கார்கில் முதல் கால்வான் வரை: உளவுத் தோல்விகளும் எதிர்வினைகளின் தோல்விகளும்

06/01/2025
IiT English Page

இந்திய ராணுவத்தினருக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே 15.6.2020 அன்று லடாக்கின் கால்வான் மலைப்பகுதியில் மோதல் ஏற்பட்டபோது இந்திய ராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்தார்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கும் அதிகமான காலகட்டத்தில் இரு நாடுகளுக்கிடையே முதல்முறையாக நடந்த கடும் மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்களும் எண்ணிக்கை தெரியாத அளவில் சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். இது உளவுத் துறையின் தோல்வியா? இத்தகைய தாக்குதல்கள், பிரச்சினைகளுக்குப் பின்னர் உளவுத் துறையின் தோல்வியால்தான் ராணுவத் தாக்குதல் நிகழ்ந்ததாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் குற்றம் சாட்டுவது வழக்கம். பொதுவாக இத்தகைய திடீர்த் தாக்குதலுக்குப் பின் அரசு எதிர்வினை புரியாமல் அமைதியாக இருந்து உளவுத் துறையினரைப் பலிகடாவாக ஆக்குவதும் வழக்கம்தான். கால்வான் நிகழ்வுக்குப் பின் இவ்விதியிலிருந்து விலகிய இந்திய அரசு இந்தத் தாக்குதலுக்கு உளவுத் துறையின் தோல்வி காரணமல்ல என மறுத்தது. எனவே, உளவுத் துறையின் தோல்வி என்றால் என்ன என்னும் கேள்வி எந்தச் சார்புமற்ற பார்வையிலிருந்து எழுவது பொருத்தமானதுதான். என்னுடைய வாதம் சில அறிஞர்களின் கூற்றுக்கு மாறானது. கால்வான் தாக்குதலுக்குக் காரணம் எதிர்வினையில் ஏற்பட்ட தோல்வியே தவிர உளவுத் துறையின் தோல்வி அல்ல என்பதே என் வாதம்.

கால்வான் திடீர்த் தாக்குதல் கார்கில் திடீர்த் தாக்குதலுடன் ஒப்பிடத் தகுந்தது. 1999இல் தீவிரவாதிகளைப் போல வேடமணிந்த  பாகிஸ்தான் படை வீரர்கள் ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் பெருமளவு நிலங்களை ஆக்கிரமித்தார்கள். முக்கியமானதொரு சாலையை இந்தியா அணுக விடாமல் பார்த்துக்கொள்வது அவர்களது நோக்கமாக இருந்தது. மோசமான வானிலையால் வீரர்களின் உயிருக்கு ஆபத்து வருவதைத் தவிர்க்க வழக்கம்போல் இந்திய ராணுவம் பாசறைக்குள் முடங்கிய சந்தர்ப்பத்தைப் பாகிஸ்தான் பயன்படுத்திக்கொண்டது. கார்கில் மலையை எதிர்ப்பின்றி பாகிஸ்தான் ஆக்கிரமித்ததால் இந்தியா-பாகிஸ்தான் இடையே குறுகியகாலப் போர் மூண்டது. போரில் இந்தியப் படை வெற்றிபெற்றது.

2020ஆம் ஆண்டில் கோவிட்-19 முன்னெச்சரிக்கையின் காரணமாகத் தனது வருடாந்தர ராணுவப் பயிற்சியை இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையினர் (ITBP) ஒத்திவைத்ததால் லடாக்கில் சீனாவின் விரிவாக்கச் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியாமல் போனது; அதன் பின் வெகு விரைவில் கால்வான் திடீர்த் தாக்குதல் அரங்கேறியது. இரு நிகழ்வுகளிலும் எதிரியின் ‘நோக்கம்’ குறித்த “குறிப்பான உளவுத் தகவல்களைத்” தராமல் போய்விட்டதாக உளவு அமைப்புகளின் மீது குற்றம்சாட்டப்பட்டதுடன் இது அவற்றின் “தோல்வியாகவும்” பார்க்கப்பட்டது. இத்தகைய முடிவுகள் உளவுத் தோல்விகள் பற்றிய புரிதலோ இந்தியாவின் வியூகரீதியான உளவு அமைப்புகளின் வரம்புகள் பற்றிய அறிதலோ இல்லாத நிலையையே காட்டுகின்றன.

