முடியும்; எதிர்க்கவும் முடியும். பிரிக்ஸ் அமைப்பின் முதல் சில ஆண்டுகளில், நாடுகளுக்கிடையேயான பண உறவுகளை நிர்வகிக்கும் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் சீர்திருத்தங்களை அமல்படுத்த அழுத்தம் கொடுக்கவும், உலகளாவிய சமத்துவமின்மைப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தவும் பிரிக்ஸ் நாடுகள் ஜி-20 அமைப்பைக் கூட்டாகப் பயன்படுத்தின. இருப்பினும், அவற்றின் கோரிக்கைகளை ஜி-20 அமைப்புக்குள் இருந்த மேற்கத்தியக் குழு கண்டுகொள்ளவில்லை. ஜி-20க்குள் இரு பிரிவினருக்குமிடையே பிளவு இருப்பதாகத் தோன்றியது. இந்தக் காலகட்டத்தில், பிரிக்ஸ் உறுப்பினர்கள் வளரும் நாடுகளின் தேவைகளுக்கேற்ற மாற்றுப் பொருளாதார நிறுவனங்களை உருவாக்கினார்கள். அதைத் தொடர்ந்து, பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளிலும் இதர வளர்ந்துவரும், வளரும் பொருளாதாரங்களிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் வளங்குன்றா வளர்ச்சித் திட்டங்களுக்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்காகவும் 2014இல் நியூ டெவலப்மெண்ட் வங்கியை (NDB) நிறுவுவதில் இந்தியா முக்கியப் பங்காற்றியது.

பிரிக்ஸின் கூட்டுறவுப் பயணத்தில் இந்த வங்கி முக்கிய அடையாளமாக இருந்தாலும், இதன் செயல்பாட்டுக் கொள்கைகள் தொடர்பாகக் குழுவிற்குள் கடுமையான கருத்து வேறுபாடுகள் விரைவிலேயே வெளிவரத் தொடங்கின. உலக அளவில் சமமான பொருளாதார அமைப்பை நிறுவுதல், உறுப்பு நாடுகளிடையே நிதி ஒத்துழைப்பை மேம்படுத்துதல், வர்த்தகத்தை அதிகரித்தல் ஆகியவையே பிரிக்ஸின் ஆதார நோக்கங்கள். ஆனால், 2017முதல் நடந்துவரும் இந்திய-சீன எல்லைத் தகராறுகளாலும், முதலில் கிரிமியாவிலும் பின்னர் உக்ரைனிலும் ரஷ்யா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளாலும் இந்த நோக்கங்கள் பெருமளவில் தடைப்பட்டன. இதனால் குழுவிற்குள் அரசியல், பொருளாதாரப் பதற்றங்கள் உருவாயின. பெரிய அளவிலான பொருளாதார முன்முயற்சிகளில் திறம்பட ஒத்துழைக்கவும், மேற்கத்திய நிதி அமைப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், உலகப் பொருளாதார மன்றங்களில் ஒன்றுபட்ட முன்னணியை முன்னிறுத்தவும், பிரிக்ஸ் அமைப்புக்குத் தேவையான நம்பிக்கையையும் ஒற்றுமையையும் இந்த மோதல்கள் குறைத்துவிட்டன. அதோடு, அரசியல் விழுமியங்கள், உள்நாட்டு அரசாங்க அமைப்புகள், பொருளாதார நலன்கள் ஆகியவற்றில் ஒருங்கிணைப்பு இல்லாத நிலையும், புவிசார் அரசியல் அபிலாஷைகளால் ஏற்படும் போட்டிகளும் பிரிக்ஸின் ஆற்றலைக் குறைத்துவிட்டன. பிரிக்ஸ் அமைப்பின் முக்கியத்துவம் குறைந்துவந்ததும் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா பலதரப்புச் செயல்பாடுகளுக்குத் தரும் முக்கியத்துவம் புதுப்பிக்கப்பட்டதும் ஒரே நேரத்தில் நடைபெற்றன. புதுப்பிக்கப்பட்ட இந்த முக்கியத்துவத்தின் மையத்தில் ஜி-20 இருந்துவருகிறது. ஜி-20க்கு எதிராக ஆரம்பத்தில் இந்தியாவுக்கு இருந்த அவநம்பிக்கை விலகி நம்பிக்கை உருவானது. உலக நாடுகள் பிரிந்து நின்றபோது இந்தியாவின் தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்துவதற்கான தளமாக இந்த அமைப்பைப் பயன்படுத்துவதற்கான முயற்சியும் நடைபெற்றது.

