எல்லைப் பாதுகாப்புக் கொள்கையில் மக்களின் இடம் எங்கே? இந்திய-வங்கதேச எல்லையிலிருந்து சில குறிப்புகள்

22/07/2024
IiT English Page

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய-வங்கதேச எல்லைக்கும் அதன் பக்கத்தில் இந்தியா கட்டியுள்ள வேலிக்கும் இடையில் உள்ள தனது நிலத்தில் நிராஷ் பர்மனால் விவசாயம் செய்ய முடியவில்லை. வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பதற்காக அவர் தனது வீட்டுக்கு அருகில் கஞ்சா வளர்க்கத் தொடங்கினார். சில ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்த பிறகு அது பிஎஸ்எஃப், காவல் துறை ஆகியோரின் கவனத்துக்கு வந்தது. அவர்கள் அவரது வீட்டைச் சோதனையிட்டு அவரது வயல்களை எரித்தார்கள். இப்போது அவரது கிராமத்தைக் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அதே எல்லையில் உள்ள மற்றொரு கிராமத்தில் வசிக்கும் ஹஷன் அலி சொந்தமாக நிலம் ஏதுமற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். கிராமத்தில் அவருக்கான வாழ்வாதார வாய்ப்புகள் ஏதுமில்லை. வட இந்தியாவில் கட்டுமானத் தளங்களில் வேலை, எல்லையோரக் கிராமங்களில் பல்வேறு கடத்தல் நடவடிக்கைகள் ஆகியவற்றில் மாறி மாறி ஈடுபட்டுவந்தார். இந்த இரண்டிலுமே மிகுந்த கஷ்டங்களும் ஆபத்துக்களும் இருந்தன. "ஊடுருவுபவர்கள்" என்ற சந்தேகத்தின் பேரில் வங்க மொழி பேசும் முஸ்லிம்கள் இந்தியா முழுவதும் விரோதப் போக்கை எதிர்கொள்வது அதிகரித்துவரும் நிலையில், அலி தனது கிராமத்திற்குத் திரும்பி, கடினமான கால்நடைத் தொழிலில் பணியாற்ற முடிவுசெய்தார். இவை இரண்டுமே இந்தியாவின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு போராடுவதைக் காட்டும் எடுத்துக்காட்டுகள். தேசியப் பாதுகாப்பு என்னும் அடிப்படையில் பிரத்யேகமாகவும் குறுகிய அணுகுமுறையிலும் ஆளப்படும் இந்தப் பகுதிகளில் நிலவும் யதார்த்தங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அண்மையில் வெளியான எனது புத்தகத்தில், A Thousand Tiny Cuts: Mobility and Security Across the Bangladesh-India Borderlands (வெளியீடு: யுனிவர்சிடி ஆஃப் கலிஃபோர்னியா பிரஸ் 2023/யோதா பிரஸ் 2024) வங்கதேச-இந்திய எல்லைப் பகுதியை இராணுவமயமாக்கியிருப்பதால் சமூக, பொருளாதாரத் தளங்களில் ஏற்படும் இழப்புகளைப் பதிவுசெய்திருக்கிறேன். இந்தியாவையும் வங்கதேசத்தையும் பல்வேறு தலைமுறைகளாக இணைத்துவரும் இந்தப் பகுதிகளில் நிலவும் யதார்த்தங்களை ஆராய்வதன் மூலம் இதைச் செய்திருக்கிறேன்.

