கிழக்கு எல்லையில் இந்தியாவுக்கு வங்கதேசத்தின் சவால்

16/09/2024
IiT English Page

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளையடுத்து வங்கதேசம் சமூக-அரசியல் கொந்தளிப்பில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. 15 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்துவந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பரவலான எதிர்ப்புகளின் விளைவாக நாட்டை விட்டு வெளியேறினார். வங்கதேசத்து நிகழ்வுகளின் விளைவுகள் இந்தியாவில் அதன் எல்லைகளில் உணரப்படுகின்றன. அவாமி லீக் அரசு வெளியேற்றப்பட்ட நிலையில் இந்தியா ஒரு கூட்டாளியை இழந்திருக்கிறது. இந்து சிறுபான்மையினர் மீது நடப்பதாகச் சொல்லப்படும் அட்டூழியங்களுக்கு எதிராக இந்தியாவில் போராட்டங்கள் நிகழ்கின்றன. தொடர்ந்து மாறிவரும் இந்தச் சூழ்நிலையில் இந்தியா இப்படிப் பல சவால்களை எதிர்கொள்கிறது. அவற்றில் எதையும் எளிதில் தீர்க்க முடியாது. இந்தச் சூழ்நிலையில், வங்கதேசப் பிரச்சினையை அவாமி லீகுக்கும் பிறருக்கும் இடையிலான போராட்டம் என்னும் இருமையாகப் பார்க்கும் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வதும், வேகமாக மாறக்கூடிய பன்முகத்தன்மை கொண்ட வெளியுறவுக் கொள்கைக்கான இடத்தை உருவாக்குவதும் இந்தியாவுக்கு முக்கியமானதாகிவிட்டது.

கசிந்து பரவும் விளைவுகள்
புரட்சிக்குப் பின்பு கட்டமைப்புச் சீர்திருத்தங்கள், ஜனநாயகச் செயல்முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவது போன்ற சவால்களை வங்கதேசம் எதிர்கொண்டிருக்கிறது. அண்டை நாட்டில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பால் தனது புவிசார் அரசியலிலும் புவிசார் பொருளாதாரத்திலும் ஏற்பட்டுள்ள சேதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.

ஆகஸ்ட் 5 அன்று ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசாங்கத்தின் வெளியேற்றப்பட்டது. 1971இல் பாகிஸ்தானிலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுக்குப் பொதுத்துறை வேலைகளில் 30 சதவீதம் ஒதுக்கிய இடஒதுக்கீட்டுக் கொள்கையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு எதிராக நடந்த நாடு தழுவிய மாணவர் போராட்டத்தால் இந்த வெளியேற்றம் துரிதப்படுத்தப்பட்டது. எதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கை ஆளும் அவாமி லீகின் உறுப்பினர்களுக்கு அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நிறுவன அளவிலான முன்னுரிமையை அளிப்பதன் மூலம் அவர்களுக்குச் சாதகமாக இருப்பதைத் தவிர வேறொன்றையும் சாதிக்கவில்லை. எனவே இது பாரபட்சமானது என்று அவர்கள் கருதினார்கள். ஜூலையில் நடந்த ஆரம்ப கட்டப் போராட்டங்கள் அமைதியாகவே நடந்தன. எனினும் மாணவர்களுக்கு எதிராக அளவுக்கதிகமான சக்தியை அரசு பயன்படுத்தியது. போராட்டக்காரர்களை "ரசாக்கார்கள்" (1971 வங்காளதேச விடுதலைப் போரின் பின்னணியில் துரோகிகள்) என்று முத்திரை குத்தி இழிவுபடுத்தியது. இந்தப் போக்கு மாணவர்களின் போராட்டத்தை ஹசீனாவின் கடுமையான நடத்தைக்கு எதிரான நாடு தழுவிய இயக்கமாக மாற்றியது. பாதுகாப்புப் படைகள், முக்கியமாக ராணுவம், எதிர்ப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்தது ஹசீனாவையும் அவரது அரசாங்கத்தையும் பலவீனமாக்கியது. இறுதியில் அவர் இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தியாவுக்கு நெருக்கமானதாக அறியப்பட்ட ஹசீனா அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது, வங்கதேசத்திற்கு மேற்கில் உள்ள அண்டைநாடான இந்தியாவில் சில விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக, சமீப ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் நிறைந்திருக்கும் தெற்காசியப் பகுதியில் ஓரளவு நிலையான ஒரு கூட்டாளியை இந்தியா இழந்திருக்கிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற நேரடி அச்சுறுத்தல்களால் இந்தியா தனது கருத்தியலுக்கும் தேசியப் பாதுகாப்புக்குமான சவால்களைத் தொடர்ந்து எதிர்கொண்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே இருக்கும் போட்டியினால் மூலோபாய ரீதியிலான சங்கடங்களும் உருவாகின்றன. இது மாலத்தீவுகளிலும் நேபாளத்திலும் தெளிவாகத் தெரிகிறது. இந்த விரிவான புவிசார் அரசியல் இயக்கவியலின் பின்னணியில், ஒப்பீட்டளவில் மதச்சார்பற்றதும் ஜனநாயகத் தோற்றம் கொண்டதுமான ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்திருப்பது, "அண்டை நாட்டுக்கு முக்கியத்துவம்" என்று சொல்லப்படும் இந்தியாவின் கொள்கையில் உள்ள குறைபாடுகளின் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. அதன் பிராந்தியக் கொள்கைகளுக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் சவால்களை ஏற்படுத்தியிருக்கிறது.