இந்தியா ஜி-20 அமைப்பில் இணைந்ததை அமைப்பு மட்டத்திலும் உள்நாட்டு அளவிலும் செயல்படும் காரணிகள் மூலம் விளக்கலாம். சீனாவின் எழுச்சியும் அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் சீனாவும் இரு துருவங்களாகி நின்றதும் அமைப்பு ரீதியான காரணங்களில் முதன்மையானது. இந்த மாற்றம் பலதரப்புக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தியது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அமெரிக்காவின் கவனம் உள்நோக்கியதாக ஆனதன் விளைவாக, உலகளாவிய தலைமை என்னும் பாத்திரத்தைத் தொடர்ந்து வகிக்க அமெரிக்கா தயக்கம் காட்டியது. இதனால் உருவான வெற்றிடத்தை நிரப்பக்கூடிய நாடாகச் சீனா இருந்தது. இந்தியாவும், தன் பொருள் சார்ந்த திறன்களின் அதிகரிப்பால், பலதரப்பு அமைப்புகளில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியிருப்பதை உணர்ந்தது. பலதரப்புக் கட்டமைப்பைச் சீனா கையகப்படுத்துவதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தியா உணர்ந்தது. இதன் விளைவாக, அமெரிக்காவுடனான இந்தியாவின் வியூக ரீதியிலான ஒருங்கிணைப்பு வலுவடைந்தது. சீனாவின் வளர்ந்துவரும் ஆற்றலைச் சமநிலைப்படுத்துவதில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இருந்த ஆர்வம் இந்த நெருக்கத்துக்குக் காரணமாக அமைந்தது. சுதந்திரமான, பலதரப்புகளையும் அனுமதிக்கக்கூடியதாக இந்தோ-பசிபிக் பகுதி இருபப்தை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்ட குவாட் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு, பலதரப்பு முனைப்புகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு தெளிவாகத் தெரிகிறது. ஜி-20 அமைப்பினுள் உலகளாவிய வடக்குக்கும் தெற்குக்குமிடையே ஒருமித்த கருத்து உருவாக உதவுவதன் மூலம் பலதரப்பு அமைப்புகளில் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து உலகை மீட்கக்கூடிய சிறந்த இடத்தில் தான் இருப்பதாக இந்தியா கருதியது.

இந்தியா உலகளாவிய தலைவராக உருப்பெறுவதான தோற்றம் அதன் வாக்காளர்களைப் பெரிதும் ஈர்ப்பதுடன் பிரதமர் மோடியின் புகழையும் கூட்டுகிறது. ஜி-20 அமைப்பு பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம், நிதியில் நிலைத்தன்மை போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க முனைவதால் இதில் பங்கேற்பது இந்தியாவுக்குச் நன்மை பயக்கும். இந்தியா தனது செல்வாக்கை உறுதிப்படுத்த முற்படும் அம்சங்கள் இவை. உலகளாவிய பொருளாதார சவால்களைத் தீர்ப்பதில் இந்தியாவின் தலைமைத்துவத்தைச் சிறந்த முறையில் முன்னிலைப்படுத்த ஜி-20 தளத்தைப் பயன்படுத்த மோடி முயல்கிறார். இதன் மூலம் இந்தியாவின் உலகளாவிய லட்சியங்களை நிறைவேற்றும் திறன் கொண்ட வலுவான, தொலைநோக்குள்ள தலைவர் என வாக்காளர்களிடம் தனக்குள்ள படிமத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்கிறார். இத்தகைய சித்தரிப்பு இந்தியா "உலகின் குரு"வாக விளங்கும் என்ற கருத்தைச் சார்ந்துள்ளது. இது காலனித்துவத்தை எதிர்த்து மீண்டுவந்த அதன் வரலாற்றுச் சாதனையையும் சர்வதேச அளவில் மீண்டும் முக்கிய இடத்தைப் பெறுவதற்கான அதன் திறனையும் குறிக்கிறது. இந்தக் கதையாடலின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக ஜி-20 தலைமைப் பதவி அமைகிறது. மோடியின் கட்சியான பாஜகவின் இந்து தேசியவாத சித்தாந்தத்துடனும் இது ஒத்துப்போகிறது. இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை அதிகரிக்க மோடி ஜி-20 தலைமைப் பதவியைப் பயன்படுத்தியதை அவரது ஆதரவாளர்கள் பாராட்டினாலும், விமர்சகர்கள், இது உள்நாட்டுப் பிரச்சினைகளை மறைத்து 2024 தேர்தலுக்கான பிரச்சாரத் தந்திரமாகப் பயன்பட்டதாக வாதிட்டனர். அந்தத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார்.

2023 செப்டம்பரில் புது தில்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமான நிகழ்வாகக் கருதப்பட்டது. அனைவரையும் உள்ளடக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டமைக்காக இந்தியா பாராட்டப்பெற்றது. இந்த முயற்சியின் விளைவாக ஆப்பிரிக்க யூனியன் ஜி-20 மன்றத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றது. ஜி-20 அமைப்பினுள் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் புதிய மரியாதை, அதன் ராஜதந்திரக் கணக்குகளில் பிரிக்ஸின் பயன்பாடு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரிக்ஸ் அமைப்பு இனி எந்த அரசியல் அல்லது பொருளாதார நோக்கத்திற்கும் உதவாது என்பதால், இந்தியா அதிலிருந்து முழுவதுமாக வெளியேறி, ஜி-20இல் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனப் பரிந்துரைகள் உள்ளன. அப்படிச் செய்யக் கூடாது. பிரிக்ஸிலிருந்து விலகக் கூடாது என்பது மட்டுமல்ல; ஜி-20யில் இந்தியா ஓராண்டுக் காலம் வெற்றிகரமாகத் தலைமைப் பொறுப்பை வகித்தாலும், அதை வைத்து இந்தியா பிரிக்ஸைக் குறைத்து மதிப்பிடவும் கூடாது.