"நல்ல" எல்லைப் பாதுகாப்புக் கொள்கையும் அதன் நடைமுறையும் என்பது என்ன? இந்தக் கேள்வி, சீனாவுடனான இந்தியாவின் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களின் "விரிவான வளர்ச்சியை" இலக்காகக் கொண்ட ‘துடிப்பான கிராமங்கள்’ என்னும் திட்டத்தின் அறிவிப்பினால் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. 1962இல் நடந்த சீன-இந்தியப் போருக்குப் பிறகு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தத் திட்டம் எதிரொலிப்பது விசித்திரம்தான். இன்று வளர்ச்சிப் பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதே எல்லைக் கிராமங்களில்தான் அப்போது நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்திய அரசாங்கத்தின் ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1985-90) முறையாக நிறுவப்பட்ட எல்லைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்கமாக அந்த நடவடிக்கை அமைந்தது. இந்தத் திட்டம் எல்லை மாவட்டங்களுக்குத் தேவையான "முக்கியமான உள்கட்டமைப்பு”க்குக் கூடுதல் நிதி வழங்குகிறது. பாதுகாப்பை முன்னிட்ட எதிர்வினைகளாக உருவாக்கப்படும் இந்த வளர்ச்சித் திட்டங்களின் ஆதாரமான நோக்கம் தேசியப் பாதுகாப்பு நலன்கள். இந்தத் திட்டங்கள் மக்கள் நலனைப் பற்றியோ அவர்களுடைய கவலைகள் பற்றியோ போதிய புரிதல் அற்றவை. இங்குள்ள மக்களுக்கு அனுதாபத்துடன் உதவும் பெருந்தன்மையான உணர்வுடன் இவை செயல்படுகின்றன. எல்லைப் பகுதிகளில் குடியிருப்பவர்களின் வாழ்க்கை அனுபவங்களுடனும் எதிர்பார்ப்புகளுடனும் இவற்றுக்குத் தொடர்பில்லை.

இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலுள்ள "நட்பார்ந்த" எல்லையைவிட இதை வேறு எங்கும் தெளிவாகப் பார்க்க முடியாது. 4,096 கிமீ நீளமுள்ள இந்த எல்லை, தனித்துவமான புவியியல், சமூக-கலாச்சாரப் பகுதிகளினூடே விரிந்து பரந்து நிற்கிறது. இந்த எல்லைப் பகுதியில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் (ஊடுருவல், கடத்தல்), பாதுகாப்பு உள்கட்டமைப்பு (எல்லை வேலி, ஒளி வெள்ளம், மனித வேலியாகச் செயல்படும் பிஎஸ்எஃப் போன்றவை) ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் அவ்வப்போது விவாதம் எழுகிறது. நாடாளுமன்ற கமிஷன் அறிக்கைகளில் இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இந்தியாவின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் ஒவ்வொரு 3.5 கிலோமீட்டருக்கும் ஒரு எல்லைப் புறக்காவல் நிலையம் என்ற எல்லைப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை அமைப்பதே பெரும்பாலான அரசாங்கக் கொள்கைகளின் குறிக்கோள். 1965இல் உருவாக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டது. இந்தப் படைதான் இந்த எல்லைப் பகுதிகளின் அன்றாட வாழ்வில் இந்திய அரசாங்கத்தின் முகமாக உள்ளது. சிறந்த வேலிகள், கண்காணிப்புக் கோபுரங்கள், ஒளி வெள்ளம், இரவு நேரத் தொலையுணர்வுக் கருவிகள், பிஎஸ்எஃப் படையினருக்கான சாலைகள் ஆகியவற்றைக் கொண்ட மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, எல்லைப் பகுதிகளில் வலுவான எல்லைப் பாதுகாப்பையோ அர்த்தமுள்ள வளர்ச்சியையோ ஏற்படுத்திவிடும் என்று சொல்வதற்கில்லை. உண்மையில், இந்த எல்லைப் பகுதிகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட இனவரைவியல் ஆராய்ச்சியில், அத்தகைய எல்லைப் பாதுகாப்பு ஆட்சி மக்களின் நலன்களுடன் நேரடியாக முரண்படக்கூடும் என்பதைக் கண்டறிந்தேன். அரசின் கொள்கைகள் இங்கே குடியிருப்பவர்களைப் புறக்கணிக்கின்றன. அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதுகின்றன அல்லது அவர்களின் வாழ்க்கை, நிலங்கள், அபிலாஷைகள் ஆகியவற்றைத் தேசிய பாதுகாப்பின் கட்டாயத் தேவைகளைக் காட்டிலும் கீழான நிலைக்குத் தள்ளுகின்றன.

