இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் உள்ள சுவரோவியம் தெற்காசியாவில் சர்ச்சைக்குரிய பொருளாக மாறியுள்ளது. அகண்ட பாரதம் என்னும் கருத்தைக் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ள இந்தப் பண்டைய வரைபடம் தற்போதைய தெற்காசிய நாடுகளில் பெரும்பாலானவற்றைக் கடந்த காலத்தின் பெரிய, பிரிக்கப்படாத ஒரு நாட்டின் பகுதிகளாகச் சித்தரிக்கிறது. இந்தப் படத்திற்கு பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து எதிர்மறையான எதிர்வினைகள் வந்துள்ளன. இந்த வரைபடத்தின் உரிமைகோரல்கள் தங்கள் சுதந்திரத்திற்கும் இறையாண்மைக்கும் எதிரானவையாக உள்ளன என இந்த நாடுகள் கவலை தெரிவித்தன.
வரலாற்று ரீதியாக, தேசிய-அரசுகள் பலவும் தங்கள் அரசியல் உரிமைகோரல்களை முன்னிறுத்துவதற்குப் பண்டைய காலத்தை அடிப்படையாகக் கொண்ட வாதங்களை நாடுகின்றன. நிகழ்காலத்தின் அரசியல் உரிமைகோரல்களுக்கான நியாயப்பாட்டை வழங்கக் கடந்த காலக் கலாச்சாரக் கூறுகளைக் கையில் எடுக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, பண்டைய நாகரிகம் சார்ந்த அபிலாஷைகளுக்கும் இன அல்லது வரலாற்று அடிப்படையில் பிற நாடுகளின் நிலப்பரப்பின்மீதான உரிமைகோரலுக்கும் இடையேயான உறவைக் கவனியுங்கள். கடந்த காலத்தில் தன்னுடைய எல்லைகள் எவை என்பது பற்றிய கலாச்சார ரீதியான புரிதலிலிருந்து பெறப்படும் கருத்தின் அடிப்படையில் அமைந்த நிலப்பரப்பு சார்ந்த உரிமைகோரல்களை நாடுகள் வலியுறுத்துகின்றன. இந்தியாவின் தெற்காசியக் கொள்கை பண்டைய காலம் சார்ந்த அபிலாஷைகளின் அடிப்படையில் மாபெரும் மாற்றத்திற்கு உட்படுகிறதா? இது தெற்காசிய அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவைச் சிக்கலாக்க வாய்ப்புள்ளதா?
மார்ச் 2023 தேதியிட்ட International Affairs இதழில் சர்வதேச விவகாரங்கள் குறித்ததொரு ஆய்வுக் கட்டுரையை, ஷிபாஷிஸ் சாட்டர்ஜியும் நானும் இணைந்து எழுதினோம். பண்டைய காலத்தின் அடிப்படையில் தெற்காசியாவில் இந்தியா முன்வைக்கும் வாதங்களை, குறிப்பாக 2014முதல், இக்கட்டுரை ஆய்வுசெய்கிறது. வலதுசாரி அமைப்பான பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) எழுச்சியையும் பெரும்பான்மை வலிமை கொண்ட அரசை நடத்துவதன் மூலம் அரசியலில் அதற்குக் கிடைத்திருக்கும் இடத்தையும் கருத்தில் கொண்டு, இந்துத்துவத்தின் அடிப்படையிலான தெற்காசியக் கொள்கை என ஒன்று உள்ளதா என்னும் கேள்வியை நாங்கள் எழுப்பிக்கொண்டோம். அப்படி ஒன்று உண்மையிலேயே இருந்தால், தெற்காசியா தொடர்பாக இந்து வலதுசாரிகள் முன்வைக்கும் முக்கிய வாதங்கள் - அகண்ட பாரதத்தை மீட்டெடுப்பதற்கான நம்பிக்கை, விருப்பம் போன்றவை - இந்தப் பிராந்தியத்திற்கான இந்தியாவின் உத்திகளில் பிரதிபலிக்க வேண்டும்; இடம்பெற வேண்டும்.