தவறான புரிதல்களும் தவறான கணிப்புகளும்
“ஒரு சூழ்நிலையைத் தவறாகப் புரிந்துகொள்வதால் தனது நலனுக்குப் பொருத்தமற்றதும் அதற்கு எதிரானதுமான நடவடிக்கைகளை அரசு (அல்லது அதன் ராணுவம்) எடுக்க நேரிடும் நிலை உளவுத் தோல்வியைக் குறிக்கும். இதனால் நடக்கும் விளைவுகளால் அரசுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறதா என்பதைக் காட்டிலும் அந்த அரசு அல்லது ராணுவம் மேற்கொள்ளும், மேற்கொண்டுவரும் தவறான செயல்பாடுகளே முக்கியமானவை” என உளவுத் தோல்வியை வல்லுநர்கள் அப்ராம் என். ஷல்ஸ்கியும் கேரி ஜே. ஷ்மிட்டும் வரையறுக்கிறார்கள். இவர்களது வரையறையின்படி, வியூகரீதியான தனது சூழ்நிலையை புரிந்துகொள்ளத் தவறும் அரசு எதிர்காலத்தில் தன் நலனுக்கு எதிராக மாறக்கூடிய கொள்கைகளைப் பின்பற்றும்போது உளவுத் தோல்வி நிகழ்கிறது. 1980களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கத்தை மத்திய அரசு தவறாகக் கணித்து, நண்பனுக்கும் எதிரிக்குமான வித்தியாசத்தை உணர முடியாமல் போனது இதற்கு ஒரு உதாரணம். இதன் காரணமாக, இலங்கை தொடர்பாக மத்திய அரசு பின்பற்றிய கொள்கைகள் பின்னர் அதன் நலனுக்கே எதிராக அமைந்ததுடன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கும் வித்திட்டன. இவ்வகை உளவுத் தோல்விகள் நிகழாதபோது – அதாவது வியூகரீதியான சூழல் பற்றிய உளவுக் கணிப்பு துல்லியமாக இருக்கும்போது – கிடைக்கும் உளவுத் தகவல்களின் மீது உரிய நடவடிக்கைகளை அரசும் ராணுவ அதிகாரிகளும் உடனடியாக எடுக்காமல் இருந்தாலும் எதிர்பாராத திடீர்த் தாக்குதல்கள் நிகழும்.