விவசாயப் பொருளாதாரம், எல்லைக்கு அப்பால் உள்ள உறவுகள், மக்களுக்கும் இராணுவத்துக்குமிடையிலான உறவுகள் ஆகிய மூன்று அம்சங்களில் இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஒரு விவசாயப் பிராந்தியத்தின் பொருளாதார வாழ்வில் எல்லைப் பாதுகாப்பு ஏற்படுத்தும் தாக்கம் நிலத்தின் மதிப்பிழப்பில் மிகவும் தெளிவாகத் தெரியும். 1990களின் முற்பகுதியிலிருந்து எல்லை வேலி கட்டப்பட்டுப் புனரமைக்கப்பட்டுவருவதால், மேற்கு வங்கம், அஸ்ஸாமின் கீழ்ப்பகுதி ஆகிய இடங்களில் சாகுபடி நிலம் கணிசமாகக் குறைந்தது. இதற்கான இழப்பீடும் கிடைக்கவில்லை. நிலத்தின் விலை வீழ்ச்சியடைவது இராணுவமயமாக்கப்பட்ட எல்லையின் அவ்வளவாக வெளியில் தெரியாத, ஆனால் மிகவும் நாசகரமான நீண்டகால விளைவுகளில் ஒன்று. இது விவசாயிகளின் துயரத்தை மேலும் மோசமாக்குகிறது. எல்லைக்கும் இந்தியாவின் வேலிக்கும் இடையே உள்ள பல நூறு ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்வதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. என்னென்ன பயிர்களைப் பயிரிடலாம் என்னும் தேர்வில் கட்டுப்பாடு, வயல்களில் வேலை செய்வதற்கும் நீர் பாய்ச்சுவதற்குமான நேரங்களில் கட்டுப்பாடு, அடையாள ஆவணங்கள், பொருட்கள் ஆகியவற்றைச் சோதனையிடும் தொல்லைகள் போன்றவை விவசாயத்தை மேலும் கடினமாக்குகின்றன. இந்த விவசாய எல்லைப் பகுதிகளில் வாழும் சிறு, குறு விவசாயிகள், முக்கியமாக வங்கத்து முஸ்லிம்களும் ராஜ்பங்ஷி பிரிவினரும், விவசாயத்தில் ஈடுபடுவது மிகவும் கடினமானதாகியிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் ராஜ்பங்ஷிகள் அதிக எண்ணிக்கையிலான பட்டியல் சாதிக் குழுவினர். முஸ்லிம்கள் மேற்கு வங்க மக்கள் தொகையில் 30 சதவீதம் உள்ளனர். இரு குழுக்களும் வடக்கு வங்கத்தில் உள்ள எல்லை மாவட்டமான கூச் பெஹாரில் பெரும்பான்மையாக உள்ளனர். எனது நீண்ட கால இனவியல் ஆராய்ச்சியின் மையம் இந்த மாவட்டம்தான். இராணுவமயமாக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்பு நடைமுறைகள் இந்தப் பிராந்தியங்களில் ஒரு காலத்தில் செழித்திருந்த கிராமப்புறச் சந்தைகளுக்குச் சாவுமணி அடித்திருக்கிகிறது. புதிய சாலைகள் பிஎஸ்எஃப் எல்லைப் புறக்காவல் நிலையங்களுக்கும் எல்லை வேலிக்கும் இடையே உள்ள இணைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. உள்ளூர்த் தேவைகளுக்குப் பயன்படும் வகையில் உள்ள கிராமப்புறப் பாதைகள் பெரும்பாலும் அலட்சியப்படுத்தப்படுகின்றன. இருட்டிய பிறகு புதிய சாலைகளில் உள்ளூர் மக்கள் நடமாடத் தடை உள்ளது. அதிகாரப்பூர்வமானதும் அதிகாரப்பூர்வமற்றதுமான ஊரடங்கு உத்தரவுகள் சூழலில் அச்சத்தையும் ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இது கிராமப்புறப் பொருளாதாரத்தையும் சமூக வாழ்க்கையையும் கடுமையாகப் பாதிக்கிறது.