நாகரிகம் தொடர்பான கதையாடல்களும் அதிகாரபூர்வமான செயல்பாடுகளும்
தெற்காசியாவில் இந்தியாவின் பண்டைய காலம் தொடர்பான வாதங்கள் பாஜக ஆட்சியில் இரண்டு மட்டங்களில் செயல்படுகின்றன. பாஜக ஆட்சியில் இருந்தாலும் இந்தியாவின் தெற்காசியக் கொள்கை உருவாக்கத்தில் இந்துத்துவக் கொள்கைக்கு அதிகாரபூர்வமான அங்கீகாரம் எதுவும் வழங்கப்படவில்லை. இருதரப்பு உறவுகளைப் பொறுத்தவரை, இந்தியாவும் அதன் தெற்காசிய அண்டை நாடுகளும் நீண்டகால நடைமுறைகளையே பின்பற்றுகின்றன. தற்போதைய அரசாங்கம் கலாச்சார, மதக் கூறுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், வெளியுறவுக் கொள்கையின் மூலம் இந்தியாவின் தனித்துவத்தை வலியுறுத்துவதற்கு அது மேற்கொள்ளும் முயற்சிகளும் புதியவை அல்ல. இந்த முயற்சிகள் இந்து மதத்திலிருந்து பெறப்பட்ட யோகா போன்ற ஆன்மீக, கலாச்சார நடைமுறைகளை ஊக்குவிப்பதில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றன. அதே நேரத்தில் பொதுவாக இந்து வலதுசாரிகளுடன் தொடர்புடைய வலிமையின் அடிப்படையிலான தேசியவாதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலான ஒருமைப்பாடு போன்ற சர்ச்சைக்குரிய சிக்கல்களை அரசு தவிர்க்கிறது. கலாச்சாரத்திற்கும் மதக் கூறுகளுக்குமான முக்கியத்துவம் வளர்ந்துவந்தாலும் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையின் மையக் கொள்கைகளிலிருந்து மாறிவிடவில்லை. தெற்காசிய அரசுகளுடனான இந்தியாவின் தொடர்பாடல்களில் மாற்றத்தைக் காட்டிலும் தொடர்ச்சியே அதிகம் காணப்படும் நிலையில், கலாச்சாரக் கூறுகள் பெரும்பாலும் கருத்தளவிலானதாவே இருக்கின்றன.
பண்டைய காலம் சார்ந்து தன்னை வரையறுக்கும் கருத்துக்களை முன்னிலைப்படுத்துவதும் அது தொடர்பாக அவ்வப்போது முன்வைத்துவரும் சொல்லாடல்களும் இந்தியாவின் கொள்கையாக மாறாவிட்டாலும், தெற்காசியப் பிராந்தியத்தில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. தெற்காசியா தொடர்பாக இந்தியாவின் இந்து வலதுசாரிகள் பண்டைய காலம் குறித்துக் கொண்டிருக்கும் உரிமைகோரலையே அகண்ட பாரதத்தைச் சித்தரிக்கும் இந்த வரைபடம் பிரதிபலிக்கிறது. இந்த உரிமைகோரலின்படி நவீன தெற்காசியாதான் பண்டைய இந்தியா. வரலாறு குறித்த இந்தப் பார்வையை விநாயக தாமோதர சாவர்க்கர், எம்.எஸ். கோல்வால்கர் போன்ற இந்துத்துவச் சித்தாந்தவாதிகள் தங்கள் எழுத்துக்களில் தெளிவாக முன்வைத்திருக்கிறார்கள். இந்திய நாகரிகம் முதலில் வெவ்வேறு மதங்களால் கலாச்சார ரீதியாகச் சிதைந்தது என்றும் இறுதியாக 1947 பிரிவினை நிலப்பரப்பு சார்ந்த சிதைவை ஏற்படுத்தியது என்றும் இந்த வரலாற்றுப் பார்வை கூறுகிறது. அகண்ட பாரதம் என்னும் படிமம் பண்டைய காலத்தின் இந்துப் பொற்காலம், பிறகு அது பாதிக்கப்பட்டது ஆகியவை குறித்த உணர்வு, இழந்த இடத்தை மீட்பதற்கான தீர்மானம் ஆகியவற்றைத் தாங்கியுள்ளது.