வேறுபாடுகள் இருந்தபோதிலும், வங்கதேச அரசு, "இந்தியாவின் பாதுகாப்பு இலக்குகளைத் திறம்படச் செயல்படுத்தும்" அரசாக இருந்தது. தனது எல்லைகளுக்குள் இஸ்லாமியத் தீவிரவாதத்தையும் கிளர்ச்சிகளையும் ஒடுக்குவதில் இந்தியாவுக்கு உதவியாக இருந்தது. வங்கதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் இருந்தபோதிலும் அங்கே தற்போது அரசியலில் வெற்றிடம் உள்ளது. வங்கதேசத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய புதிய அரசு இந்தியாவுக்கு அந்த அளவுக்கு ஆதரவு காட்டுவதற்கான வாய்ப்பு குறைவு. இந்தச் சூழ்நிலை இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்புத் திறன்களைப் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தியாவுடன் நட்பாக இருந்த அவாமி லீகின் ஆட்சி அகற்றப்பட்டது, இந்தியாவின் பிராந்தியப் போட்டியாளர்களான சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்தின் அரசியல் நிலப்பரப்பைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைப்பதற்கான அதிக வாய்ப்பை உருவாக்கியுள்ளது. வங்கதேசத்தின் விவகாரங்களில் இந்தியாவின் செல்வாக்கு கருத்தியல் ரீதியாக அடிவாங்கியதோடு மட்டுமல்லாமல் ஆழமான நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்திரா காந்தி கலாச்சார மையம் சூறையாடப்பட்டது. வங்கதேசத் தலைநகரமான டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் முழுவதுமாக முடக்கப்பட்டது. 2021இல் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசம் சென்றபோது காபூலில் காணப்பட்டதைப் போன்ற காட்சி இது.

இந்த விவகாரங்களின் புவியியல்-பொருளாதாரப் பரிமாணங்களைப் பொறுத்தவரை, வங்கதேசத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசும் எதிர்காலத்தில் அமையக்கூடிய அரசும் நாட்டின் பொருளாதாரக் கூட்டாண்மைகளில் இந்தியாவைத் தாண்டிப் பன்முகத்தன்மையைக் கொண்டுவரும் என்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை இந்தச் செயல்முறை இரண்டு வழிகளில் நடைபெற வாய்ப்புள்ளது. ஒன்று, சூரிய மின்னாற்றல் பண்ணைகளை நிறுவுவதற்காக இடைக்கால அரசாங்கம் சீனாவை அணுகியது போன்ற அவாமி லீக்கின் தொடர்ச்சியைக் குறிக்கிறது.  மற்றொன்று, வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) இந்தியத் தயாரிப்புகளைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்தது போன்ற இந்திய எதிர்ப்பு உணர்வுகளை அதிகம் கொண்டதாக இருக்கலாம். வங்கதேசத்தின் அரசியல் கொந்தளிப்பு, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்களை உற்பத்தி செய்யும் மரிகோ, கோத்ரெஜ், டாபர் உள்ளிட்ட பன்னிரண்டு நிறுவனங்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் விநியோகச் சங்கிலி இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றின் பங்கு விலைகளும் வருவாயும் குறைவதற்கான அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறது.