இந்திய எல்லைக்குள் மக்களின் அன்றாட நடமாட்டங்கள் பிஎஸ்எஃப் கண்காணிப்பின் இலக்காகிவிட்டதால், இராணுவமயமாக்கப்பட்ட எல்லைப்பகுதி சமூக வாழ்க்கையைப் பாதிக்கிறது. வடக்கு வங்காளத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் எல்லையின் மறுபுறத்தில் உறவினர்கள் உள்ளனர். எல்லை தாண்டிய திருமணங்கள் பிரிவினைக்குப் பிறகும் தொடர்ந்தன என்பதை என் புத்தகத்தில் கூறியிருக்கிறேன். இது அறியாமை அல்லது எல்லையை மீறுதலால் உருவானதல்ல. மாறாக, தொடர்ச்சியான போர்கள், இடப்பெயர்வு, அரசியல் ரீதியாக நிச்சயமற்ற நிலை ஆகியவற்றின் எதிர்வினையாக நிகழ்ந்தது. இத்தகைய கொந்தளிப்புகளுக்கு மத்தியில் சமூக ரீதியாகவும் பொருள் சார்ந்தும் கிடைக்கும் ஆதரவின் முக்கியமான வடிவமாக எல்லை தாண்டிய உறவு அமைந்ததால் மக்கள் அதில் அதிகம் ஈடுபட்டார்கள். 1947க்குப் பிந்தைய பல பத்தாண்டுகளில், காலனித்துவத்துக்குப் பிறகான வாழ்வின் மறுஉருவாக்கத்தின் ஒரு பகுதியாக, எல்லைப் பகுதிகளுக்குள் எல்லை தாண்டிய நடமாட்டம் உருப்பெற்றது. இதன் விளைவாக, ரகசியமாக எல்லையைத் தாண்டிச் செல்லும் ஆபத்தான போக்கு இங்கே நிலவுகிறது. பெரும்பாலும் எல்லையின் இருபுறமும் உள்ள பெண்கள்தான் திருமணங்கள், குழந்தைப் பிறப்பு, பண்டிகைகள், சடங்குகள் ஆகிய காரணங்களுக்காக இந்தப் பயணங்களை மேற்கொள்கிறார்கள். 1971இல் வங்கதேசம் சுதந்திர நாடாக ஆனபோது உருவான நட்புணர்வின் சூழலில் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையில் மட்டுமே சென்றுவர அனுமதிக்கும் சிறப்புப் பயண ஆவணமாக இந்திய-வங்கதேசக் கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. இந்த ஏற்பாடு 2013இல் நிறுத்தப்பட்டது. இந்தக் கடவுச்சீட்டை எந்த மாவட்டத் தலைமையகத்திலும் பெறலாம். இது "சட்டப்பூர்வமான" எல்லை தாண்டிய பயணத்திற்கான அதிகாரப்பூர்வமான சம்பிரதாயங்களை எளிதாகவும் சிக்கனமாகவும் ஆக்குகிறது. இந்த "நட்பார்ந்த" எல்லையில் தேசியப் பாதுகாப்புக் கொள்கைகள் தற்போது கடினமாகிவருவது, இரு தரப்பு உறவுகளுக்குப் பெரும் சுமையாக மாறியிருக்கிறது. இந்தச் சூழல் தேசிய அடையாளத்தையும் குடும்பத்தையும் எதிரெதிராக நிறுத்துகிறது. தங்கள் நெருங்கிய உறவுகளில் யாருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் மக்களை இது கட்டாயப்படுத்துகிறது.