இது சக்தி வாய்ந்த படிமமாக இருந்தபோதிலும், முறையான கொள்கைக்குள் இதைப் பொருத்த வாய்ப்பில்லை. அகண்ட பாரதம் பற்றி ஆசைவயப்பட்டு அவ்வப்போது பேசுவதைத் தாண்டி இது போகாது. ஆளும் பாஜகவின் கருத்தியல் முன்னோடியும் மிகுந்த செல்வாக்குக் கொண்ட இந்து வலதுசாரி அமைப்புமான ஆர்எஸ்எஸ்ஸின் மிக முக்கியமான செய்தித் தொடர்பாளர்களும் இது கலாச்சார அளவிலான கருத்தே தவிர அரசியல் ரீதியானதல்ல என்றே கூறியிருக்கிறார்கள். பாகிஸ்தானுடனும் சீனாவுடனுமான நிலப்பரப்பு சார்ந்த மோதல்கள் இந்துத்துவத்தால் அல்ல; அதை மீறியே உயிர்ப்புடன் இருக்கின்றன. எல்லைகளை மாற்றியமைப்பதற்கு ஆர்எஸ்எஸ் திட்டமிடவில்லை; பாஜக அரசாங்கமும் அதைக் கணக்கில் கொள்ளவில்லை. அகண்ட பாரதம் என்னும் யோசனை தெற்காசியாவுக்கான கொள்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக, உள்நாட்டு மக்களையும் புலம்பெயர்ந்த இந்தியர்களையும் இலக்காகக் கொண்ட முழக்கம் இது.
பண்டைய காலம் குறித்த கதையாடல்களைத் தன் வெளியுறவுக் கொள்கையின் ஒரு அங்கமாக இந்தியா எப்போதும் பயன்படுத்திவந்திருக்கிறது. இதன் மூலம், உலக அமைப்பில் தனக்குரிய இடத்தைப் பெறுவதற்காக அது வாதிடுகிறது. பண்டைய நாகரிகம் பற்றிய இந்தியாவின் கற்பனை நேருவின் பார்வையிலிருந்து இந்துத்துவப் பார்வையில் வெகுவாக மாறிவிட்டது. உள்நாட்டில் உயர்ந்துவரும் இந்துத்துவத்தின் முக்கியத்துவம், உலக அரங்கில் நாகரிகம் சார்ந்த தன்னுடைய இடத்தை மீட்டெடுத்துப் புத்தெழுச்சி பெறும் இந்து தேசம் என்னும் கதையாடலுடன் நன்கு பொருந்துகிறது. அகண்ட பாரதம் உள்நாட்டில் பிரபலமான கதையாடலாக உள்ளது. ஆனால், இதைத் தாண்டிப் பிராந்திய அல்லது சர்வதேச அளவில் இந்தக் கொள்கையை முன்வைப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை. இத்தகைய கொள்கைகளை உள்நாட்டில் அதிகாரபூர்வ மட்டத்தில் விவாதிப்தற்கான அறிகுறிகளும் இல்லை. நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளுடனான தொடர்புகளிலும் அவை இடம் பெறவில்லை. தைவானிலும் தென் சீனக் கடலிலும் சீனா தன்னுடைய நிலப்பரப்பு சார்ந்த உரிமைகோரல்களை முன்னெடுக்கிறது. ஆனால், இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.