“எதிர்வினைகளின் தோல்வி” பற்றிய கருத்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படாததால் திடீர் தாக்குதல் நிகழ்வதில்லை என்பதைக் காட்டுகிறது. “தாக்குதலுக்கெதிரான நடவடிக்கை” என்பது கிடைக்கும் எச்சரிக்கையின் வாயிலாக நிகழும் “துல்லியமான கணிப்பு, சரியான முடிவு ஆகியவற்றின்” அடிப்படையில் அமைய வேண்டும். India’s Intelligence Culture and Strategic Surprises (இந்தியாவின் உளவுக் கலாசாரமும் வியூகரீதியான எதிர்பாராத நிகழ்வுகளும்) என்ற எனது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல, முன்கூட்டியே தாக்குதல் நடத்துவதால் ஏற்படும் ராஜதந்திர ரீதியிலான நஷ்டங்களுக்குப் பதில் பொறுமையைக் கடைப்பிடித்து அதன் மூலம் ஆக்கபூர்வமான சர்வதேச மதிப்பைப் பெறுவதையே இந்தியா பின்பற்றும் அரசியல்-வியூகரீதியான கலாசாரம் முக்கியமாகக் கருதுகிறது. ராணுவக் கொள்கைகளுக்கு எதிரியின் நோக்கம் பற்றிய துல்லியமான, குறிப்பிட்ட உளவுத் தகவல்கள் தேவை என்பதால் இந்தியாவின் வியூகரீதியான உளவு மதிப்பீடுகளின் முக்கியத்துவம் குறைவாகவே உள்ளன. குறிப்பாக, ஆக்கபூர்வமான ராஜதந்திர நிகழ்வுகளை அடுத்து இத்தகைய எதிர்பாராத தாக்குதல்கள் நடக்கும் சமயத்தில் குறிப்பான உளவறிதலுக்கான தேவை வலுப்பெறுகிறது. கார்கில் போருக்கு முன்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் சமரசப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தன. அதற்கு முன்பு நிகழ்ந்திராத வகையில் இந்தியப் பிரதமர் பாகிஸ்தானுக்குப் பேருந்தில் சென்றார். அதேபோல் இந்தியா, சீனாவுக்கிடையே பதற்றம் நீடித்தாலும் கால்வான் மோதலுக்கு முந்தைய அரசியல் சூழலானது “வூஹானில் உருவான உணர்வை” ஒட்டிப் பெரும்பாலும் ஆக்கபூர்வ நிலையில்தான் இருந்தது; 2018, 2019ஆம் ஆண்டுகளில் இரு நாட்டுத் தலைவர்களும் பலமுறை அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்து உரையாடியிருந்தனர். அரசியல் ரீதியான உறவுமுறை ஆக்கபூர்வமாக உள்ளதாகத் தோன்றும் சமயத்தில் எதிரியின் நோக்கம் குறித்த தெளிவான ஆதாரங்களை உளவு அமைப்புகள் தர வேண்டுமென இந்திய அரசு எதிர்பார்க்கிறது: பல காரணங்களினால் இது நிறைவேற முடியாத எதிர்பார்ப்பாக ஆகிறது.