இவையெல்லாம் போக, வங்காளத்தில் எல்லையோரத்தில் குடியிருப்பவர்களுடன் பிஎஸ்எஃப்-இன் உறவு முறிந்துவிட்டது. எல்லைப் பாதுகாப்பின் அன்றாட நடைமுறையில், வங்காள எல்லையில் வசிப்பவர்கள், முக்கியமாக முஸ்லிம்களும் தாழ்த்தப்பட்ட சாதியினரும், ரகசியமாகப் புலம்பெயர்ந்தவர்கள் அல்லது கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறார்கள், எல்லைக்கு அப்பால் அவர்களுக்கு இருக்கும் உறவுகளும் குற்றமாக்கப்படுகின்றன. நீண்டகால எல்லைக் கொள்கைகளும் நடைமுறைகளும் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றன. இராணுவமயமாக்கப்பட்ட யோசனைகள் சமூகப் பொருளாதார நலனையும் எல்லை தாண்டிய கலாச்சார வாழ்க்கையையும்விட எல்லைகளை மூடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இவை உள்ளூர்வாசிகளுக்கும் பிஎஸ்எஃப்-க்கும் இடையே எதிர்மறையான உறவைக் கட்டமைப்பு ரீதியாக உருவாக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, கடத்தலை நிறுத்துவதற்கான தங்கள் திட்டத்தின்படி பிஎஸ்எஃப் இந்திய எல்லைக் கிராமங்கள் முழுவதும் பலவிதமான கண்காணிப்புகளையும் காவல் நடைமுறைகளையும் நிறுவியுள்ளது. எல்லையிலிருந்து 15 கிலோமீட்டர்வரை நீளக்கூடிய பிஎஸ்எஃப் ரோந்துப் பகுதிகளுக்குள், குடியிருப்பாளர்கள் தங்கள் அன்றாடப் பயணங்களில் வயலிலிருந்து சந்தைக்கும், பள்ளியிலிருந்து வீட்டுக்கும் செல்லும் வழியில் விசாரிக்கப்பட்டுச் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் செல்லும்போதும் இப்படி நடக்கிறது. உள்ளூர் பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் விரிவானதொரு நிர்வாக அமைப்பு நடைமுறையில் உள்ளது. எல்லைப் பகுதிகளின் வயல்களிலிருந்து சந்தைகளுக்குச் செல்லும் அறுவடை செய்யப்பட்ட பயிர்கள், வீட்டு உபயோகத்திற்கான பொருட்களான மிதிவண்டிகள், மருந்துகள், வெளிப்புறச் சந்தைகளிலிருந்து எல்லைக் கிராமங்களுக்குக் கொண்டுவரப்படும் கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்தை இது இது நிர்வகிக்கிறது. பிஎஸ்எஃப்-இன் அனுமதியைப் பெறுவதற்கு எல்லைப் புறக்காவல் நிலையங்களுக்கு வெளியே உள்ளூர் மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். அதிகாரத்துடனான மக்களின் உறவு பதற்றமானதாக இருக்கிறது. தேசியப் பாதுகாப்பு நலன்களே குடிமைப் பணி அதிகாரிகளுக்கு முக்கியம். இதனால் உள்ளூர்வாசிகளின் உரிமைகள் கடுமையாகக் குறைக்கப்படுகின்றன. அவர்கள் தங்கள் சொந்த இடங்களிலேயே "இரண்டாம் தரக் குடிமக்கள்" போல உணர்கிறார்கள். எல்லைப் பகுதிகளில் காவல் பணியில் இருக்கும் பிஎஸ்எஃப் நடத்திய கொலைகள் பற்றி மனித உரிமைக் குழுக்கள் விரிவாகப் பதிவுசெய்துள்ளன. எல்லைகளில் உள்ள விவசாயப் பகுதிகளில் இராணுவமயமாக்கலால் ஏற்படும் தாக்கம் வன்முறைச் சம்பவங்களைத் தாண்டியும் விரிந்திருப்பதை என் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். கட்டமைப்பு சார்ந்த இந்த விரோதப் போக்கு, வங்காள எல்லைப் பகுதிகள் "நட்பார்ந்த" எல்லையாக இருந்தாலும்கூட பிஎஸ்எஃப் பணியாளர்களை அங்கு நியமிப்பதைக் கடினமாக்குகிறது. அனைத்து மட்டங்களிலும் உள்ள பணியாளர்கள் தங்கள் அனுபவத்தில் மிகவும் பதற்றமான, அபாயகரமான பணியிடங்களில் ஒன்று என்கிறார்கள். விரோதப் போக்கு, பல ஆண்டுகளாகத் திரண்ட மனக்கசப்பு ஆகியவற்றின் பின்னணியில் பார்க்கும்போது, இலவச மருத்துவ முகாம்கள், பள்ளி மாணவர்களுக்கான பொருட்களை வழங்குதல் போன்ற மக்களை நெருங்குவதற்கான திட்டங்கள் மூலம் பிஎஸ்எஃப் எடுக்கும் "குடிமை நடவடிக்கையை" நோக்கிய முயற்சிகள் நேர்மையற்றவையாகவும் சொற்பமானவையாகவும் தோன்றுகின்றன.