அரசியல் அரங்கில் தெற்காசியாவில் ஒழுங்கும் ஸ்திரத்தன்மையும் நிலவுவது இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகவே இருந்துவருகிறது. இந்திய அரசு பிற நாடுகளின் நிலப்பரப்பைக் கோருவது அல்லது தன் நிலப்பரப்பை விஸ்தரிப்பது ஆகியவற்றுக்கான எந்தத் தடயமும் வரலாறில் இல்லை. தெற்காசிய அண்டை நாடுகளில் பாகிஸ்தானைத் தவிரப் பிற நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளை இந்தியா தீர்த்துக்கொண்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உள்நாட்டு மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட வெளி உலகத்திற்கான திட்டமாக உள்ளது. பல அம்சங்களை ஆபத்தில் தள்ளக்கூடிய சர்வதேசச் சூழலில்தான் வெளியுறவுக் கொள்கையும் செயல்படுகிறது. ஒரு நாட்டின் இறையாண்மைக்குள் இயங்கும் உள்நாட்டு அரசியலின்மீது அந்நாட்டின் அரசு மிகவும் விரிவான அளவில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறது. சர்வதேசச் சூழலிலோ பிற அரசுகள், அமைப்புகள், பொருள், கருத்தியல் காரணிகள், சட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியாவில் உள்நாட்டு அரசியலில் மாற்றங்கள் இருந்தபோதிலும், அதன் வெளியுறவுக் கொள்கை மாற்றங்களைக் காட்டிலும் தொடர்ச்சியையும் ஒருமித்த கருத்தையுமே அதிகம் கொண்டுள்ளது. இந்தியா தன்னை ஒரு பொறுப்பான சக்தி என்று தொடர்ந்து கூறிக்கொள்கிறது. அண்டை நாடுகளுடன் இணைந்து பணிபுரிகிறது. எல்லைகளைத் தாண்டிய அபிலாஷை எதையும் அது கொண்டிருக்கவில்லை. வங்கதேசத்துடனான நில, கடல் எல்லைச் சிக்கல்களை இணக்கமாகத் தீர்த்துக்கொண்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை காலனித்துவ நீக்கம் தொடர்பான கடந்த காலப் பிரச்சினைகளில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. உலகளாவிய தெற்கின் குரலாகவும் அது தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. பொறுப்புள்ள சக்தியாக இந்தியா பெற்றிருக்கும் எழுச்சிக்கு முரண்பாடாகவே தெற்காசியாவில் பண்டைய காலத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய உரிமைகோரல்கள் அமையும்.
அதிகாரபூர்வமான மௌனம் அல்லது அலட்சியம் நிலவுவதால் இந்தக் கதையாடல்களுக்கு எந்த முக்கியத்துவமும் தாக்கமும் இல்லை என்று அர்த்தமல்ல. வெளியுறவுக் கொள்கை சார்ந்த நடத்தை என்பது அதிகாரபூர்வமான பரிமாற்றங்கள், ஊடக அறிக்கைகள், உச்சி மாநாடுகள் ஆகியவற்றுடன் மட்டும் நின்றுவிடுவதல்ல. பாஜக ஆட்சியில் முன்னெடுக்கப்படும் பண்டைய காலம் சார்ந்த முழக்கங்களால் தெற்காசியாவில் - அதிகாரபூர்வ மட்டத்தில் இல்லையென்றாலும் - சிக்கல்கள் நிலவுகின்றன. கலாச்சார ரீதியான மேன்மை தொடர்பாக இந்தியாவிலிருந்து எழும் எந்தவொரு உரிமைகோரலும் பாதுகாப்பின்மை, கண்டனம், அண்டை நாடுகளும் அதேபோல நடந்துகொள்ளுதல் முதலானவற்றைத் தூண்டுவது புரிந்துகொள்ளக்கூடியதுதான். இரண்டு மட்டங்களில் நிகழும் இந்தப் பரிமாற்றங்கள் பல சமயம் இந்தியாவின் சுய பிம்பம் பற்றியும் தெற்காசிய அரசுகளுடனான அதன் உறவாடல்களிலும் முரண்பட்ட கண்ணோட்டங்களையும் தாக்கங்களையும் உருவாக்குகின்றன.