கட்டமைப்பு மட்டத்தில், ஷேக் ஹசீனாவின் காலத்தில் இந்தியாவுடன் மேற்கொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய BNP அழைப்பு விடுத்துள்ளது. அவை ரகசியமானவை, அநீதியானவை என்று அது கூறுகிறது. இந்தியாவுடனான அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை “வங்கதேசத்திற்குப் பலனளிப்பவை அல்ல” என்று சொல்லி ரத்துசெய்ய இடைக்கால அரசாங்கம் பரிசீலித்துவருகிறது. உணவுப் பொருட்கள், பருத்தி நூல், எரிசக்தி ஆகியவற்றுக்கு வங்கதேசம் இந்தியாவைச் சார்ந்திருப்பதால் இந்த விலகல் போக்கு நீடிப்பதற்கான வாய்ப்பில்லை. ஆனால் வங்கதேசத்தில் இந்தியாவின் பொருளாதாரச் செல்வாக்கு குறைவது புதிய யதார்த்தமாக மாற வாய்ப்புள்ளது. இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, நிலத் துறைமுகங்கள் விரைவாகத் திறக்கப்பட்டு, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை மீண்டும் சீரமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அசுகஞ்ச்-அகௌரா நான்கு வழிச்சாலை போன்ற முக்கிய இணைப்புத் திட்டங்கள் வங்கதேசத்தின் அரசியல் கொந்தளிப்பு காரணமாகப் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டங்கள் மீண்டும் தொடங்கும் பட்சத்தில் எவ்வளவு விரைவாகத் தொடங்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெறால், வங்கதேசத்தில் யார், எப்போது ஆட்சிக்கு வருவார்கள் என்பதைப் பொறுத்தே இது அமையும்.

வங்கதேசத்தின் நிலைமை இந்தியாவுக்கான கட்டமைப்பு சார்ந்த கவலைகளை எழுப்புவதோடு, இந்தியாவின் உள்நாட்டு அரசியலையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக, மிகுதியும் மதச்சார்பற்ற தன்மை கொண்டிருந்த ஹசீனா அரசாங்கத்தைத் தூக்கியெறிந்ததும் சிறுபான்மை இந்துக்கள், அவர்களது சொத்துக்கள், நிறுவனங்களைக் குறிவைக்கும் வன்முறை, காழ்ப்புணர்ச்சி ஆகியவையும் இந்தியாவில் அரசியல் சார்ந்த கவலைகளையும் மக்களின் எதிர்வினைகளையும் உருவாக்கியுள்ளன. வங்கதேசத்தில் ஆகஸ்ட் 5முதல் 10வரை சிறுபான்மையினருக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், ஆகஸ்ட் 15 அன்று தனது சுதந்திர தின உரையின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்தின் சிறுபான்மைச் சமூகத்தின் அவலநிலை குறித்த தனது அரசாங்கத்தின் அக்கறையைப் பதிவுசெய்தார். அதே நேரத்தில் இந்திய ஆதரவுக் குழுக்கள், குறிப்பாக வலதுசாரிச் சாய்வு கொண்டவை, வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பிரச்சினையை முன்னிட்டு அணிதிரள முற்பட்டன. அஸ்ஸாமில் உள்ள வங்கதேசத் தூதரகத்திற்கு அணிவகுத்துச் செல்வது, கோரிக்கைகளின் பட்டியலுடன் மகாராஷ்டிரத்திலும் திரிபுராவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. வங்கதேச நிலைவரம், இந்தியாவின் மாநிலத் தேர்தல் சொல்லாடல்களுக்குள்ளும் நுழைந்திருக்கிறது. அண்டை நாட்டின் நெருக்கடி இந்தியாவின் சமூக, அரசியல் வர்க்கங்களின் கவனத்தை எந்த அளவிற்கு ஈர்த்துள்ளது என்பதை இது காட்டுகிறது. இந்தியாவில் நிகழும் இதுபோன்ற எதிர்வினைகள் வங்கதேசத்தில் கவனிக்கப்படாமல் போக வாய்ப்பில்லை என்பதால் வங்கதேச விவகாரத்தில் இந்திய அரசு மிகவும் நுட்பமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. குறிப்பாக, டாக்காவில் உள்ள தலைவர்கள் வங்கதேச நிலவரத்தை ஆழ்ந்த கவனத்துடன் அணுகுமாறு வற்புறுத்தும் நிலையில் இது மேலும் அவசியமாகிறது.