தேசியப் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக எல்லையோர மக்களின் நலனையும் நல்வாழ்வையும் நிறுத்தும் எல்லைப் பாதுகாப்புக் கட்டமைப்பானது நீடித்து நிற்கக்கூடியதல்ல என்பதோடு எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது. எல்லைப் பகுதிகளை மக்களே இல்லாத, எப்போதும் விரிவடைந்துவரும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு தேவைப்படும் இடமாகப் பார்க்கும் அணுகுமுறை உள்ளூர் மக்களின் இருப்பைத் தடையாகவும், இந்த இடத்தைப் புனிதமானதாகக் கருதிப் பாதுகாக்க வேண்டும் எனவும் கருதுகிறது. அதற்கு மாறாக, வரலாற்று ரீதியாகவும் சமூகப் பொருளாதார ரீதியாகவும் இணைக்கப்பட்ட இடமாக இதைக் கருத வேண்டும். இந்த இடத்தை அதன் சொந்த அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். மேலிருந்து கீழே பார்க்கும் வளர்ச்சி குறித்த கண்ணோட்டங்கள், எல்லையில் வசிப்பவர்களை தேசியப் பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமே முக்கியமானதாகக் கருதுகின்றன. இந்த அணுகுமுறை அவர்களைச் செயலற்றவர்களாகவும் உதவி பெற வேண்டியவர்களாகவும், தேசியவாதத்தை அறிய வேண்டியவர்களாகவும் கருதுகிறது. இது உண்மைக்குப் புறம்பானது; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளும் நடைமுறைகளும் மக்களை அவர்களின் சொந்த இடங்களிலும் வாழ்வாதாரப் பணிகளிலும் தலைமுறை தலைமுறையாக அவர்கள் வாழ்ந்துவரும் வீடுகளிலும் உறவுகளிலும் பலவீனப்படுத்தி அவர்களைக் குற்றவாளிகளாக்கும் நிலையில் எந்த உள்கட்டமைப்பும் நல்வாழ்வையும் தேசப்பற்றையும் உருவாக்கிவிட முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லைப் பகுதிகளில் உள்ள சாதாரணக் குடியிருப்பாளர்களின் எல்லை தாண்டிய சமூகப் பொருளாதார உறவுகள் குற்றமாக்கப்பட்டுக் குறைக்கப்பட்டால், அந்த எல்லை "நட்பார்ந்த" இடமாக இருக்க முடியுமா?

சஹானா கோஷ்

Author

சஹானா கோஷ் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் உதவிப் பேராசிரியராக உள்ளார். அவரது புத்தகமான, A Thousand Tiny Cuts: Mobility and Security Across the Bangladesh-India Borderlands (University of California Press 2023; Yoda Press 2024), வடக்கு வங்காளத்தில் எல்லைக்கு இருபுறமும் நன்கு இணைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து தேசிய எல்லைகளை உருவாக்குவதைக் கூறுகிறது. அந்த இடங்கள் இராணுவமயமாக்கப்பட்டதால் சமூக உறவுகள், விவசாயப் பொருளாதாரம், பாலின இயக்கம், குடியுரிமை ஆகியவை எவ்வாறு பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன என்பதைச் சொல்கிறது. 

(Tamil Translation by Aravindan D.I.) 
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்