எடுத்துக்காட்டாக, சமீபத்திய சர்ச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். சுவரோவியம் வெளியானதும், இந்தியாவின் நாடாளுமன்ற விவகார அமைச்சர், "உறுதிப்பாடு தெளிவாக உள்ளது - அகண்ட பாரதம்" என்று ட்வீட் செய்தார். உடனடியாக நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இதற்கு அதிகாரபூர்வமான எதிர்வினைகள் வந்தன. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இந்தச் சுவரோவியம் இரும்பு யுகத்தில் ஆட்சி செய்த மௌரியப் பேரரசின் கடந்த கால நிலப்பரப்பைக் காட்டுவதாகவும், தெற்காசியாவில் நிலப்பரப்பு சார்ந்த அபிலாஷைகள் ஏதும் இந்தியாவுக்கு இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். இது நடந்த சிறிது காலத்திற்குள் நேபாளத்தின் பிரதமர் புஷ்ப கமல் தஹால் இந்தியாவிற்கு வருகை தந்தபோது இது குறித்த ஆட்சேபணை எதுவும் எழுப்பப்படவில்லை. வங்கதேசம் தொடக்கத்தில் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே பிரச்சினை மீண்டும் எழவில்லை. இந்த ஆட்சேபணைகள் அதிகாரபூர்வமான கொள்கைப் பரப்பிற்குள் பிரவேசிக்கவில்லை என்றாலும், இந்தியா தன்னுடைய நிலையைத் தெளிவுபடுத்தித் தெற்காசிய அண்டை நாடுகளின் கவலைகளைத் தவிர்க்க வேண்டியிருந்தது.
தெற்காசியாவின் சமச்சீரின்மை
பண்டைய காலம் சார்ந்து இந்தியா வெளிப்படுத்தும் அபிலாஷைகள் வழக்கமான இருதரப்பு ஒப்பந்தங்களில் முக்கியமில்லை என்றால், இந்த ஆட்சேபணைகளை அவை ஏன் எழுப்ப வேண்டும்? பரந்த அளவில் இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது புவியியல் ரீதியாகவும் அதிகாரம் சார்ந்தும் தெற்காசியாவில் நிலவும் கட்டமைப்பு தொடர்பான காரணி. இந்தியா இந்தப் பிராந்தியத்தில் பெரிய சக்தியாக உள்ளது. அதிகாரம், பொருள்கள் அல்லது கலாச்சாரம் சார்ந்து இந்தியா தன்னுடைய ஆற்றலைக் காட்டிக்கொள்ள முனைந்தால் அது தெற்காசிய நாடுகளிடையே கவலைகளை எழுப்புகிறது. தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்பு ஏன் எளிதானதாக இல்லை என்பதற்கு அங்கு நிலவும் சமச்சீரற்ற தன்மை முக்கியக் காரணியாகும். இரண்டாவது காரணம் மிகுதியும் அரசியல் தன்மை கொண்டது. பண்டைக் காலத்தில் சிறந்து விளங்கியது குறித்த இந்தியாவின் இந்தப் பெருமிதச் சொல்லாடல் அதன் மக்களை இலக்காகக் கொண்டது. அதுபோலவே, அத்தகைய பெருமித வெளிப்பாடுகளுக்கான மற்ற தெற்காசிய நாடுகளின் எதிர்ப்புகளும் அந்நாடுகளின் உள்நாட்டு அரசியலுடன் பிணைக்கப்பட்டுள்ளன. தெற்காசிய நாடுகள் இந்தியா தெற்காசியாவைக் கலாச்சார ரீதியாகத் தன்வயப்படுத்திக்கொள்வதை அங்கீகரிக்காமல் விலகி நிற்க விரும்புகின்றன. இதன் மூலம் தங்களின் பிரத்யேக அடையாளத்தை அவை நிலைநிறுத்திக்கொள்கின்றன. தற்போது இந்தியாவுக்கு எதிராக அந்நாடுகளில் நிலவும் உணர்வின் பின்னணியில், இந்த