குழுவிற்குள் கருத்து வேறுபாடுகள், புவிசார் அரசியல் மோதல்கள் உட்பட குறிப்பிடத்தக்க சவால்களை பிரிக்ஸ் எதிர்கொண்டது உண்மைதான் என்றாலும், இந்தியாவின் பரந்த வியூகக் கட்டமைப்பின் முக்கியமான பகுதியாக இந்த அமைப்பு உள்ளது. தெற்கு நாடுகளுக்கான மன்றமாக விளங்கும் பிரிக்ஸ், வளரும் நாடுகளின் நலன்களுக்காக வாதிடுவதற்கும், மேற்கத்திய சக்திகள் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய நிர்வாகக் கட்டமைப்புகளில் சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் இந்தியாவுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது. நியூ டெவலப்மெண்ட் வங்கி, நெருக்கடி காலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடு (Contingent Reserve Arrangement - CRA) போன்ற முன்முயற்சிகள் பிரிக்ஸ் நாடுகள் எவ்வாறு வளங்குன்றா வளர்ச்சிக்கும் நிதி நிலைத்தன்மைக்கும் ஆதாரங்களைத் திரட்ட முடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. பிரிக்ஸ் அமைப்பு ஜி-20 போன்ற பிற பலதரப்பு நிறுவனங்களில் இந்தியாவின் பங்கேற்புக்கு வலு சேர்க்கிறது. பரந்துபட்ட புவிசார் அரசியல் போட்டிகளுக்கு மத்தியிலும்கூட, இரு நாடுகளுக்கும் பொதுவான பொருளாதார, வளர்ச்சி இலக்குகளில் இணைந்து பணியாற்ற இந்தியாவுக்கும் சீனாவுக்குமான தனித்துவமான வழியையும் பிரிக்ஸ் வழங்குகிறது. எனவே, பிரிக்ஸின் மதிப்பைக் குறைப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல. அவ்வாறு செய்வது உலகளாவிய தெற்கின் உண்மையான ஒரே பிரதிநிதியாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் சீனாவின் கூற்றுகளுக்கு உத்வேகம் அளிக்கும். உதாரணமாக, சீனா தனக்கு நெருக்கமான நாடுகளுக்கு உறுப்புரிமையை வழங்குவதன் மூலம், பிரிக்ஸ் அமைப்பை மேற்கத்திய எதிர்ப்பு அமைப்பாகவும் சீனாவுக்கு ஆதரவான குழுவாகவும் மாற்ற முயற்சிக்கும் என்ற அச்சம் இந்தியாவுக்குஇருந்தது. பிரிக்ஸ் அமைப்பை விரிவாக்குவதற்கான சமநிலை கொண்ட திசைவழியை வழங்குவதில் இந்தியாவின் செல்வாக்கு முக்கியமானதாக இருந்தது. பிரிக்ஸின் புதிய உறுப்பினர்கள் அனைவருடனும் இந்தியாவுக்கு நட்புறவு உள்ளது. ஈரான் தவிர, மற்ற நான்கு புதிய உறுப்பினர்களான எகிப்து, எத்தியோப்பியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை குழுவின் வெளிப்படையான மேற்கத்திய எதிர்ப்புக் கண்ணோட்டத்தை எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவைப் பொறுத்தவரை, பிரிக்ஸின் செயல்பாடு,அதன் ஆரம்ப ஆண்டுகளில் தெற்கு நாடுகளின் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான தளத்தை வழங்கியதிலிருந்து தெற்கில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகப் பரிணமித்துள்ளது.

வரலாற்று ரீதியாக, இந்தியா உலகளாவிய தெற்கின் நலனை முன்னெடுக்கும் நாடாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் சீனாவும் தெற்கின் தலைவராகத் தான் செயல்படக்கூடிய நிறுவனங்களை நிறுவுவதில் தனது வளங்களை முதலீடு செய்துள்ளது. மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகளை இலக்காகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) போன்ற பிற பலதரப்பு நிறுவனங்களில் கட்டமைப்பு ரீதியாகச் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. எனினும், பிரிக்ஸ் மட்டுமே சமத்துவக் கோட்பாட்டைத் தன் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. எனவே, ஜி-20 அமைப்பிற்குள் இந்தியா தனது நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளும் வேளையில், பிரிக்ஸ் அமைப்பில் அது தொடர்ந்து பங்கேற்பது தெற்கில் அதிகாரச் சமநிலையைப் பேணுவதற்கும், மற்ற உறுப்பு நாடுகளின், குறிப்பாகச் சீனாவின், மேலாதிக்க அபிலாஷைகளை எதிர்ப்பதற்கும் முக்கியமானது.

அபிநந்தன் குமார்

Author

அபிநந்தன் குமார் இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 

(Tamil Translation by Aravindan D.I.) 
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்