முதலில், எதிரி நாட்டின் உளவை முறியடிப்பதும் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடிய அதன் தந்திரபூர்வமான நோக்கங்களைக் கண்டறிவதும் பெரும் சவாலான பணிகளாகும். இரண்டாவதாக, இந்தியாவில் ராணுவ உளவுத் தகவலுக்கு ராணுவமும் நாட்டின் வெளிவிவகாரங்கள் தொடர்பான உளவில் ஈடுபடும் ‘ரா’ Research and Analysis Wing - R&AW) அமைப்பும் கூட்டுப் பொறுப்பேற்கின்றன. இந்தியக் காவல்துறைப் பிரிவிலிருந்து தனக்கான பணியாளர்களைப் பெற்றும் இதர அரசு அதிகாரிகளைப் பயன்படுத்திக்கொண்டும் எதிரி நாடுகளைப் பற்றி ராணுவக் கோணத்தில் அல்லாமல் அரசியல், பொருளாதாரக் கோணத்தில் வியூகரீதியான ஆராய்ச்சி செய்யும் திறனை ரா பெற்றுள்ளது. உளவுத் துறையைப் (IB) பிரித்து உருவாக்கப்பட்ட நாட்டின் அந்நிய உளவு அமைப்பான ரா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் குறித்த நீண்டகால நிபுணத்துவத்தைப் பெற முயன்றுவருகிறது. (தற்போது IB உள்நாட்டு உளவுப் பணியில் மட்டுமே ஈடுபடுகிறது.) 1990களிலிருந்தே போதுமான பணியாளர்கள் இன்மை, நிதி ஒதுக்கீட்டில் போதாமை ஆகியவற்றால் ரா அமைப்பினால் தான் பெற வேண்டிய அளவுக்கு நிபுணத்துவம் பெற முடியவில்லை. என்றாலும், கொள்கைகள் உருவாவதற்கான வியூகரீதியான பின்னணியின்மீதுதான் ரா அமைப்பு கவனம் செலுத்துகிறது என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் பிற நாடுகளின் நோக்கங்கள் தொடர்பான தகவல்களில் ராணுவத்தின் பொறுப்பில் இருக்கும் ராணுவ உளவுப் பிரிவின் தோல்விக்கு ரா அமைப்பைக் குற்றம் சுமத்த முடியாது. உளவுத் தகவலை இறுதியில் பயன்படுத்த வேண்டிய இந்திய ராணுவமே ராணுவ உளவு ஆராய்ச்சிக்கும் (திரட்டப்படும் தகவல்களின் ராணுவ ரீதியான விளைவுகளைப் புரிந்துகொள்ளுதல், வியூகரீதியான உளவுத் தகவல்களைத் திரட்டுதல்) முக்கியப் பொறுப்பேற்கிறது. எனவே, உளவுத் தோல்விக்கு ரா அமைப்பைக் குற்றம் சாட்டுகையில் உளவு தொடர்பான பொறுப்புகளை இந்த இரு அமைப்புகளும் எப்படிப் பகிர்ந்துகொள்கின்றன என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கண்ணாடி பிம்பம்
விரிவாகச் சொன்னால், இந்தியத் துணைகண்டம் அணு ஆயுதங்கள் கொண்ட பகுதியாக ஆகிவிட்டதால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வெளிப்படையான போர் மூளும் சாத்தியக்கூறு இல்லையென்ற அனுமானத்தில் இந்திய ராணுவம் செயல்பட்டது. தீவிரவாதிகள் தொடர்ந்து “ஊடுருவ” உதவினாலும் ராணுவ ரீதியாக பாகிஸ்தான் “அத்துமீறாது” என்று ராணுவ வல்லுநர்கள் நினைத்தனர். “குறுகிய, விரைவானதொரு போரில் பாகிஸ்தான் ஈடுபடலாம்’ என 1998 அக்டோபரில் ரா அமைப்பு கணித்தாலும் அக்கணிப்பு தன் ஆராய்ச்சியுடன் முரண்பட்டதால் ராணுவம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியாவின் மீது தாக்குதல் தொடுக்கும் பாகிஸ்தானின் நோக்கம் (ஜெனரல் முஷரஃப் உள்ளிட்ட நால்வருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்) பற்றிய குறிப்பான தகவல்கள் ஏதுமில்லாததால் அந்த அனுமானத்தை மறுமதிப்பீடு செய்யுமாறு ராணுவத்திடம் கோர ரா அமைப்பினால் முடியவில்லை. இதனால்தான் கார்கில் சிகரத்தில் எதிர்பாராத தாக்குதல் நடைபெற்றதே தவிர, அங்கு உளவுத் தோல்வி நிகழவில்லை. மேலும், ரா அமைப்பின் மதிப்பீட்டை மதிக்காமல் இருந்தது ராணுவத்தின் தவறு. இந்தத் தவறால்தான் வியூகரீதியான சூழலையும் ராணுவம் தவறாகப் புரிந்துகொள்ள நேரிட்டது.

மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் தனது உளவாளிகள் தந்த 23 அறிக்கைகளையும் இடை மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கைகளையும் ராணுவம் அலட்சியப்படுத்தியது. ஆக, திடீர்த் தாக்குதலுக்குக் காரணம் ராணுவத்திடமிருந்து பொருத்தமான எதிர்வினைகள் வராததுதானே தவிர உளவுத் தோல்வி அல்ல. உளவுத் தகவல்களைத் திரட்டுதலில் உள்ள இடைவெளியை நிரப்பத் தானே முன்வந்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாகத் தனது “கண்ணாடி பிம்பத்தில்” ராணுவம் சிக்கிக்கொண்டுவிட்டதாகவே தெரிகிறது. தன்னுடைய தர்க்க ரீதியான ஆய்வு கூறுவதன்படிதான் எதிரி நாடு செயல்படும் என அனுமானித்துக்கொள்ளும் அணுகுமுறை இது. கார்கிலின் உறைகுளிர்ச் சூழலில் மலைச்சிகரத்தைக் கைப்பற்ற முயன்று வீரர்கள் உயிரிழப்பதை பாகிஸ்தான் விரும்பாது என்றும், ஆற்றுப்படுகை வழியே தீவிரவாதிகள் ஊடுருவ அது தொடர்ந்து உதவி செய்யுமே ஒழிய மலைப்பகுதி வழியே ராணுவம் உள்ளே நுழையாது என்றும் இந்திய ராணுவம் நினைத்தது. ரா அமைப்பு திரட்டிய வியூகரீதியான உளவு விவரங்களின் மீது கவனம் செலுத்தி, தனது அதிகாரிகளின் எச்சரிக்கைகளையும் மதித்திருந்தால் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை எதிர்க்க வான்வழி கண்காணிப்பு உட்படப் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டிருக்க முடியும். இந்திய ராணுவம் இவற்றைச் செய்யத் தவறியது. எதிர்வினைகளில் ஏற்பட்ட இந்தத் தோல்விக்கு உளவுத் துறை பலிகடாவாக ஆனது.

திட்டவட்டமான ஆதாரங்கள் இல்லை என்றாலும் கால்வான் திடீர்த் தாக்குதலும் கார்கில் தாக்குதல் போல்தான் இருந்தது. தாக்குதலுக்கு மூன்று மாதங்கள் முன்பே லடாக்கில் சீன ராணுவத்தின் நடமாட்டம் இருப்பதாக உளவுத் தகவல்கள் ராணுவத்தை எச்சரித்தன. ஆனால் எல்லைப் பாதுகாப்பில் இதன் விளைவு என்னவாக இருக்கும் என்று மதிப்பிட்டு உறுதியான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ராணுவம் தவறிவிட்டது. மேலே குறிப்பிட்டதைப் போல, சீனாவின் நோக்கத்தைப் பற்றிய குறிப்பான தகவல்கள் கிடைக்கவில்லை என்னும் புகார்களின் அடிப்படையில் உளவுத் தோல்வி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

நடவடிக்கைகளில் ஏற்பட்ட இந்தத் தோல்வி, கிடைத்த முன்னெச்சரிக்களின் அடிப்படையில் செயலாற்றுவதற்கான திறனற்ற நிலையையும் காட்டுகிறது. உளவுக்கும் எதிர்வினைகளுக்கும் இடையிலான வித்தியாசங்கள் வெறும் அறிவு சார்ந்தவை மட்டுமல்ல. வியூகரீதியான அல்லது ராணுவ ரீதியான எதிர்பாராத தாக்குதலுக்கு எதிரான கவசமாக உளவுத்துறைச் சீர்திருத்தங்கள் செயல்படாது என்பதையும் இந்த வித்தியாசங்கள் உணர்த்துகின்றன. வியூக ரீதியான உளவுத் தகவலின் வரம்புகள் தொடர்பான விழிப்புணர்வும் எதிரி நாடுகள் செயல்படும் போக்கு தொடர்பான தெளிவான புரிதலும் கொள்கை வகுப்போரிடம் இருப்பது மிக அவசியம். இவை இருந்தால் கண்ணாடி பிம்பம் போன்ற  அணுகுமுறையின் சவால்களைச் சமாளித்து, பல்வேறு சூழல்களில் எதிரி நடத்தக்கூடிய தாக்குதல்களுக்கான பொருத்தமான பதிலடி தருவதை உறுதி செய்ய முடியும்.

தீரஜ் பரமேஷா சாயா

Author

தீரஜ் பரமேஷா சாயா ஹல் பல்கலைக்கழகத்தில் ‘ஸ்கூல் ஆஃப் கிரிமினாலஜி, சோஷியாலஜி , போலீஸிங்’ துறையில் உளவு மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு பாடத்தில் விரிவிரையாளராகப் பணிபுரிந்துவருகிறார். 

(Tamil Translation by Aravindan D.I.) 
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்