நாடுகளின் அரசியல்வாதிகள் இந்தியாவின் பண்டைய காலம் சார்ந்த வாதங்களை எதிர்க்கக்கூடிய சுதந்திரமானதும் தொடர்ச்சியானதுமான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டியதன் தேவையை உணர்கிறார்கள். தங்களை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என அவர்களுடைய நாட்டு மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இது தெளிவுபடுத்துகிறது. பண்டைய காலம் சார்ந்த இந்தியாவின் உரிமைகோரல்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு, உள்நாட்டில் தனித்துவமான தேசிய அடையாளத்தை உருவாக்க உதவுகிறது. இந்த ஆட்சேபணைகள் தெற்காசியாவின் பிற நாடுகளில் ஆழமாக வேரூன்றிய பிரத்தியேக தேசியவாதம் பற்றிய கருத்துக்களைச் சுட்டிக்காட்டுவதுடன் அவற்றைப் பின்பற்றவும் செய்கின்றன.
பண்டைய காலம் சார்ந்து நுட்பமாக அல்லது வெளிப்படையாக இந்தியா வெளிப்படுத்தும் இத்தகைய உரிமைகோரல்கள் தெற்காசிய நாடுகளுடனான அதன் உறவுகளைப் பாதிக்குமா? இத்தகைய உரிமைகோரல்களும் எதிர் உரிமைகோரல்களும் இந்தியாவிற்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகளின் தன்மையைப் பாதிக்காமல் தொடரலாம். கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், தெற்காசிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் பொதுவான நலன்களும் பரஸ்பரச் சார்புகளும் இருக்கின்றன. தெற்காசிய நாடுகள் நடைமுறை சார்ந்த அணுகுமுறையைக் கொண்டுள்ளன. எனவே, பண்டைய காலம் சார்ந்து இந்தியா முன்வைக்கும் சொல்லாடல்களை மட்டும் வைத்து இந்தியாவைப் பற்றிய தங்கள் போக்கை அவை மாற்றிக்கொள்ளாது. இந்தியாவிடமிருந்து எப்போதாவது வெளிப்படும் இத்தகைய உரிமைகோரல்களுக்கு அந்நாடுகள் எதிர்வினையாற்ற வாய்ப்புள்ளது. ஆனால் இந்த எதிர்வினைகள் கொள்கையாக மாறுவதற்கான எந்தத் தடயமும் இல்லை. தெற்காசிய நாடுகளின் ஆதாரமான நலன்கள் இந்தியாவால் பாதிக்கப்படும் பட்சத்தில் இத்தகைய உரிமைகோரல்களின் அடிப்படையில் தங்கள் பாதுகாப்பின்மை சார்ந்து இந்தியாவுக்கு எதிரான அந்நாடுகளின் உணர்வுகள் தூண்டப்படலாம். கடந்த காலங்களில் நேபாளத்தில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் இந்தியாவின் பங்கு குறித்த குற்றச்சாட்டு அல்லது வங்கதேசத்துடனான நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகள் போன்றவை இந்தியாவுக்கு எதிராக அந்நாடுகளில் ஒருமித்த கருத்து உருவாவதற்கு உதவியது. அந்த நாடுகள் சீனாவை நோக்கிச் சாயும் போக்கையும் ஏற்படுத்தியது. இத்தகைய சந்தர்ப்பங்களில் இந்தியாவின் பண்டைய காலம் சார்ந்த உரிமைகோரல்களும் அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பின்மையும் இந்தியாவின் தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இந்தியாவுக்கு எதிரான ஒரு கருவியாக மாறும்.