அனைவருடனும் நட்புப் பாராட்டும் கொள்கை
வங்கதேசம் தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கை குறுகிய பார்வை, கள நிலவரத்தை வெறும் இருமைகளாக நோக்கும் அணுகுமுறை ஆகியவற்றைக் கொண்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. அவாமி லீக் கட்சியை அதிகமாகச் சார்ந்திருப்பதற்கான விலையை இந்தியா செலுத்துவதாகத் தெரிகிறது. வங்கதேசத்தில் உருவாகிவரும் நிலவரங்களில் இந்தியாவுக்கான நட்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. களத்தில் உள்ள உணர்வுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை. இந்தியா ஹசீனாவின் கடுமையான ஆட்சிக்கு ஒரு முறை அல்ல, மூன்று முறை உறுதுணையாக இருந்ததாகக் கருதப்படுகிறது. வெளியேற்றப்பட்ட வங்கதேசப் பிரதமருக்கு இந்தியாவில் தொடர்ந்து அடைக்கலம் கிடைப்பதாகக் கூறப்படுவது வங்கதேசத்தில் இந்தியாவைப் பற்றி நிலவும் எதிர்மறையான கருத்துக்களுக்கு வலு சேர்க்கக்கூடும். இதனால், வங்கதேசத்தில் செல்வாக்குடன் உள்ள அரசியல் சக்திகளுடன், குறிப்பாக பிஎன்பியுடன் இணைந்து செயல்படுவது இந்தியாவுக்குக் கடினமாக இருக்கும். BNP, இந்தியக் கருத்தியலுடனோ இந்திய நலன்களுடனோ ஒத்துப்போகக்கூடியதாக அறியப்பட்ட கட்சி அல்ல. வெளியேற்றப்பட்ட அவாமி தலைவர், அவரது கட்சி, அவரால் பயனடைந்ததாகக் கருதப்படுபவர் (இந்தியா) ஆகியோர்மீது பொதுமக்களிடத்திலும் அரசியல் களத்திலும் கடுமையான கோபம் நிலவுகிறது. எனவே, இதுவரை பின்பற்றிவந்த ‘இது அல்லது அது’ என்னும் அணுகுமுறையைக் கைவிட்டுவிட்டு, வங்கதேசத்தின் சிக்கலான சூழ்நிலையில் மேலும் வேகமான, அனைவருடனும் நட்புப் பாராட்டும் கொள்கையைக் கைக்கொள்வது இந்தியாவுக்கு நலன் பயப்பதாக இருக்கும். இதற்காக வங்கதேசத்தில் தனது முன்னாள் கூட்டாளிகளையோ தனது சொந்த நலன்களையோ இந்தியா முழுமையாகக் கைவிட வேண்டிய அவசியமில்லை. மாறாக, அவாமியையும் மற்றவர்களையும் எதிரும் புதிருமாக நிறுத்திப் பார்க்கும் வழக்கத்திலிருந்து தன்னுடைய இருதரப்புக் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் களத்தில் உள்ள எதிர்ப்புகளை நன்கு புரிந்துகொள்ள வங்கதேசத்தின் இதர அமைப்புகளையும் அணுகுவதன் மூலம் தன் தளத்தை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இந்தக் கண்ணோட்டம் சுட்டிக்காட்டுகிறது. 

சயனிகா சக்சேனா

Author

சயனிகா சக்சேனா பிக் டெக் அமைப்பின் உளவுத்துறை ஆலோசகர். அவர் முன்வைப்பவை அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள்.

(Tamil Translation by Aravindan D.I.) 
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்